Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 22 மார்ச், 2013

73 கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



ஜாமின் உத்தரவாதம் வழங்க யாரும் முன்வராததால் தமிழ்நாட்டில் உள்ள சிறையில் வாடும் 73 விசாரணை கைதிகளை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இவ்வகையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும்படி சட்ட உதவி குழுவினருக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, சட்ட உதவி குழுவினர் கொடுத்த தகவல்களின்படி, ஜாமின் வழங்கியும் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வராததால் 272 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளது தெரிய வந்தது. இவர்களைப் பற்றிய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப, 73 கைதிகளை சொந்த ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்


தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜே.எல்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆசிரியர் தகுதி தேர்வு
தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. கடந்த முறை நடந்த இந்த தேர்வில் குறைந்த அளவே ஆசிரியர்கள் தேர்வு பெற்றனர். அவர்கள், அரசு பள்ளிகளிலேயே பணியில் சேர்ந்து விடுகிறார்கள். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மொத்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.

உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது.

இந்த உண்ணாவிரத்துக்கு முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் டி.இ.எஸ்.நெய்னா முகமது, மாநில தலைவர் ஆராவமுதன், மாவட்ட தலைவர் அசன் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில உதவி பொதுச்செயலாளர் தாயப்பன் வரவேற்று பேசுகிறார்.

உண்ணாவிரதத்தை நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ் தொடங்கி வைக்கிறார். உண்ணாவிரதத்தில் முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யது அகமது கபீர், பொருளாளர் முகமது ஷாபி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுசெயலாளர் போத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாநில உதவி பொதுச்செயலாளர் பி.தாயப்பன், துணை தலைவர்கள் எம்.கணேசன், எஸ்.சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் பழைய நிலையே நீடிக்கும் பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி அறிவிப்பு


சிவில் சர்வீசஸ் மெயின் (முதன்மை) தேர்வில் 4 புதிய மாற்றங்களை இந்த ஆண்டு முதல் அமல்படுத்துவதாக மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி.) கடந்த 5–ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது.

இதன்படி, சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டது. பிராந்திய மொழியில் மெயின் தேர்வை எழுத வேண்டுமானால், அந்த மொழி வழியில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே மெயின் தேர்வில் அந்த மொழி இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்க முடியும்.

மூன்றாவதாக, குறிப்பிட்ட பிராந்திய மொழியில் தேர்வு எழுத குறைந்தபட்சம் 25 பேர் இல்லாவிட்டால், அந்த மொழியில் தேர்வு எழுத அனுமதி கிடையாது. அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே மெயின் தேர்வு எழுதியாக வேண்டும்.

நான்காவதாக, ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டு விட்டது. புதிதாக, கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கொண்ட 100 மதிப்பெண்களுக்கான ஆங்கிலத் தேர்வு கொண்டு வரப்பட்டது.

கடும் எதிர்ப்பு:
இந்த தேர்வு முறை மாற்றங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும், வடஇந்திய தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 15–ந்தேதி, அந்த தேர்வு முறை மாற்றத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை மந்திரி வி.நாராயணசாமி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பிராந்திய மொழியில் எழுதலாம்:
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் ஏற்கனவே இருந்த நிலையே நீடிக்கும் என்று மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சிவில் சர்வீசஸ் தேர்வு முறை மாற்றங்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கவலைகளை மத்திய அரசு ஆய்வு செய்தது. அதன்படி, ஏற்கனவே இருந்ததுபோல், அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு பிராந்திய மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மெயின் தேர்வை எழுதலாம்.

100 மதிப்பெண்களுடன் கூடிய ஆங்கில கட்டுரைத்தாள் நீக்கப்படுகிறது. இந்திய மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்தில் தலா 300 மதிப்பெண்கள் கொண்ட தாள்கள் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

விருப்பப்பாட நிபந்தனை ரத்து:
இனிமேல், கட்டுரைத்தாள் 250 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். அதை ஆங்கிலத்திலோ அல்லது தாங்கள் விரும்பிய வேறு மொழியிலோ எழுதலாம்.

இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க, அந்த மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள், பல்வேறு தரப்பினருடன் அரசு நடத்திய ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 21 மார்ச், 2013

தமிழக காங்கிரஸ் கட்சி உடையுமா ?


இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து ஐநா மன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசிற்கு எதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் , இலங்கை அரசு தமிழ் மக்களின் மீது செய்த குற்ற செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை பற்றி இந்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசிற்கு திமுக அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது .

திமுக தலைமை எடுத்த முடிவினை அக்கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் வெடிவெடித்து ,இனிப்பு வழங்கி வரவேற்று கொண்டாடினர் .ஆனால் ,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு மிக வேதனையையும் ,அதிர்ச்சியையும் கொடுத்தாக தெரிகின்றது .

1996 - ஆம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக நரசிம்மராவ் அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் ,மூப்பனார் "தமிழ் மாநில காங்கிரஸ் " என்ற கட்சியை துவக்கினார் .

