Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 11 டிசம்பர், 2012

தவறாக விளம்பரம் செய்யும் வியாபாரி மோடி: ராகுல் காந்தி


குஜராத் சட்டசபை தேர்தல் வருகிற 13, 17-ந்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது.ஆட்சியை தக்கவைத்துகொள்ள பாரதீய ஜனதாவும், எப்படியாவது பாரதீய ஜனதாவை வீழ்த்தவேண்டும் என்று காங்கிரசும் இங்கு முழு வேகத்தில் பிரசாரம் செய்து வருகின்றன. இதில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் சராமாரியாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் குஜராத் சானந்த் என்னும் இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத்தில் ஏழை மற்றும் நசுக்கப்பட்ட மக்களின் குரலை அரசு கேட்கப்பதில்லை. நரேந்திர மோடியும் அதை கேட்க விரும்புவதில்லை. அவர் கனவு காண்கிறார். அந்த கனவை பற்றியே அவர் நினைக்கிறார். அதையே அவரது குரலில் கேட்கவும் விரும்புகிறார். காந்திஜி, நேருஜி போன்ற உண்மையான தலைவர்கள் மக்களின் கனவையே நிறைவேற்றவே விரும்பினார்கள்.

ஆனால் மோடி, குஜராத்தின் முன்னேற்றம் குறித்து அனைத்து வழிகளிலும் பொய்யாக விளம்பரம் செய்யும் வியாபாரி போன்று தவறாக பிரசாரம் செய்து வருகிறார். அவரது ஆட்சியில் கட்டுக்கடங்காத லஞ்சம்தான் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்து துறைகளிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. ஆனால் இந்த வியபாரி குஜராத் பிரகாசமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

மக்கள் எத்தனை மணிநேரம் தண்ணீரை பெறுகிறார்கள் என்று என்னிடம் சொல்லட்டும். மூன்று நாட்களில் வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் ஓட்டுக்காக அந்த வியபாரி குஜராத் ஜொலிக்கிறது என்கிறார். 10 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறபோது எப்படி குஜராத் பிரகாசிக்கும்?.

வருடத்திற்கு 25 நாட்களுக்கு மட்டுமே சட்டசபை கூடுகிறது. இங்கு மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிப்பதில்லை. அப்படி பேசுபவர்களும் வலுக்கட்டாயமாக அடிக்கடி வெளியேற்றப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாகம் தணிக்க தண்ணீர் இல்லா தென்காசி ரயில்வே ஸ்டேஷனின் பரிதாபம்!


"தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் தாகம் தீர்க்க குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 மதுரை அகல ரயில் பாதையும், நெல்லை அகல ரயில் பாதையும் சந்திக்கும் இடமாக தென்காசி விளங்குகிறது. தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தென்காசி வழியே இயக்கப்படும் பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர் ரயில் மற்றும் நெல்லை பாசஞ்சர் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் தென்காசி வழியே இயக்கப்படும் ரயில்கள் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

ரயில்வே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை ரயில்வே துறைக்கு உள்ளது. ஆனால் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக பிளாட்பாம்களில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் சமீபத்தில் இந்த குடிநீர் குழாய்களில் பல அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதர குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் எப்போது வரும்...என யாருக்கும் தெரியவில்லை. இந்த குழாய்களை திறந்தால் வெறும் காற்றுதான் வருகிறது. ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை பார்த்து ஏமாற்றம் அடையும் பயணிகள் இக்குழாயில் தண்ணீர் வரும்... ஆனால் வராது...என கூறி தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு செல்கின்றனர். தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் போதுமான குடிநீர் வசதி செய்து கொடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் பராமரிப்பின்றி அழியும் மூலிகை தோட்டம்


நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள மூலிகை தோட்டம் போதிய பராமரிப்பு இல்லாததால் அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன. நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காசநோய், ஆஸ்துமா, மூலம், தொழுநோய், மஞ்சள் காமாலை, மகளிர் மற்றும் குழந்தைகள் நோய், தோல் நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் செயல்படக்கூடிய இந்த ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக 250 பேரும், வெளிநோயாளிகளாக தினமும் சுமார் ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுதவிர ஆஸ்பத்திரியில் ஆய்வு கூடம், மருந்து தயாரிக்கும் மையம், எக்ஸ்ரே, ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சித்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். சித்த மருத்துவக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை சித்த மருத்துவ பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு மூலிகை செடிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வசதியாக மருத்துவக்கல்லூரி தேர்வு அறையின் பின் பக்கத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் சர்ப்பகந்தா, 4 வகை நொச்சி, மாவிலிங்கம், நிலவேம்பு, மலைவேம்பு, கற்றாலை, துளசி உட்பட 300க்கும் அதிகமான மூலிகைகள் இடம் பெற்றுள்ளன. இந்த மூலிகை தோட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைகளை வனத்துறையினர், ஆராய்ச்சி மாணவர்கள், வேளாண் துறையினர் உட்பட பலர் பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையே நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வழியில்லாததால் மூலிகை செடிகள் கருகி வருகின்றன. சில வகை மூலிகை செடிகள் பூச்சி தாக்குதலுக்குள்ளாகி மெல்ல மெல்ல அழிந்து வருவதோடு, தோட்டம் புதர் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் மூலிகை தோட்டத்திற்குள் மாணவர்கள் செல்வதை தவிர்ப்பதற்காக பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் மூலிகை தோட்டம் எந்த பயன்பாடும் இன்றி காட்சி பொருளாக மாறியுள்ளது. எனவே சித்த மருத்துவதுறை இயக்குநரகமும், மாவட்ட நிர்வாகமும் நெல்லை சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் அழிந்து வரக்கூடிய அரிய வகை மூலிகை செடிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சி மாணவர்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை சித்த மருத்துக்கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமனம் எப்போது?நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே பொறுப்பு முதல்வர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒன்று அல்லது 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக பணியாற்ற அனுமதி வழங்கப்படுதால், அவர்களால் பிரச்னையை சுமூகமாக தீர்க்கவோ அல்லது உறுதியான முடிவுகளை எடுக்கவோ முடியாத நிலை உள்ளது. இதனால் நேரடியாக நோயாளிகளும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சித்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடு சிறப்பாக அமைய நிரந்தமாக முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.