Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 25 மார்ச், 2013

தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் மாணவர்கள் அவதி: பொதுத்தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் புலம்பல்


தேர்வு சமயத்தில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக, படிக்க முடியாததுடன், போதுமான தூக்கமின்றி, உடலளவிலும், மனதளவிலும், பள்ளி மாணவ,மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையால் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம் என அனைத்துதுறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்கள், படிக்க முடியாமல் தவிக்கின்றனர்; உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 1ல் துவங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுகள், வரும் 27ல் நிறைவடைகின்றன. அதே தேதியில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வு துவங்குகிறது. தவிர, பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேர மின்வெட்டு அதிகரித்து வருகிறது.

இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு என, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு நிலவுகிறது.
தொடர் மின்வெட்டால் பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவ, மாணவியர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கு படிக்க முடியாததுடன், தூக்கமும் வருவதில்லையென புலம்புகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி மாணவர்கள் கூறுகையில்,""இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்படுகிறது. பாடங்களை கண்விழித்தும் படிக்க முடிவதில்லை.

அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்கலாம் என்று நினைத்து தூங்கினால், உஷ்ணம், கொசுத் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் சரிவர தூங்க முடிவதில்லை.

தேர்வறையில் தூக்கம் தூக்கமாக வருகிறது. மூளையும் சோர்வடைவதால் சிந்தித்து தேர்வெழுதமுடிவில்லை. எதிர்வரும் தேர்வுகளை எதிர்கொள்வதை நினைத்தாலே பயமாக உள்ளது. இரவு நேர மின்வெட்டை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

கோவை, மின்வாரிய தலைமைப்பொறியாளர் தங்கவேலு கூறியதாவது:
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வழக்கம்போல் காற்றாலைகளின் மின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

கடந்த ஜன., மாதத்தில் காற்றாலை உற்பத்தித்திறன் குறைந்தது 1,000 மெகாவாட்டாக இருந்தது தற்போது 15 மெகா வாட்டாக குறைந்துள்ளது; மின் தேவையும் அதிகரித்துள்ளது. மழையின்மையால் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அனல் மின்சாரமும் கைகொடுக்கவில்லை.
இரவுநேர மின் பயன்பாட்டை குறைக்க கடைகள், ஓட்டல்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

தற்போது தேர்வு சமயம் என்பதால், கேரள மாநிலத்தில் இரவு 8.00 மணி முன்னதாக கடைகள், ஓட்டல்களை மூடிவிடுகின்றனர்.
இதனால், மின்தட்டுபாடு குறைகிறது. அதேபோல், இங்கும் மின்பயன்பாட்டை குறைத்து, தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆறு மணிநேர தூக்கம் அவசியம்
டாக்டர்கள் கூறுகையில்,"நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் தேவை என்ற நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் மாணவர்களுக்கு தூங்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. இதனால், சிந்திக்கும் திறன் குறைவதுடன், உடல் வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். தேர்வில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. குறிப்பாக சிந்தித்து எழுதும் கணிதத் தேர்வில் பாதிப்புகள் அதிகம் இருக்கும். எனவே, தேர்வு சமயத்தில், மாணவ,மாணவியருக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேர தூக்கம் தேவை,'' என்றனர்.

மத்தியில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. துணை போகாது : க.அன்பழகன் பேச்சு


சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டம் சுமார் 1½ மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எதுவும் பேசவில்லை.

ஆனால், பொதுச்செயலாளர் க.அன்பழகன் சிறிது நேரம் பேசினார். அவர் தனது பேச்சை, கழகத்தின் நிரந்தர தலைவர் கலைஞர் அவர்களே, பொறுமை காக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று தொடங்கினார். அவர் மேலும் கூறியதாவது:–

