Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 7 ஜனவரி, 2013

துவக்க பள்ளி ஆசிரியர்களாக பல்கலை மாணவர்கள் நியமனம்

தெற்கு டில்லி பள்ளிகளில், டில்லி பல்கலைக் கழக இளநிலை மாணவர்கள், பாடம் எடுக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், டில்லி பல்கலைக் கழகமும் ஒன்று. இங்கு, இளநிலை பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, படிப்புடன், "எக்ஸ்ட்ரா கரிகுலர்' எனப்படும், கூடுதல் திறன் அம்சங்கள் தான் அதிகம். தெற்கு டில்லி கார்ப்பரேஷன் பகுதியில், ஏராளமான துவக்க பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

அந்த பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், "எக்ஸ்ட்ரா கரிகுலர்' நன்கு அனுபவம் வாய்ந்த, டில்லி பல்கலைக்கழக மாணவர்களை, பகுதி நேர ஆசிரியர்களாக, துவக்க பள்ளிகளில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஏராளமான மாணவர்கள், தினமும், ஒன்றிரண்டு மணி நேரம், தங்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். குறிப்பாக, பேச்சுக்கலை, ஆங்கில அறிவு, நடிப்பு திறமை, விளையாட்டு, ஓவியம் வரைதல் போன்ற பாடங்களை, பல்கலைக் கழக மாணவர்கள் எடுக்கின்றனர். இதற்காக, அவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது குறித்து, தெற்கு டில்லி கார்ப்பரேஷன் கல்வி கமிட்டி தலைவர், சதீஷ் உபாத்யாயா கூறியதாவது: "எக்ஸ்ட்ரா கரிகுலர்' நடவடிக்கைகளில், டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் அதிகமாக ஈடுபடுவதை அறிந்தோம். எங்கள் பள்ளிகளில் நிறைய ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. அந்த இடங்களில், ஆசிரியர்களை நியமிக்க, அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை காணப்பட்டது. எங்கள் கோரிக்கையை மாணவர்கள் ஏற்று கொண்டனர். ஆர்வமாக அவர்கள் பாடம் நடத்துகின்றனர்; மாணவர்களும் ஆர்வமாக பாடம்கற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

தியாகத்தின் மறுபெயர் "பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்" ...........!


அரசியலில்......! சந்தனத்தை விட சாக்கடை மணம்தான்
அதிகம் என்பது சுதந்திரத்துக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட புழுதிபடிந்த, முட்கள் நிறைந்த அரசியல் பாதையில் கறைபடியாத தன் காலடிச் சுவடுகளால் கண்ணி யத்தை பேணிய புண்ணியத் தலைவர் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் தலைமையில் தூய்மையான அரசியல் நடத்தி வெற்றி பல கண்டு நூற்றாண்டு வரலாறு கொண்ட பேரியக்கம் நம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக். விடுதலை பெற்ற இந்தியா வில் வாழ்ந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் யாருக்கும் கொத்த டிமைகளாக, அனாதைகளாக ஆக்கப்படாமல், புறந்தள்ளி விடாமல், பாதுகாப்பு குரல் கொடுத்து எல்லா உரிமைகளை யும் பெற்ற குடிமக்களாக வாழ மட்டுமல்ல, ஆளவும் உரிமை யுண்டு என்ற உணர்வை ஊட்டி முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வீர நடைபோட வைத்த இயக்கம் இந்திய யூனியன்முஸ்லிம் லீக்.

பிறப்பு
இன்று தமிழகத்தில் வாழும் ஆறு கோடி மக்களில், அறுபது லட்சம் முஸ்லிம்களின் தாய்ச் சபையாக விளங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகீன் அற்புதத் தலைவராக அமர்ந் துள்ள முனீருல் மில்லத்
பேரா சிரியர் மூன்றாவது பெருந்தகை யின் எழுபத்தி மூன்றாவது பிறந்த நாள் ஜனவரி 5-ஆம் நாள். 1940 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
திருநல்லூர் கிராமத்தில் பிறந்து திருச்சிக்கு 1949-ல் பெற்றோருடன் குடியேறினார். சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து தமிழகத்தின் தாய்ச்சபை தலைவராகவும், தேசிய பொதுச்செயலாளராகவும் பொறுப்பு ஏற்றுள்ள பேராசிரியரின் வாழ்வோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறும் இணைந்திருக்கிறதுஎன்று கூறுவது பொருந்தும்.

