Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

காஸ் குழாய் அமைக்க எதிர்ப்பு: விசாயிகள் 26-ல் போராட்டம் அறிவிப்பு


விவசாய பயிர்களை அழித்து காஸ் குழாய் அமைக்கும், "கெய்ல்' நிறுவனத்தை கண்டித்து, பல்லடத்தில் , தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்."கெய்ல்' நிறுவனம் , கொச்சி-சேலம்-பெங்களூரு வரை, 310 கி.மீ., தூரத்துக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான காஸ் கொண்டு செல்லும் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 136 கிராமங்கள் வழியாக குழாய் அமைக்கப்படுகிறது.

விளைநிலைங்கள் வழியாக காஸ் குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாய பயிர்களை அழித்து குழாய் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்; மாற்றுப்பாதையில் குழாய் அமைக்க வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று ஏழு மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் கெய்ல் நிறுவனத்தினை கண்டித்தும், சேலம் கெய்ல் தலைமை அலுவலகத்தினை 26-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர் பயத்தில் தவிக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள்


உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையத்திற்கு, புதிய கட்டடம் அமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னும், இன்று வரை பணிகள் துவங்காமல் உள்ளது. இதனால், எப்போது கட்டடம் இடிந்து விழுமோ என்ற உயிர் பயத்தில், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை, தரமணி வளாகத்தில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், 60க்கும் மேற்பட்ட எம்.பில்., - பிஎச்.டி., மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழின் சிறப்பு, வளர்ச்சி, தமிழரின் பண்பாடு, நாகரிகம், காலாசாரம் ஆகியவை குறித்து, இந்நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இக்கட்டடத்தின் நிலை மோசமானது.குறிப்பாக, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

ஆராய்ச்சி மாணவர்களின் அறையும், உலகப்புகழ் பெற்ற இவ்வாராய்ச்சி நிலையத்தின் நூலகமும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. பக்கவாட்டுச் சுவர்களின் பெரும் கீறல் விழுந்தது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 3.20 கோடியில், புதிய கட்டடம் அமைக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதில், மூன்று அடுக்கு கட்டடம் அமைக்கவும், வெளிநாடுகளில் இருந்து ஆராய்ச்சி நிலையத்திற்கு வரும் ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் தங்குதவதற்கும், 12 அறைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரைபடமும் தயாரானது.

ஆனால், ஆராய்ச்சி நிலையில், புதிய கட்டடம் கட்டுவதில் ஆர்வமாக இருந்த போதிலும், பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. இதுகுறித்து, ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கட்டடம் எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்து, நான்கு வகையான வரைபடம் தயாரித்து, பொதுப்பணித்துறைக்கு அளித்தோம். ஆனால், பொதுப்பணித்துறை கட்டடம் அமைவதில் ஆர்வம் காட்டவில்லை. வரைபடம் முடிவான பிறகு, நான்கு மாதத்திற்குள், பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டும். ஆனால், வரைபடத்தின் படி, கட்டடம் கட்டுவதற்கு, போதுமான பணம் இல்லை என, நிராகரித்தது. புதிய வரைபடம் தயாரிக்க வேண்டும் என்றது.

புதிய வரைபடம் தயார் செய்தால், மீண்டும் அரசின் ஒப்புதல் வாங்குவதற்கு தாமதமாகும் என்பதால், ஏற்கனவே வரைந்த வரைபடத்திற்கு ஆகும் செலவினங்களை, நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்றோம். ஆனால், இன்று வரை பணிகள் துவங்கவில்லை.

இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, பேராசிரியர்களும் எந்நேரம் கட்டடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், தவித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை கட்டட பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் துவங்கி விடும்" என்றனர்.

கல்வி-திருமண சான்றிதழ்களில் அத்தாட்சி: பொது மக்களை அலைக்கழிக்கும் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை


வெளிநாடுகள் செல்வதற்காக, கல்வி-திருமண சான்றிதழ்களில் அத்தாட்சி பெறுவதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறைக்கு வரும் பொது மக்களை அலுவலர்களும், அதிகாரிகளும் தினமும் அலைய விடுகின்றனர்.

போதுமான விவரங்களைத் தெரிவிக்க தனியாக கவுன்சிலர்கள் நியமிக்கப்படாததால் அந்தப் பிரிவு முழுவதிலும் லஞ்சம் பெருக்கெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயர் கல்வியை முடித்தவர்கள், குடும்பத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய நினைக்கும் பெண்கள் என அனைவரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், திருமண பதிவுச் சான்றிதழ்களை பொதுத்துறையில் உள்ள வெளிநாட்டினர் பிரிவில் சமர்ப்பித்து உரிய அத்தாட்சியைப் பெறுவது அவசியம். இந்தப் பணியை முடித்த பிறகே வெளிநாடு செல்வதற்கு உரிய அனுமதியைப் பெற முடியும்.

இந்த அத்தாட்சியை உடனடியாகப் பெற விரும்புவோர் நேரடியாக தலைமைச் செயலகத்துக்கே வந்து பொதுத்துறையில் அதற்கான பிரிவை அணுகுகிறார்கள். அவ்வாறு செல்லும் பொது மக்களுக்கு உரிய முறையில் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. அத்தாட்சியைப் பெற என்னென்ன வழிகளைக் கையாள வேண்டும். எந்தெந்த  விண்ணப்பத்தை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைப்பதில்லை.


இடைத்தரகர்கள் ராஜ்யம்: அத்தாட்சி பெறுவோருக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்காத நிலையில், துறையில் உள்ள அலுவலர்களைக் கேட்கும் போது, உரிய முறையில் அவர்களும் பதில் தருவதில்லை. இதனால், வேறு வழியின்றி துறைக்குத் தொடர்பில்லாத அதே சமயம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் உள்ள இடைத்தரகர்களை பொது மக்கள் நாட வேண்டியுள்ளது.

இடைத்தரகர்கள் ஒவ்வொரு சான்றுக்கும் மக்களின் அவசரத் தேவைக்கு ஏற்ற வகையில், பணம் வசூலிக்கின்றனர். ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஒவ்வொரு சான்றிதழுக்கும் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த இடைத்தரகர்களுக்கும், பொதுத்துறையில் வெளிநாட்டினர் பிரிவில் கீழ் நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

எந்த சான்றிதழில் அத்தாட்சி பெற வேண்டுமென அந்த சான்றிதழின் அசலானது, அதை வழங்கிய தமிழக அரசுத் துறைக்கு அனுப்பப்படும். அது எந்த ஊராக இருந்தாலும் அந்த ஊரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உண்மைத் தன்மை ஆராயப்படும்.


பொது மக்கள் தங்களது அசல் சான்றிதழை அத்தாட்சிக்காகக் கொடுத்துச் செல்வதால் அதற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இடைத்தரகர்களை அணுகி விரைவாகப் பெற்றுச் செல்ல முனைகின்றனர்.

தகவல் அளிப்பவர் இல்லாதது ஏன்? தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் கல்வி மற்றும் திருமண பதிவின் அசல் சான்றிதழ்கள் அனுப்பப்படும் சூழலில், அதுகுறித்த நிலையை தெரிவிக்க தகவல் அளிப்பவர் அந்தப் பிரிவில் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.

வெளிநாடு செல்லும் கனவுகளுடன் தலைமைச் செயலகம் வந்து சான்றிதழ்களில் அத்தாட்சி பெற வரும் பொது மக்களை அலைக்கழித்து வெறுத்து ஓடச் செய்கிறது பொதுத்துறை.