Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஆழ்வார்குறிச்சியில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம்



ஆழ்வார்குறிச்சியில் பரமகல்யாணி கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் புதிய திட்டம் துவக்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சியில் வாழும் குடும்பங்களுக்கு பூச்சி மருந்து, செயற்கை உரம் பயன்படுத்தப்படாத புதிய காய்கறிகளை அவர்களாகவே உற்பத்தி செய்து கொள்வதற்காக இல்லம் தோறும் ஒரு காய்கறி தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறி விதைகளை வழங்கி வீட்டு தோட்டம் அமைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித்சிங் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ஆர்.ரஞ்சித், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் திட்டத்தை அறிமுகம் செய்து தோட்டம் அமைக்கும் ஆலோசனை, செய்முறை பயிற்சி ஆகியவற்றை என்எஸ்எஸ் அலுவலர் ரஞ்சித் எடுத்து கூறினார்.

என்எஸ்எஸ் திட்ட அணிகள் 18, 19, 120, 177, 178 ஆகியன சார்பில் திட்ட அலுவலர்கள் முத்துலட்சுமி, சுதாகரன், ராஜகோகிலா மேற்பார்வையில் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜசேகர், பாண்டியராஜா, சிதம்பர பிரியதர்ஷினி, மணிமேகலா ஆகிய குழுவினர் வீடு வீடாக சென்று காய்கறி விதைகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக டவுன் பஞ்., தலைவர் முத்தையா கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து காய்கறி விதைகளை வழங்கினார். சுதாகரன் நன்றி கூறினார்.

வீடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் காய்கறி விதைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் காய்கறி தோட்டம் அமைத்திருக்கும் வீடுகளுக்கு 1 மாதத்திற்கு பின்னர் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.