அதன் பின்பு , திமுக பிஜேபி உடன் உடன்பாடு கொண்டதால் மூப்பனாரின் "தமாகா " அதிமுக உடன் கூட்டணி அமைத்தது . அப்போது , ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த மூப்பனாரின் முடிவை ஏற்க மறுத்த ப.சிதம்பரம் "ஜனநாயக மக்கள் காங்கிரஸ் " என்று ஒரு கட்சியை துவக்கி திமுக உடன் கூட்டணி கொண்டு 2 எம்.எல்.ஏ- களை பெற்றார் .

  இன்றைக்கு 1996 நிலை மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் . திமுக உடன் கூட்டணியை தொடரவே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரும்புகிறார் . அதிமுக உடன் கூட்டணி வைக்கவோ  அல்லது மூன்றாவது அணியை பற்றியோ ப.சிதம்பரம் விரும்பவில்லை .மேலும் , மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் இதே நிலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .அதன் வெளிப்பாடு தான் , இன்று மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை என்ற செய்தியை கேட்டு ப.சிதம்பரம் அதிர்ச்சி அடைந்தார் . உடனே , பிரதமரையும் அமைச்சர்களையும்  தொடர்பு கொண்டு சிபிஐ சோதனையை இடையில் நிறுத்த நடவடிக்கை எடுத்தார் என்று கூறப்படுகிறது .

ஒரு வேளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை திமுக கூட்டணியை தொடர வழிவகை செய்ய முன்வரவில்லைஎன்றால் ,ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே.வாசன் தலைமையில்  மீண்டும்  தமாகா உதயமாகும் . ஜி.கே.வாசன் வராவிட்டாலும் ,ப.சிதம்பரம் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சி உடைவது உறுதி என்று கூறப்படுகிறது .

  பல்வேறு நிலைகளில் மத்திய காங்கிரஸ் அரசு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் , திமுக விசயத்தில் என்ன முடிவை சோனியாவும் ,ராகுலும் எடுக்கப்போகிறார்கள்  என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களும் ,தொண்டர்களும் அமைதியுடன் காத்திருக்கின்றனர் .

71 வயது பெண்மணி டாக்டர் பட்டம் பெற்று சாதனை


டில்லி பல்கலைக்கழகத்தில், 71 வயதான பெண், முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இவர், சிந்தி மொழி பாடப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஜனாதிபதியிடம் பட்டம் பெற்றுள்ளார்.

டில்லியை சேர்ந்தவர், உஷா சாஸ்வத்,71, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பின், சிந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார்.

இதன் காரணமாக, சி.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பள்ளி கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான, சிந்தி மொழி இலக்கண பாடத் திட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பு, இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், 2007ம் ஆண்டு, டில்லி பல்கலையின், சிந்தி துறையில், ஆராய்ச்சி மாணவியாக தன்னை இணைத்து கொண்ட இவர், கடந்த ஆண்டு, ஆய்வை நிறைவு செய்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியிடமிருந்து, உஷா சாஸ்வத், முனைவர் பட்டம் பெற்றார்.

அப்போது பேசிய உஷா, "என் கல்வி தாகம் இனிமேலும் அடங்காது; மேலும் படிக்க உள்ளேன்" எனக் கூறி, அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார்.

கரூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கரூர் மாவட்டத்தில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மக்களிடையே சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்படி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி, வட்டார ஒருங்கிணைப்பாளர், கணிணி உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

அதன்படி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு முதுகலை சமூகவியல் அல்லது ஏதாவது ஒரு முதுகலை பட்டப்படிப்பில் சமூக நலக்கல்வி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப் பாளர் பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

கணினி உதவியாளர் பணிக்கு பி.ஜி.டி.சி.ஏ, சுருக்கெழுத்து, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

அறிக்கை:
இந்த பணிகளுக்கு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். முற்றிலும் தற்காலிக பணி ஆகும்.

விருப்பம் உள்ளவர்கள் வருகிற 28ந்தேதிக்குள் கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளாச்சி முகமை அலுவலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை கூடுதல் கலெக்டர் வினய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

முலாயம் சரத்பவாருடன் சந்திப்பு மீண்டும் மூன்றாவது அணி உதயம் ?


தி.மு.க. மத்திய அரசில் இருந்து விலகிய நிலையில், மத்திய மந்திரி பெனி பிரசாத்தை பதவி நீக்கும் பிரச்சினையில் சமாஜ்வாடி கட்சி எடுக்க இருக்கும் முடிவு ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், காங்கிரசின் மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முலாயம்சிங் யாதவ் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய அரசியலில் அணி மாற்றத்துக்கு முலாயம்சிங் முயற்சி மேற்கொண்டு வருகிறாரா? என்ற கேள்வியை இந்த சந்திப்பு எழுப்பி உள்ளது. ஆனால், அதுபோன்ற யூகங்களை இரு தலைவர்களும் மறுத்து உள்ளனர். இருவரும் கலந்துகொள்ள இருக்கும் சுதந்திரபோராட்ட தியாகி ஒருவரின் நினைவு தின நிகழ்ச்சி குறித்து விவாதித்ததாக, அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பெனி பிரசாத் வர்மா விவகாரம் குறித்து விவாதிக்க சமாஜ்வாடி கட்சியின் பார்லிமென்டரி கூட்டம் இன்று நடந்தது. இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் முலாயம் சிங்கிடம் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்கப்படும் என சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.