Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 27 செப்டம்பர், 2012

கேரளாவில் இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம்


இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் ஆரன்முளா பகுதியில் அமைய உள்ளது. தேசிய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்றுள்ள இந்த விமான நிலையத்திற்கு கே.ஜி.எஸ். சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இதுபற்றி பேசிய கே.ஜி.எஸ். நிறுவன இயக்குனர் நந்தகுமார், ‘தேசிய விமான நிலைய ஆணையத்தின் குழு ஒன்று விமான நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளது. ரூ.20000 கோடி செலவில் உருவாகும் இந்த விமான நிலையத்தால் ஆரன்முளா பகுதி, பத்தனம்திட்டை மாவட்டம் மட்டுமின்றி கேரளா முழுவதும் வளர்ச்சி அடையும்’ என்றார்.
 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகில் அமைய இருக்கும் இவ்விமான நிலையம், பயன்பாட்டிற்கு வந்தால் சபரிமலை செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வழக்கம்போல் இவ்விவகாரத்திலும், விமான நிலையத்தை அமைக்கக் கூடாது என ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாயின. எனினும் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய தகவல்கள் வெறும் வதந்திதான் என கே.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள் ?


பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும், தொலைதூர கல்வி படிப்புகளை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை; மதுரை காமராஜர்; பாரதியார்; பாரதிதாசன் பல்கலை என, பல பல்கலைக்கழகங்கள், தொலைதூர கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு பல்கலையிலும், கோடிக்கணக்கில் பணம் புழங்கி வருகிறது. தரமான கல்வி திட்டங்கள் இல்லாதது, நிதியை பயன்படுத்துவதில் முறைகேடு என, பல்வேறு குற்றச்சாட்டுகள் மலிந்து கிடக்கின்றன.

தொலைதூர கல்வி படிப்புகளை நடத்துவதற்கென, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது தான், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துவங்கப்பட்டது. "தொலைதூர கல்வி திட்டத்தில் கிடைக்கும் வருவாயில் தான், பல்கலைகளே இயங்குகின்றன. திடீரென, அத்திட்டத்தை நிறுத்தினால், பல்கலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்&' என, அப்போதிருந்த துணைவேந்தர்கள், அரசிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தொலைதூர கல்வி திட்டங்களை, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இந்தப் பிரச்னையை முறைப்படுத்தும் முயற்சியில், உயர்கல்வித்துறை இறங்கியுள்ளது. இக்கருத்து குறித்து, ஏற்கனவே உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

அனைத்து பல்கலைகளில் நடக்கும், தொலைதூர கல்வி திட்டங்களை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் கீழ் கொண்டு வர, உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், தொலைதூர கல்வித் திட்டங்களை தரமானதாக வழங்கவும், முடிவு செய்து உள்ளது.

இத்திட்டம் குறித்து, பட்ஜெட்டுக்கு முன், விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அறிவிப்பாக வெளியாகலாம் என்றும், உயர்கல்வி வட்டாரம் தெரிவித்தது.

அரசின் முயற்சி குறித்து, பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் பிச்சாண்டி கூறியதாவது: இந்த திட்டத்தை முழு மனதுடன் வரவேற்கிறோம். பல்கலைகளுக்கு, தொலைதூர கல்வித் திட்டங்கள், பணம் காய்ச்சி மரங்களாக இருந்து வருகின்றன. எந்த வரைமுறையும் இல்லாமல், காலத்திற்கு ஏற்ற தரத்திற்கு உகந்ததாக இல்லாமல், பெயருக்கு தொலைதூர கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சேர்க்கை மையம் பல்கலைகள், போட்டி போட்டுக்கொண்டு, தெருவிற்கு ஐந்தாறு மாணவர் சேர்க்கை மையங்களை துவங்கி, ஏமாற்றி வருகின்றன. தொலைதூர கல்வி திட்டங்களை முறைப்படுத்தி, அனைத்து பல்கலைகளில் நடக்கும் தொலைதூர கல்வி திட்டங்களையும், ஒரு பல்கலையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், தற்போது போதிய பணியாளர் கிடையாது. அனைத்து பல்கலைகளில் உள்ள தொலைதூர கல்வி திட்டங்களை எடுத்து, சிறப்பாக செயல்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பவசதிகளும் இல்லை.

எனவே, முதலில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையை, அனைத்து வகைகளிலும் வலுப்படுத்தி, அதன்பின் அதன் கீழ் தொலைதூர கல்வி திட்டங்களை கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக, அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.