வீரபாண்டி ஆறுமுகம் கோபம்
பொதுவாக எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்காக சில நேரங்களில் பொறுத்து போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்லவன் என்பதற்காகவோ, நண்பன் என்பதற்காகவோ உறவு கொள்வதில்லை. ஒரு முறை கலைஞரும், நானும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் மிகவும் கோபமாக உள்ளே வந்தார்.என்ன நடக்கிறது இங்கே? என்று தொடங்கிய அவர், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை செய்துகொண்டு இருக்கிறார்கள். நாம் கீழே உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். மேலே தயாளு அம்மாவிடம் விசாரணை செய்கிறார்கள். இவ்வளவு துணிச்சலையும் யார் கொடுத்தது?. மத்தியில் ஆட்சி என்றால் நாமும் சேர்ந்துதானே ஆட்சி. இனியும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?. வெளியே வந்துவிடுவோம். தேர்தலையும் தனியாக சந்திப்போம். இந்த அவமானத்தை தாங்கியது போதும் என்று அவர் கண்கலங்கி வருத்தப்பட்டு பேசினார்.

சில்லறை வணிகம்
சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீடு என்பது நாம் எதிர்க்கும் ஒரு கொள்கை என்றாலும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதே என்ற நோக்கத்தில்தான் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்.ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் மனம் வருந்தி ஓட்டு போட்டோமே தவிர சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீட்டுக்கு ஆதரவாக அல்ல. இப்படி பல சம்பவங்களில் நமக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடு இருந்தாலும், ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாதே என்பதால் ஆதரவு தெரிவித்து வந்தோம்.

இலங்கை தமிழர் பிரச்சினை
ஆனால், இப்போது இலங்கை தமிழர் பிரச்சினை என்பது நமது உயிரோடு கலந்தது. 1956–ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. குரல் கொடுத்து வந்தது. நமது போராட்டத்தின் உச்சக்கட்டம் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததுதான். இலங்கை தமிழர் பிரச்சினைக்காகத்தான் கலைஞரும், நானும், மற்றவர்களும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம். பதவி பெரிதல்ல. ஆனால், அந்த பதவியை ராஜினாமா செய்வது சாதாரண விஷயம் அல்ல. இருமுறை ஆட்சியையே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இழந்து இருக்கிறோம்.இப்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக வெளியே வந்தோமே தவிர, இந்த ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஒருபோதும் தி.மு.க. ஈடுபடாது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு மதவெறி கொண்ட ஆட்சி வருவதற்கு தி.மு.க. ஒருபோதும் துணையாக இருக்காது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் அல்ல.

மனம் உடைந்து..
இங்கே கலைஞர் உடலும், மனமும் உடைந்து அமர்ந்திருக்கிறார். உள்ளத்தால் நொந்து உட்கார்ந்து இருக்கிறார். அவரால் பேச முடியவில்லை. எனக்கும் இருமலும், சளியும் இருக்கிறது. ஆனால் உங்களை எல்லாம் பார்த்த உடன் எல்லாவற்றையும் மறந்து பேசுகிறேன். நான் கலைஞரிடம் கூறுவது, அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. மாமன் என்னடா.. மச்சான் என்னடா.. எவனாக இருந்தாலும் ஒதுக்கிவிடுங்கள். உங்களோடு லட்சோப லட்ச கழக தொண்டர்கள் இருக்கிறார்கள்.இவ்வாறு க.அன்பழகன் பேசினார்.

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்


கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது. அதன் படி, அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் அனைத்து கட்டாய கட்டணங்களை செலுத்த தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, டியூசன், பதிவு, விளையாட்டு, நூலகம், இதழ்கள் போன்றவற்றிற்கு, கட்ட வேண்டிய எந்த கட்டணத்தையும் கட்டத்தேவையில்லை. இந்த அரசாணை, 2011 - 2012ம் கல்வி ஆண்டிலிருந்து, நடைமுறைப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, துடி மாணவர் இயக்கத்தின் செயலர் பாரதி பிரபு கூறியதாவது:அரசாணை வந்தவுடன், தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் நிகழும் என, நினைத்தோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இனி கல்வி கற்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என, மகிழ்ந்தோம்.ஆனால், அரசு தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என, கூறி, கல்லூரி நிர்வாகத்தினர் எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

மொத்த கட்டணத்தையும் செலுத்த, கல்லூரி நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள், சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். பல மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.