Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

இரண்டு கைகள் இழந்தவர்களுக்கு எளிதாக ஓட்டும் மூன்று சக்கரவாகனம் என்ஜினீயரிங் மாணவரின் புதிய கண்டுபிடிப்பு


இரண்டு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக ஓட்டிச்செல்லும் வகையில் 3 சக்கர மோட்டார் வாகனம் ஒன்றை என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் கண்டு பிடித்து கோவை கல்லூரி கண்காட்சியில் செயல் விளக்கம் அளித்தார்.

கைகள் இல்லாமல்...
கால்களை இழந்த மாற்று திறனாளிகள் இருகைகளை கொண்டு, 3 சக்கர சைக்கிள், மற்றும் 3 சக்கர மோட்டார் வாகனங்களை இயக்கி வாழ்க்கையில் நம்பிக்கை பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ஒரு கையை இழந்தவரும், செயற்கையாக கையை பொருத்திக் கொண்டு வாகனங்களை ஓட்ட முயற்சிப்பது உண்டு.

இதில் பலர் தோற்று போவதால் வேறு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். இதைவிட இருகைகளையும் இழந்தவர்களால் எதுவுமே முடியால் முடங்கி கிடக்கும் நிலையே ஏற்படுகிறது. ஆகவே ஒரு கையில்லாத, இரு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக வாகனத்தில் சென்று, வாழ்க்கை பயணத்தை இன்பமாய் கழிக்க வழியை ஏற்படுத்தி உள்ளார். சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தருண்ரெட்டி.

முதலிடம் பெற்றது
இவர் கோவை சி.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் மெக்கானிக் துறை சார்பில் தங்களுடைய கண்டுபிடிப்பான கைகள் இல்லாமல் இயக்கும் 3 சக்கர மோட்டார் வாகனத்தை காட்டி செயல் விளக்கம் அளித்தார். இதனால் மொத்தம் கலந்து கொண்ட 60 பேரில் இவருடைய கண்டுபிடிப்பு முதல் இடத்தை பிடித்தது. அதற்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு குறித்து தினத்தந்தி நிருபரிடம் அவர்கள் கூறியதாவது:–

மாற்று திறனாளிகள் ஓட்டுகின்ற 3 சக்கர மோட்டார் வாகனத்தை வாங்கி, அதில் கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் ஓட்டுவதற்காக புதிய மெக்கானிசம் முறையில் வடிவமைத்தேன். இதற்கு ஹேண்ட் ப்ரீ பைக் (கைகள் பிடிக்காமல் ஓட்டுதல்) என்று பெயர். கைகளுக்கு வேலை இல்லாததால் அனைத்தையும் கால்கள் மூலம் இயக்கும்படி செய்துள்ளேன்.

செயின் இணைப்பு
இதில் பிரேக் பிடிப்பது, ஆக்ஸிலேட்டரை அழுத்துவது, இடபுறம், வலபுறம் திருப்பது, நேராக செலுத்துதல் போன்ற செயல்பாடுகளை செயின் இணைப்பு மூலம் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர ஹெட்லைட், இண்டிகேட்டர், ஹாரன் போன்றவற்றை கால்கள் மூலம் செய்வதற்கு ஏற்ப சுவிட்ச் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனக்கு உறுதுணையாக என்னுடன் படிக்கும் முத்துக்குமார் இருந்து வருகிறார்.

அடுத்த கட்டமாக முற்றிலும் தானியங்கி முறையில் இயக்க சென்சார் முறையை பயன்படுத்த உள்ளோம். இதை கண்டுபிடிக்க 10 மாதங்கள் ஆகியது. இதுபோன்ற கண்டுபிடிப்பு மாற்று திறனாளிகளுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அதிக மைலேஜ் கருவி
மேலும் இந்த கண்டுபிடிப்பு குறித்து காப்புரிமை பெற விண்ணப்பித்து உள்ளோம். இதுபோன்ற கண்டுபிடிப்பை உலக அளவில் யாரும் கண்டுபிடிக்க வில்லை. ஆகையால் இந்த மெக்கானிசம் எங்களின் திறமைக்கு கிடைத்த பரிசாக கருதுகிறோம். இந்த கண்டுபிடிப்பை நாங்கள் கோவையில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் சமர்ப்பித்த போது எங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த 3 சக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் கோவையை சேர்ந்த வர்க்கீஸ், ராஜன் ஆகியோரது கண்டுபிடிப்பான வி.மெர்ஜ் என்ற அதிக மைலேஜ், புகை மாசு குறைக்கும் கருவியை பொருத்தி உள்ளோம். இதனால் எங்கள் வாகனம் தற்போதைய மைலேஜில் இருந்து 25 கிலோ மீட்டர் வரை கூடுதலாக கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு வேண்டும்: துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி


"ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கும் உரிமையும் வழங்க வேண் டும்,'' என, துணை ஜனாதிபதி, ஹமித் அன்சாரி கூறினார்.

டில்லியில் நடந்த தேசிய வாக்காளர் நாள் விழாவில், அன்சாரி பேசியதாவது:கடந்த, 60 ஆண்டுகளில், 15 லோக்சபா தேர்தல் களையும், 350 மாநில சட்டசபை தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.ஓட்டளிப்பது அனைவரின் கடமை. அனைவரும் ஓட்டளிப்பதில்லை என்பது வருத்ததற்குரியது. ஓட்டுரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதிக பெரும்பான்மை பெற்றவர் மட்டுமே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும். ஏனெனில், வெற்றி பெற்றவர் களில் பலர், மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெறுகின்றனர்.

தனக்கு விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்யும் வாக்காளர், அவரின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றால், அவரை நிராகரிக்கவும் வேண்டும். அதுபோல, வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என, தெரிவிக்கும் உரிமையும் வழங்க வேண்டும்.இவ்வாறு ஹமித் அன்சாரி கூறினார்.

வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்


அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.

தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், பாடத் திட்ட வளர்ச்சி குழு அமைக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக பாடத் திட்டங்களை, உலக தரத்திற்கு உயர்த்துவதே, இக்குழுவின் நோக்கம். ஒரு பல்கலைக்கு, ஒரு கோடி என, 10 கோடி ரூபாய், இதற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், உயிரி அறிவியல், உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் வர்த்தக அறிவியல், இந்திய மொழி, அயல்நாட்டு மொழி உள்ளிட்ட, 10 துறைகளின் கீழ் உள்ள பாடத் திட்டங்களில், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, இக்குழு ஆராயும்.

ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு, இன்றைய வேலை வாய்ப்புகளுக்கேற்ப, பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும். பல்கலைக்கழக துறை பாடத் திட்டங்களை பதிவு செய்யும் வகையில், தனி இணையதளம் அமைக்கப்பட உள்ளது.

மாற்றம் செய்யப்படும் பாடத் திட்டங்கள், இதில் பதிவு செய்யப்படும். இந்த இணையதளம், உலக அளவில் உள்ள பேராசிரியர்களை ஒருங்கிணைக்கிறது. இணையதள தொடர்பு மூலம், துறை பேராசிரியர்கள் வெளிநாட்டில் உள்ள அதே துறை பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, கல்வி கற்கும் முறைகள், பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விவாதித்து, சர்வதேச தரத்திற்கு கல்வி மேம்பாட்டு வழிகளை மேற்கொள்வர்.

உலகளவில் துறை வாரியாக உள்ள பேராசிரியர்கள் பற்றிய, அடிப்படை புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகிறது. ஒரு ஊரிலிருந்து, மற்றொரு ஊருக்கு இடமாறும் மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பாடத்திட்டங்களே, இதற்கு அடிப்படையாக அமைகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பாடத் திட்டங்களையும் முறைப்படுத்தி, ஒரே பாடத் திட்டம் கொண்டு வரப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, ஒரே பாடத்திட்ட முறையால், மாணவர்கள் பெரும் பயனடைவர். தொழில் வல்லுனர்கள், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், நூலகர்கள், விளையாட்டு இயக்குனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பாடத்திட்ட மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சி குழு இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், "சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் பாடத் திட்டத்தால், மாணவர்களுக்கு உலக தரமான கல்வி கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இடமாற்றத்தில் செல்லும் மாணவர்கள், கல்வி தொடர உதவும். அடுத்தாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும், என்றார்.