Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 24 ஏப்ரல், 2013

காந்தி கிராமிய கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்பு


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ந்திகிராம் கிராமிய கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலையில் பி.எஸ்சி., பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்.,ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகள்

முதுகலையில் எம்.ஏ, எம்.எஸ்சி., எம்பில்

ஒருகிணைந்த படிப்பு, தொழிற்கல்வி படிப்பு,

டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கையேடுகளை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏப்ரல் 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் தகவலுக்கு www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் 547 பணி நிரவல் பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்


நெல்லை மாவட்டத்தி ல் 547 பணி நிரவல் பணியிடங்கள் உள்ளதால் பல்வேறு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட அனைத்து வட்டார, பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்றார். முன்னாள் பொருளாளர் சிவஞானம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் 547 பணியிடங்கள் பணி நிரவல் பணியிடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிகமான ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஏற்படும் அபாயம் உள்ளதால் பல பள்ளிகள் மூடப்பட வேண்டிய ‹ழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை தடுக்கும் வகையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆணையை முதல்வர் பிறப்பிக்க வேண்டும்.

சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் மற்றும் பணி மாறுதல் மூலம் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணியிடங்களை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். கடந்த 2006 முதல் கால முறை ஊதியம் பெற்று அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6வது ஊதிய குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு


முதல் தலைமுறை பட்டதாரிகள், சுய தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆட்சியர் லில்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகள் தொழில் துவங்க, தமிழக அரசு, 25 சதவீத மானியத்தில், 5 லட்ச ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கி வருகிறது.

நடப்பாண்டில், தகுதியான தொழில் முனைவோர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், மகளிர் தொழில் முனைவோருக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சேவை மற்றும் உற்பத்தி தொழில் துவங்க விருப்பம் உள்ள பொதுப்பிரிவினர், தங்களது பங்களிப்பாக, முதலீட்டு தொகையில், 10 சதவீதம், சிறப்பு பிரிவினர், 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

தொழில் முனைவோருக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். கடன் தொகையை முறையாக செலுத்தினால், 25 சதவீத மானியத்துடன், மூன்று சதவீதம் வட்டி மான்யமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணம்பம் செய்பவர்கள், இளநிலை பட்டதாரிகள் அல்லது பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., தொழில் பயிற்சி பெற்றவர்களாகவும், அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர், 25 முதல், 35 வயதிற்குட்பட்டவர்களாகவும், சிறப்பு பிரிவினரான, மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவனத்தினர், சிறுபான்மையினர், திருநங்கைகள் ஆகியோர், 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை. உரிமையாளர், பங்குதாரர் நிறுவனமாக இருக்கலாம். பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் அனைத்து பங்குதாரர்களும் திட்டத்தின் தகுதிகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின், இரு நகல்களில், வயதிற்கான சான்று, இருப்பிட சான்று, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி, கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட பட்ட, பட்டய சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், முன்னாள் ராணுவனத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையாக இருப்பின், அதற்கான சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

திட்ட அறிக்கை மற்றும் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான, உத்தேச விற்பனை மற்றும் மொத்த வருமானம் அறிக்கை, திட்ட மதிப்பீட்டில் நிலத்தின் மதிப்பு சேர்க்கப்பட்டிருந்தால், நிலபட்டாவின் நகல், இயந்திரங்கள் அல்லது கருவிகளின் அசல், நகல் விலைப்பட்டியல், சான்று உறுதி மொழிப் பத்திரம், மாவட்ட தொழில் மையத்தில் இருந்து பெறப்பட்ட தொழில் முனைவோர் பதிவறிக்கை(பாகம்1) ஒப்புகை சான்று, பங்குதார் நிறுவனமாக இருந்தால், கூட்டு ஒப்பந்த்தின் பத்திர நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் ஏற்கனவே கடன் பெற்று திரும்பி கட்ட தவறியவர்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்கள், மத்திய, மாநில அரசின் பிற திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

