Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 10 ஏப்ரல், 2013

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்: ஆக்டா


 "உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்த வேண்டும்" என, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் (ஆக்டா) கேட்டுக்கொண்டுள்ளது. ஆக்டா சார்பில், "இந்திய உயர்கல்வியில் உள்ள சிக்கல்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் ஆறாவது கல்வி மாநாடு நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது. ஆக்டோ மாநில தலைவர் ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார்.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பூனாட்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், "ஒரு மனிதன் கற்கும் கல்வியே, அவனை ஆற்றல் மிக்கவனாக மாற்றுகிறது. ஆற்றல் மிக்க ஒருவரால் தான், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். மனிதனை முழு மனிதனாக மாற்றுவது கல்வியே. கல்வி மூலம் மட்டுமே நாடு வளர்ச்சியை அடைய முடியும் என்பதால், உயர்கல்வி வளர்ச்சியில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்து வருகிறது," என்றார்.

மாநாட்டில், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசியதாவது:
உயர்கல்விக்கு புதிய வலுவான பாதையை அமைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மட்டுமின்றி, மாணவர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உயர்கல்வி திகழ வேண்டும்.

தமிழக பல்கலைகள், உலக தரத்திலான கல்வியை வழங்கும் நோக்கத்தோடு, தமிழக அரசு செயல்படுவது பாராட்டுக்குறியது. சர்வதேச தரத்திற்கு இணையாக பாடத்திட்டங்களை வகுக்க, பாரதிதாசன் பல்கலையில் 10 மையங்கள் செயல்படுகிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி போன்ற துறைகளில் மட்டுமே மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அனைத்து துறைகளும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்காலத்துக்கு ஏற்றவாறு தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டு, சவால்களை சந்திக்கவும், மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிக்கவும் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் பாடம் சாராத ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக, பாரதிதாசன் பல்கலையில் மைக்ரோ சாஃப்ட் பயிற்சி மையத்தை துவங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆக்டோ துணைத் தலைவர் பிரேமா உள்பட பலர் பேசினர். பொருளாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார். மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். உயர்கல்வியின் வளர்ச்சிக்கு தனியார் மயத்தை ஊக்குவிக்கும் போக்கை எதிர்த்து மாணவர்களும், ஆசிரியர்களும் பொதுமக்களுடன் இணைந்து போராட வேண்டும்.

உயர்கல்வியின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையிலான, தனியார் மயம், கட்டண கொள்ளை, வணிக நோக்கம், அரசு உதவி பெறும் கல்லூரிகளை புறக்கணித்தல் போன்றவற்றை எதிர்த்து தமிழகத்திலும், தேசிய அளவிலும் இயக்கங்கள் நடத்த வேண்டும் போன்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கலவரம்


நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு, மோதல் நடந்து வருகிறது. மோதலில் மாணவர்கள் காயம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இது குறித்து யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. அதனால் மாணவர்கள் பிரச்சனை தொடர் பிரச்சனையாக உள்ளது.

 இந்நிலையில் நேற்று மீண்டும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதோடு கல்லூரி மற்றும் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். கல்லூரி கண்ணாடி, ஜன்னல்கள், கதவுகளை அடித்து நொறுக்கினர். மேலும் லேப் மற்றும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை உடைத்தனர். இது தவிர கல்லூரிக்கு சொந்தமான 4 கார்களை சேதப்படுத்தினர். இதனால் கல்லூரி போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த கலவரத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கல்லூரி பொருட்கள் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


இந்தியாவில் உயர் கல்வி தரம்: குடியரசுத் தலைவர் கவலை


உயர் கல்வி நிறுவனங்களில் தரம் என்பது பெரும் சவாலாக உள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

குருஷேத்ராவில் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரணாப், "தரம், அணுகுமுறை ஆகியன உயர் கல்விக்கு அவசியமான ஒன்று எனவும், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி கழகங்கள் மாணவர்கள் கொந்தளிப்பு அதிகம் நிறைந்த இடமாக உள்ளது எனவும், உலகில் உள்ள முதல் சிறந்த 200 பல்கலைகழகங்கள் பட்டியலில் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை" எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.