Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 30 ஜனவரி, 2013

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணி இடங்கள், தேர்வு மூலம் நிரப்பப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் பேட்டி


இந்த ஆண்டு அரசு பணியில் எத்தனை காலி இடங்களுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரங்கள் அடங்கிய ஆண்டு தேர்வுபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், வருடாந்திர தேர்வுபட்டியலை வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது நட்ராஜ் கூறியதாவது:–

இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 10 ஆயிரத்து 105 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 27 துறைகளில் 37 விதமான பதவிகள் அடங்கும். அதிகபட்ச காலி இடங்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் குரூப்–2 தேர்வு மூலமாக 2,714 இடங்களும், குரூப்–2 தேர்வு மூலம் 1,300 பணி இடங்களும், 1,500 வி.ஏ.ஓ. இடங்களும், தொழில்நுட்ப பணியைப் பொருத்தவரையில், அதேபோல், 2,790 டாக்டர் பணி இடங்களும் 1,800 கால்நடை மருத்துவர்கள் இடங்களும் நிரப்பப்படும், இந்த காலி இடங்களின் எண்ணிக்கை தோராயமானதுதான். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தேர்வுமுறை–பாடத்திட்டம் மாற்றம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உறுப்பினர் எம்.ஷோபினி தலைமையில் ஒரு கமிட்டியும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து உறுப்பினர் கே.லட்சுமணன் தலைமையில் தனியாக ஒரு கமிட்டியும் போடப்பட்டது. இந்த இரு கமிட்டிகளின் பரிந்துரைஅடிப்படையில், தேர்வுமுறையிலும், பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, இதுவரை குரூப்–2 தேர்வில் இடம்பெற்றிருந்த நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுகின்றன. முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–1 தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கிற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தனித்தனி தேர்வுகள்
குரூப்–1 தேர்வில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒரு காலி இடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்தது. இனிமேல் ஒரு காலி இடத்திற்கு 50 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.

வி.ஏ.ஓ. தேர்வில் அதிரடி மாற்றம்
மேலும், வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.

இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும்.

நடப்புகால நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம்
பொதுவாகவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புகால நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிமேல், பொதுஅறிவு தாளில் நடப்பு கால நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக தனியாக வினா வங்கி தயாரிக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்–2 தேர்வின் முடிவு பிப்ரவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்டு அதற்கான கவுன்சிலிங் 18–ந் தேதி தொடங்கும்.

இவ்வாறு நட்ராஜ் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் கூறியதாவது;–

இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆண்டு தேர்வு பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்படும்.

நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர் போன்ற பதவிகள், குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் வயது வரம்பு விதிமுறையால் பாதிப்பு வருமே என்று கேட்கிறீர்கள். அதுபோன்று பாதிப்பு ஏதும் வராத வகையில், புதிதாக சேர்க்கப்பட்ட இந்த குரூப்–2 பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி பணி இடம் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வியியல் தொடர்பாக கூடுதலாக ஒரு தாள் எழுத வேண்டும்.

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை


புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர் தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்" என்றனர்.

பகுதி நேர பள்ளிகள் அமைக்க இடம் பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை


இடம் பெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு, அந்தந்த பகுதிகளில் பகுதி நேர பள்ளிகள் அமைக்க வேண்டும் என, வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திரா, பீகார், கர்நாடகா, உத்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இடம் பெயர்ந்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், பாதிக்கு மேற்பட்டோர், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடம்பெயர்ந்து வாழ்வோருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எந்த பாதுகாப்பு வசதியும் இங்கு இல்லை. இதுகுறித்த, கருத்தரங்கு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சென்னையில் வசிக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் கூறியதாவது: சொந்த மாநிலத்தில் வாழ முடியாமல், வேலைக்காக சென்னை வந்துள்ளோம். நாங்கள் வேலை பார்த்தாலும், எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என, எண்ணுகிறோம். ஆனால், மொழிப் பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. அதனால், படிக்க வைக்கும் எண்ணம் இருந்தும், படிக்க வைக்க முடியவில்லை.

பெரிய கட்டடங்கள் அமைக்கும் இடங்களில், தொடர்ச்சியாக வேலை செய்வோம். ஒரு இடத்தில், கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஒரு ஆண்டாகும். கிழக்கு கடற்கரை சாலையில், பல ஆயிரக்கணக்கான வெளி மாநிலத்தோர், பல்வேறு கட்டடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே, அதிக அளவில் வெளிமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில், அந்தந்த மொழியில் பாடம் நடத்தும் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும். குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு, இலவச அரிசி வழங்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட அளவிலாவது விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது, இலவச அரிசியை, ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.