தீன் புகழ் மணக்கும் திருச்சி மாநகர பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பால பருவத் திலேயே தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காயிதெ மில்லத் (ரஹ்) தலைமையை ஏற்றவர். 1956-ம் ஆண்டு திருச்சியில் காயிதெ மில்லத் கலந்து கொண்ட முஸ்லிம் லீகின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தபோது விழா nடையில் நாடறிந்த நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப், மூத்த தலைவர் கே.எஸ். அப்துல் வஹாப் ஜானி சாஹிப் உள்பட முன்னோடி தலைவர்கள் வீற்றிருக்க, புரட்சி எழுத்தாள ரும், கவிஞருமான அறிஞர் மதனீ அவர்களால் அழைத்து வரப்பட்ட எளிய தோற்றமும்,ஒல்லியான உருவமும் கொண்ட இளைஞர் மேடையேறி காயிதெமில்லத் அவர்களுக்கு மாலை அணிவித்துவிட்டு அற்புதமான வரவேற்புரையாற்றினார். அன்று முதல் மேடை அரங்கேற்றம் செய்தஅந்த இளைஞர்தான் இன்றைய நம் தாய்ச்சபையின் தங்கத்தலைவர் முனீருல் மில்லத் அவர்கள் என்று எண்ணும் போது இதயம்மகிழ்ச்சியால் பொங்கி பூரிக் கிறது. அல்ஹம்துலில்லா ஹ்

 வாழ்க்கை
இன்று எழுபத்தி மூன்று வயதை தொட்டு நிற்கும் தலைவரின்பெற்றோர் பெயர் முஹம்மது ஹனீப் - காசிம் பீவி தம்பதியின் 6-வது பிள்ளையாக பிறந்தார். உடன்பிறப்புக்கள் 11 பேர்கள். 2சகோதரிகள் - பேராசிரியரைத் தவிர அனைவரும் வணிகத்துறையில் ஈடு பாடு கொண்டவர்கள். திருச்சியில் முதல் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளி வரை பின்னர் ஜமால் முஹம்மது கல்லூரி, புனித சூசையப்பர் கல்லூரிகளில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரி யில் பி.எல். பட்டப்படிப்பை மேற்கொண்டு, மாநில கல்லூரி யில் வரலாறு பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற அவர், அதில் முதல் மாணவராக தேர்வு பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். பிறகு சென்னை பல்கலைக் கழகத்தில் டாக்டர் கே.கே. பிள்ளை அவர்களிடம் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து பி.எச்.டி. ஆய்வு படிப்பை மேற்கொண் டார். 1966-ஆம் ஆண்டில் லதீபா பேகம் அவர்களை வாழ்க்கை துணைவியாக திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு கலீலுர் ரஹ்மான் - ஹபிபுர் ரஹ்மான், பைஸுர் ரஹ்மான் ஆகிய மூன்று ஆண் மக்கள் உள்ளனர். 1965-ஆம் ஆண்டில் திருச்சி ஜமால் முஹம்மது கல் லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்து 1974 முதல் 1980 வரை வரலாற்றுத்துறை தலைமை பேராசிரியராகவும் பணியாற் றினார். 1977 முதல் 1980 வரை சென்னை பல்கலைக்கழக செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக கமிட்டி உறுப்பினராகவும் கல்வி பணியாற்றினார்.

