Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 25 ஜூன், 2013

புதிய நீட்ஸ் திட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க வழிகாட்டி கருத்தரங்கு திருநெல்வேலியில் நாளை நடக்கிறது


தமிழக அரசின் புதிய நீட்ஸ் திட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமையில் நாளை  நடக்கிறது. இது குறித்து நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

புதிய கடன் திட்டம்
தமிழக முதல்–அமைச்சர் இளைஞர்களுக்கு தொடங்க மானியத்துடன் கூடிய சுய தொழிற் கடனான ரூ.1 கோடி வரை வழங்கும் “நீட்ஸ்“ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் தகுதி பெறுகின்ற இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிகள் தொடங்க அதிக பட்ச முதலீடு ரூ.1 கோடி வரையிலும் வங்கிகள் வழியாக கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட முதலீட்டில் 25 சதவீதத்துக்கு மிகாமலும், அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சிப்காட், சிப்கோ போன்றவற்றில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

கருத்தரங்கு
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி தொடங்கிய முதல் 6 ஆண்டுகளுக்கு நிறுவனம் செலுத்திய வாட் வரி முழுவதும் மானியமாக வழங்கப்படும். உற்பத்தி தொடங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தில் 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். உற்பத்தி சார்ந்த பயன்பாட்டுக்கான நிறுவனங்கள் ஜெனேட்டர் வாங்கினால் முதலீட்டில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. முறையான கடன்தவணையை திருப்பி செலுத்தும் நிறுவனங்களுக்கு 3 சதவீதம் பின்முனை வட்டி வழங்கப்படும். தமிழக அரசின் புதிய நீட்ஸ் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கருத்தரங்கத்துக்கு கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமை தாங்குகிறார். தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நெல்லை மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

லாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள்


இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறை அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய வாணிபத்தை மேற்கொள்ளும் துறையாக மாறவிருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. இத்துறையில் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் 4 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளதாக துறைத் தகவல்கள் கூறுகின்றன. இத் துறை சமீப காலமாக வெகுவேகமாக வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. எனினும் இத் துறைக்குத் தேவைப்படும் திறனாளர்கள் கிடைப்பது
கடுமையான சிரமமாக இருக்கிறது.

சப்ளை செயின் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற லாஜிஸ்டிக்ஸ் படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. ஐ.டி. துறையுடன் ஒப்பிடுகையில் இத் துறையில் தரப்படும் ஊதியமும் குறைவாகவே இருக்கிறது. இதனால் திறன் பற்றாக்குறை உருவாகியிருக்கிறது. எனினும் இத் துறையில் தற்போது இடை நிலைப் பணிகளில் நிதி, மார்க்கெட்டிங் மற்றும் மனித வளத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இத் துறை பற்றிய தகவல்கள் இன்னமும் பரவலாக அறியப்படாததால் தேவைப்படும் திறமைசாலி ஊழியர்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. இத் துறை சமீப காலம் வரை, தனிநபர் அல்லது ஒரே குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. சமீப காலமாக, பன்னாட்டு நிறுவனங்கள் இதில் நுழைந்து செயல்படத் துவங்கியபின் தான் இத் துறை ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.