Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

தமிழ்நாடு மின் வாரிய நிதி செயல்பாடு மோசம் ஆய்வில் தகவல்


மின்வாரியங்களின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு, குறைவான தரமதிப்பீடு கிடைத்துள்ளது.மத்திய மின் அமைச்சகத்தின் அனுமதியுடன், ஆண்டுதோறும், மாநில மின் வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது.நடப்பு நிதியாண்டிற்கான இந்த ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன் விவரம்:நிதி செயல்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தென்மாநிலங்களிலேயே குறைவான தரமதிப்பீடாக, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு, "கிரேடு-பி' தரப்பட்டுள்ளது.அதேசமயம், மின் இழப்பை கட்டுப்படுத்துவது, மின் பகிர்மான தொழில்நுட்பம் போன்றவற்றில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிறப்பாக செயல்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த தர மதிப்பீட்டால், புதிய மின் திட்டங்களுக்காக, தனியார் நிதி நிறுவனங்களை அணுகுவதில் சிக்கல் ஏற்படலாம். தர மதிப்பீட்டை காரணங்காட்டி, மின் திட்டங்களுக்காக, தாங்கள் வழங்கும் கடனுக் கான வட்டி விகிதத்தை, தனியார் நிதி நிறுவனங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழல் ஏற்பட்டால், மின் திட்டங்களுக்கு, அட்டவணைப் படுத்தப்பட்ட வங்கிகளில், கடன் பெறும் வழிமுறையும் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த ஆய்வு முடிவு, தமிழ்நாடு மின் வாரியத்தை பெரிதாக பாதிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.தர மதிப்பீட்டில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநிலங்கள், "பி' பிளஸ் கிரேடு, பெற்றுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, நடப்பு நிதியாண்டின், 8,183 கோடி ரூபாய் கடனை சேர்த்து, மொத்தம், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான உதவித் தொகை


அறிவியல் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கிஷோர் வைக்யானிக் புரோட்சஹன் யோஜ்னா என்ற கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அறிவியல் பாடத்தை எடுத்துப் படிக்கும் +1, + 2 மாணவர்களுக்கும், பி.எஸ்சி, பி.எஸ்., எம்.எஸ்சி., படிக்கும் பட்டதாரிகளுக்கும், பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற தொழில் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் இந்த கல்வித் தொகை வழங்கப்படுகிறது.

இது குறித்த விவரங்களை அறிய www.kvpy.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.

பாராளுமன்றத்திற்கு முன்னதாகவே தேர்தல் நடக்காது: மத்திய அமைச்சர் சிதம்பரம் உறுதி


"மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம், நிறைவேற்ற வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எனவே, லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் நடக்காது. அடுத்த ஆண்டு மே மாதம்தான், பொதுத் தேர்தல் நடக்கும்,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

இந்நிலையில், டில்லியில் நேற்று, நிருபர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அரசின் பல திட்டங்கள் குறித்து, விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது, ""லோக்சபாவுக்கு முன்னதாகவே, தேர்தல் நடத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா?'' என, நிருபர் ஒருவர் கேட்டார். இதற்கு பதில் அளித்த, சிதம்பரம் கூறியதாவது: அரசு ஏன் தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும். மக்களுக்கு இதுவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக முடிப்பது போன்றவற்றில் தான் அரசு தீவிரமாக உள்ளது. அரசின் தற்போதைய சிந்தனை எல்லாம் இதுவே. லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ளது. எனவே, லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் வருமா என்ற கேள்வியே, அவசியம் இல்லாதது. ஏற்கனவே திட்டமிட்டபடி, உரிய கால அட்டவணைப்படி, 2014 மே மாதமே, லோக்சபா தேர்தல் நடைபெறும். அதில், யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி :200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்


போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில், போதிய மற்றும் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை கண்டறிய, அண்ணா பல்கலை, ஒரு குழுவை நியமித்தது. இக்குழு, 520 பொறியியல் கல்லூரிகளையும் ஆய்வு செய்ததில், 200 பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர்கள் இல்லாததும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததையும் கண்டறிந்தது.

குழுவின் அறிக்கை அடிப்படையில், சம்பந்தபட்ட, 200 பொறியியல் கல்லூரிகளிடம், விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும், கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாதது குறித்தும், விளக்கம் அளிக்க வேண்டும் என, நோட்டீசில், பல்கலை கேட்டுக்கொண்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு), பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், இதைவிட, பல கல்லூரிகள் குறைவான சம்பளம் வழங்குவதால், சம்பளம் அதிகம் கிடைக்கும் கல்வி நிறுவனங்களுக்கு, ஆசிரியர்கள் சென்று விடுகின்றனர்.

மேலும், பலர், தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, பல பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

அண்ணா பல்கலை வட்டாரம் கூறுகையில்,"நாங்கள் தெரிவித்துள்ள குறைகளை, உடனடியாக சரிசெய்யும் பணியில், கல்லூரி நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்" என, தெரிவித்தன.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குவதற்கு முன், ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யவும், போதிய வசதிகளை ஏற்படுத்திவிடவும், கல்லூரி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.