ஒரு சிறந்த கல்வியாளர் மட்டுமல்ல, ஏழை மாணவர்க ளுக்கு கல்வி உதவிசெய்வதில் கருணை உள்ளமும் கொண்டவர். அவர்களின் ஏற்றத்தை குறிக்கோளாக கொண்ட மாணவர் விடுதி ஒன்றை  நிறுவி 15 ஆண்டுகள் பலரும் பாராட்டும் வண்ணம் நடத்தி உணவு, உறைவிடம், கல்வி உதவி அனைத்தும் இலவசமாக வழங்கி, இயலாமையில் உழலும் ஏழை மாணவர்களுக்கு தந்தையாக இருந்து, தன் சொந்த பணத்தை பெரு மளவில் செலவிட்டு ஏழை மாணவர்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்தவர் நம் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் பெருந்தகை. மாணவர்களிடையே நல் ஒழுக்கமும், நற்பண்புகளும் நிலவிட மார்க்க ஞானமே மனிதனை நேர்வழியில் செலுத்த முடியும் என்ற நம் பிக்கை கொண்ட பேராசிரியர் அவர்கள், கல்லூரியில் `குர் ஆன் மஜ்லிஸ்’ என்ற அமைப்பை துவக்கி நடத்தி திருக்குர்ஆன் மாநாடுகளை சிறப்பாக நடத்தி அல்லாஹ்வின் அருள்மறையை அனைவரும் அறிந்து வாழ்க்கை நடத்த பணி யாற்றினார்.

ஆசிரியர்களுக்காக சிறை சென்ற சிங்கம்
எம்.ஜி.ஆர். முதலமைச் சராக இருந்த காலத்தில் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி 15 நாட்கள் சிறையில் இருந்த சிங்கம் பேராசிரியர் அவர்கள். திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி வரலாற்றுத் துறை தலைமைப்பேராசிரியராக ஏற்றம் பெற்று, அக்கல்லூரியின் அடுத்த முதல்வர் என்ற எதிர்பார்ப்பு இருந்த அருமை யான நேரத்தில் – அதிகமான சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருந்த பணியை நம் இதயம் கவர்ந்த இனிய தலைவர் சிராஜுல் மில்லத் அழைப்பை ஏற்று பேராசிரியர் பணியை துறந்து சமுதாயத்திற்காக தியாகம் செய்த செம்மல் ஆன நம் தலைவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

தேர்தல் களம் 
தாய்ச்சபையின் மாநில செயற்குழுவின் கட்டளையை ஏற்று 1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக திருச்சி -2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து மீண்டும் 1989-ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு, 1996-ஆம் ஆண்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதியிலும், அதன்பிறகு 2001-ம் ஆண்டு மீண்டும் திருச்சி சட்டமன்ற தொகுதி யிலும் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் மிக குறை வான ஓட்டு வித்தியாசத் தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஐந்து முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், வாழ்க்கையிலும் பல சோதனைகள், பல வேதனைகள், பொருளாதார இழப்புகள், மிகப் பெரும் அளவில் எதிர்நோக்கியபோதும், வேறுயாராக இருந்தாலும் நிலைகுலைந்து போயிருப்பார் கள். ஆனால், நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் கொள்கையில் அசையாத மலையாக நின்று, பொறுமையை மேற்கொண்டு சமுதாயஇயக்கப் பணிகளை கவனித்தார். வல்ல அல்லாஹ், அருமைத் தலைவரின் பொறுமைக்கு தொடர் வெற்றிகளை தந்து அருள்புரிந்துள்ளான். அல்ஹம் துலில்லாஹ்.

