Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 23 அக்டோபர், 2013

இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட அதற்கு இணையான உறவுகள் ------------2

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் , எனது பள்ளித் தோழன் ஒருவன் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் .அவன் 3 -ஆம் ஆண்டை பூர்த்தி செய்யும் நிலை வரும் போது ,என்னிடம் வந்து ,மாப்ளே நான் MCA திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சேரணும் என்று கூறினான் . விண்ணபித்து போய் சேர வேண்டியதுதானே என்று கூறினேன் . அங்கே , மார்க் அடிப்படையில் தான் ,எடுப்பாங்க அதோடு கொஞ்சம் சிபாரிசு இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறினான் .அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் . அதற்கு அவன் ,என் மாமா விடம் இது விசயமாக பேசினேன் ,அவர் உன்னால் முடியும் என்று கூறினார் என்றான் .எனக்கு ஒன்றும் புரியவில்லை ,நாளைக்கு பேசுவோம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் .

வீட்டிற்கு வந்த பின்தான் அவன் சொன்னதற்கு விடை கிடைத்தது . மறுநாள் காலையில் மாப்ளே ,கிளம்பு என்று அவனை கூப்பிட்டேன் ,எங்கே ? என்று கேட்டான் ,உடனே கிளம்பு என்றேன் ,அவனது இருசக்கர ஹீரோ ஹோண்டாவை எடுத்துக் கொண்டு குற்றாலம் அருகில் இருக்கும் நன்னகரத்திற்கு சென்றோம் . அங்கே ,அன்றைய மத்திய அமைச்சர் அருணாசலத்தின் வீட்டிற்கு எதிரே இருந்த ,பள்ளிவாசலோடு இணைந்த இஷாத்துல் இஸ்லாம் சபையின் கட்டிடத்தில் ,அதன் தலைவர் ,காயிதே மில்லத்தின் அன்பு தொண்டராக ,சமுதாயத்தை பற்றியே சதாவும் சிந்தித்துக் கொண்டிருந்த ,எனது சமுதாயப் பணியின் ஆசான், தலைவர் அஹமது கபீர் ரிபாயி (ரஹ்) அவர்களை சந்தித்தோம் .அன்பான வரவேற்பு , முறுக்கும் சாயாவும் வந்தது . என்னுடன் வந்த நண்பனை அறிமுகம் செய்துவிட்டு , பல விஷயங்கள் AK .ரிபாயி (ரஹ்) அவர்கள் சொல்ல அதனை கேட்டு நாங்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு ,சென்ற காரணத்தை சொன்னேன் .

அப்போது , தலைவர் அவர்கள் ,எனக்கு ஜமால் முஹம்மது கல்லூரியில் ஒரே ஒரு இடம் கிடைக்கும் , அது இந்த வருடம் உனது நண்பனுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம் ,இன்ஷாஅல்லாஹ் என்று கூறிவிட்டு . அன்றைய ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளருக்கு தொலைபேசி மூலம் பேசினார்கள் ,நண்பனின் பட்டபடிப்பு விசயமாக கூறினார்கள் .தலைவர் பேசிவிட்டு ,அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார்கள் . அப்போம், நான் லட்டர் தருகிறேன் அதனை கொண்டு போய் கொடுங்கள் ,அட்மிஷன் கிடைத்துவிடும் என்று கூறி எங்களை அனுப்பிவைத்தார்கள் .

வெளியில் வந்த உடன் என் நண்பன் கேட்டான் , மாப்ளே ,எல்லோரும் முதலாளினு சொல்றாங்க , முன்னாள் MP , பெரிய ஆளு ,எப்படிப்பா ,இப்படி எளிமையாக இருக்காங்க ? அதுவும் , ,சின்ன பையன்கள் நாமோ கேட்டவுடன் விசயத்தையும் முடித்து தந்துவிட்டார்கள் ,எனக்கு ஆச்சரியமாக இருக்குது என்று கூறினான் . நான் , அதுதான் நான் தேர்ந்தெடுத்த பாதையின் தலைவர்கள் . சமுதாயத் தியாகம் தான் அவர்களது வாழ்க்கை என்றும் , இஷா அத்துல் இஸ்லாம் சபையின் மூலம் ரிபாயி சாஹிபும் அவர்தம் குடும்பத்தார்களும் ,சமுதாய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் செய்த சேவைகளையும் ,காயிதே மில்லத்திற்கும் ரிபாயி சாஹிபு (ரஹ் ) அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவுகளையும் எடுத்துக்கூறினேன் .

நண்பனும் ,கல்லூரியில் சேர்ந்தான்,MCA படிப்பை முடித்தான் ;வெளிநாடு சென்றான் நல்ல சம்பாத்தியம் செய்கிறான் .ஆனால் ,ஒரு தடவை கூட அவன் என்னிடம் தனக்கு சிபாரிசு செய்த அந்த மனிதரை பற்றி கேட்டதில்லை . அவருக்கு நன்றி கூட சொன்னதில்லை .

ஆனால் ,ஆயிரக்கணக்கான மக்களால் முதலாளி என்றும் ,தலைவர் என்றும் மனம் நிறைய அன்போடு அழைக்கப்பட்ட அந்த தலைவர் என்னை காணும் போதெல்லாம் ,அந்த பையன் படிப்பை பற்றி விசாரிப்பார்கள் .

அந்த பெரிய மனிதரின் உறவு எனக்கு கிடைத்தது எனக்கு அல்லாஹ் இந்த உலகத்தில் தந்த பெரும் பேராக ,பெரும் பாக்கியமாக நான் எண்ணுகிறேன் . வல்லா அல்லா , அந்த தலைவரின் மண்ணறையை சொர்க்கச்சோலையாக்கிவைபானாக !