இத்திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழுவினரால் நேர்முக தேர்வின் மூலம் பரிசீலிக்கப்படுவார்கள். ஆர்வமும், தகுதியும் உள்ள தொழில்முனைவோர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, அனைத்து இணைப்புகளுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளில் சேர்க்கை நிறுத்தம்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலை.,யில் பல்வேறு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஐந்தாண்டு படிப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு நெல்லை பல்கலை.,யில் எம்.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்எஸ்சி., கணிதம் மற்றும் உளவியல் ஆகிய ஒருங்கிணைந்த படிப்புகள் துவக்கப்பட்டன. ஐந்தாண்டு பட்டப்படிப்பான இதில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் நேரடியாக சேர்க்கப்பட்டனர். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திடீர் நிறுத்தம்
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடங்களான எம்டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்எஸ்சி., கணிதம், உளவியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக் கொள்வது என பல்கலை., முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வரப்பிரதாசமாக அமைந்திருந்ததாகவும், இந்த பாடங்களை நிறுத்துவதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எம்.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு படிக்க பிற கல்வி நிறுவனங்களில் நிறைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லை பல்கலை.,யில் இந்த படிப்புக்கு கட்டணம் மிகவும் குறைவாகும். நெல்லை சுற்றுப்பகுதியில் பெரும்பாலாலும் நடுத்தர வகுப்பு மக்களே வசிக்கின்றனர்.

இவர்களது குழந்தைகளுக்கு ஐந்தாண்டு எம்.டெக்., படிப்பு ஒரு வரப்பிரதாசமாக இருந்தது. இந்த படிப்பை நிறுத்துவதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கல்வியறிவு பெற முடியாமல் போய்விடும். எனவே நெல்லை பல்கலை.,யில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குழப்பங்கள்
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்களை பல்கலை., தெரிவிக்கிறது.
பல்கலைக்கழகம் பட்டமேற்படிப்புகளை கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனமாகும்.

பிளஸ் 2 படித்து விட்டு, பல்கலை.,க்கு நேரடியாக மாணவர்கள் வருவதால் அவர்களுக்கு போதிய முதிர்வுத்தன்மை இல்லை. பிளஸ் 2 முடித்து விட்டு நேரடியாக வரும் மாணவ, மாணவிகள் பல்கலை.,யில் பக்குவம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே இடைவெளி ஏற்படுகிறது. மாணவர்களை கட்டுப்படுத்தவதும் கடினமாக உள்ளது.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் பெரும்பாலானோர் பிஎட்., படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். உதாரணமாக நெல்லை பல்கலை.,யில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு எம்எஸ்சி., பட்டம் மட்டுமே வழங்கப்படும்.

இந்த பட்டத்தை வைத்துக் கொண்டு, மாணவர்களால் பிஎட்., படிக்க முடியாது. பிஎஸ்சி., பட்டம் இருந்தால் மட்டுமே பிஎட்., படிப்பில் சேர முடியும். இது போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது மாணவர்கள் பல்கலை., நிர்வாகத்தை குறை கூறுகின்றனர்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டம் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதிலும் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. இந்த படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

எனவே நெல்லை பல்கலை.,யில் வரும் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலை., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்று கால்நடை வளர்ப்பு தொழில் துவங்கினால் வெற்றி பெறலாம்


கால்நடை பராமரிப்பு துறையில் பயிற்சி பெற்று, கால்நடை வளர்ப்பு தொழில் துவங்குமாறு பல்கலைக்கழக துணை வேந்தர் பிரபாகரன் கூறினார்.

விழுப்புரத்தில் நடந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் சார்பில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சி நிறைவு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு மூலம் விவசாயிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, விவசாயத் தொழில் 50 சதவீதம் மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டதாலும், விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கால்நடை பராமரிப்பு மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆண்டு முழுவதும் வருமானத்தை ஈட்ட முடியும். மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1500 அடி ஆழத்திற்கு போர் போட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ஒப்பந்த கோழி வளர்ப்பிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கறவை மாடுகள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.

தற்போது, பொதுமக்கள் சிறந்த உணவு, உடை அணிந்து நாகரிகமாக வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், சத்தான உணவு சாப்பிடுவதற்காக, கால்நடை துறை சார்பில் இறைச்சி, முட்டை, பால் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது.

கால்நடைகளை வளர்க்க விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையில் சென்று பயிற்சி பெற்று, தொழில் துவங்க வேண்டும். இதன் மூலம் தொழிலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இவ்வாறு துணை வேந்தர் பிரபாகரன் பேசினார்.

ஐ.ஐ.எம். - ன் மேனேஜ்மென்ட் படிப்பு


இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனத்தில், மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பி.ஜி., புரோகிராம் படிப்புக்கு, சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் கேட் அல்லது ஜிமேட் நுழைவுத் தேர்வு எழுதியிருப்பது அவசியம். மேனேஜ்மென்ட் துறையில், ஐந்து ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க மே 24 கடைசி தேதி.

விபரங்களுக்கு www.iimidr.ac.in/iimi