ஆம்! 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு 1,78,810 வாக்கு கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். நாடாளுமன் றத்தில் நம் சமுதாயத்தின் சங்கநாத முழக்கம் நம் தலைவர் மூலம் எதிரொலிக்கச் செய்தான் வல்லோன் அல்லாஹ். இறைவ னின் நாட்டத்தை நாம் அறிவோமா? நம் தலைவரின் அடக்கமான பொறுமைக்கு அல்லாஹ் தந்த அழகான சன்மானம் இது என்று சொன்னால் அது மிகையாகாது. 1981-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதியில் `தாருல் குர்ஆன்’மாதமிருமுறை இதழ் தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்து நடத்தி னார். பிறகு 1996-ம் ஆண்டு `மணிச்சுடர்’ நாளிதழ் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தலைவர் சிராஜுல் மில்லத் மறைவுக்குப் பிறகு 27-4-1999 தேதி முதல் மணிச்சுடர் ஆசிரியர் பொறுப்பை ஏற்று இன்று வரை சிறப்பாக நடத்தி, அதன் வெள்ளி விழா மற்றும் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டு சாதனை படைத்து, இதழியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ள இதழியல் மாமணி பேராசிரியர். 1960 முதல் 62 வரை மாணவர் அணி அமைப்பாள ராகவும், பிறகு சில ஆண்டுகள் மாநில, இளைஞர் அணி பொருப்பாளராகவும், 1988 ஆம் ஆண்டு மாநில முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு மாநில முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராகவும், 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்நாடு மாநிலத்தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பான முறை யில்பணியாற்றி சாதனை படைத்து வருகிறார்.

தலைமைச் செயலகம்
இன்று தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் இயங்கி வரும் தாய்ச்சபையின் தலைமைச் செயலகம் - 1960-ம் ஆண்டு நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டுக்காக திரட்டப்பட்ட நிதிகளில் இருந்து மிகவும் சிக்கனமாக செயல்பட்டு இறுதியில் ரூ.35,000/- மிச்சப்படுத்திக் கொடுத்தார். அதற் காக அவரைப் பலரும் வியந்து பாராட்டினர். இந்த பணத்தில் வாங்கப்பட்ட கட்டிடம். அன்று காயிதெமில்லத் காலத்தில் தலைமைச் செயலகமாகவும், முஸ்லிம் லீகின்அதிகாரப்பூர்வ மான வார இதழ் உரிமைக்குரல் அலுவலகமாகவும் செயல் பட்டது.
தலைவர் சிராஜுல் மில்லத் மறைவுக்கு பிறகு தலைவராக பொறுப்பு ஏற்ற அருமைத் தலைவர் முனீருல் மில்லத் ஆற்றல் மிக்க தலைமையில் சென்னை மாவட்டத் தலைவ ராக செயல்பட்ட ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார் அவர்களின் ஒத்துழைப்பால் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இன்று காயிதெ மில்லத் மன்ஸில் என்ற பெயரில் புத்துருப் பெற்று விளங்குகிறது. இதில் மணிச் சுடர் நாளிதழ் அலுவலகமும், முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை அலுவலகமும் செயல் பட்டு வருகிறது என்றால் இந்த சாதனையை படைத்த பெருமை பேராசிரியரையே சாரும்.

தாய்ச்சபைக்கு பெருமை சேர்த்த தலைவர் 1999 மார்ச் 9, 10 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டை மாநில பொதுச் செயலாளர் என்ற முறையில் சிறப்பாக நடத்திட தலைவர் சிராஜுல் மில்லத் துடன் இணைந்து பாடுபட்டு, அந்த தலைவரால் மாநாட்டின் `ஹீரோ’ எனவர்ணிக்கப்பட் டார். அதன் பின்னர் மாநில தலைவராக பொறுப்பு ஏற்ற பின்னர் ஜுன் 21, 2008 ஆம் ஆண்டில் மணிவிழா மாநாடும், 2010 டிசம்பர் 11-ல் மீண்டும் ஒரு மாநில மாநாடும் சிறப்பாக நடத்தி வரலாறு படைத்தார்.
1-02-2009 ஆம் ஆண்டு சென்னையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உல மாக்கள், உமராக்கள் மாநாடு நடத்தி அதன் விளைவாக உலமாக்கள் - பணியாளர்கள் நலவாரியம் அமைவதற்கு காரணமாக இருந்தார். அதே ஆண்டில் மண்டல மாநாடுகளும்,கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் பள்ளபட்டி மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களில் 2010-2012 ஆண்டு களில் சிறப்பாக நடத்தச்செய்தார். திருமண கட்டாய பதிவு சட்டம் திருத்தி அமைக்கவும், முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இடஒதுக்கீடு கிடைக்க வும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையிலிருந்து விடுதலை பெறவும், முஸ்லிம் களின் உரிமைகள் பாதுகாக்கப் படவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பல்வேறு முயற்சிகளை எடுத்து மத்திய - மாநில அரசுகளின் கவனத் திற்கு கொண்டு வந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு பெற்று டெல்லி சென்றதும் அனைத்துக் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கி ணைத்து ஒரு குழுவாக சென்று பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி அம்மையார் ஆகியோரை சந்தித்து முறை யிட்டதன் மூலமாக நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷன் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் போன்றவை அமைக்கப்பட்டன. இதன் மூலம் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார,வேலைவாய்ப்புகளின் பின்னடைவுகள் குறித்தும், சிறுபான்மை மக்களின் உண் மையான நிலைமை உலகிற்கும், இந்திய ஆட்சியாளர்களுக்கும் , நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்ட வழிவகுத்தவர் நம் தாய்ச்சபையின் தானைத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

தேசிய பொதுச் செயலாளர்
தலைவரின் எளிமையும், தூய்மையும், தியாகமும் அவரைத் தேடி தேசிய துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர் பொறுப்புகள் வர காரணமாக அமைந்தன. தியாகத்தின் தழும்புகள் பல பெற்று இயல்பாக அமைந்துள்ள அறிவால், ஆற்றலால் இன்று தமிழக தலைவர்களில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். சிந்தனைச் செம்மல், அறிஞர் பெருந்தகை சிராஜுல் மில்லத் அவர்களால் தாய்ச்சபையின் தலைவராக அன்றே கணிக் கப்பட்டு
இனங்காட்டப்பட்ட முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள். தம் அரிய உழைப்பால், எடுப்பான பேச்சால், எந்த டாம்பீகமும் இல்லாமல் இயக்க கண்மணி தன் தோழர்களாக காண இனிப்பவர். தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே பெயரில் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆக்கிய பெருமை அவருடைய தனித் திறமையாகும்.

தேர்தல் ஆணைய அங்கீகாரம் 
தாய்ச்சபைக்கு `ஏணி’ சின்னத்தை பெற்றுத் தந்து புகழேணியின் உச்சத்தில் உள்ள அவரை பொறாமைத் தீ, தீண்டாமல் விடவில்லை. என்றாவது கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்டு நில்லா மல் அனைவரும் தாய்ச்சபையில் இணையுமாறு தாய் உள்ளத்துடன் அழைப்பு விடுத்துக் கொண்டு இருப்பது அவரின் மிகஉயர்ந்த அரசியல் பண்பாக அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றே உள்ளது.


2012 டிசம்பர் 2ம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளராக பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட போது வாழ்த்து முழக்கம் பலமாக ஒலித்தது. அதற்கு காரணம் 14.09.2008ல் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளராக தேர்வு பெற்ற போது பேராசிரியர் தெரிவித்த உறுதியான அறிவிப்பு , “ இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் செயல்பட வேண்டும்” என்பதுதான் அவரது ஆசையும் முயற்சியும் நிறைவேறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 03.03.2012 ல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

'முஹ்யீத்தீன்’ என்பதற்குப் பொருள் `தீனை உயிர்ப்பித்தவர்’என்பது பொருள். ஆம், தீன்குலத்தின் தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகை, உயிர்ப்பித்து அதை புகழின் உச்சத்திற்கு கொண்டு வந்து - கொண்டி ருப்பவர். அதற்கு முஸ்லிம் லீகின் வரலாற்று சாதனைகளே சாட்சி. கனிவை காயிதெமில்லத்திடமும், செயலை சிராஜுல் மில்லத்திடமும் பெற்றுள்ள முனீருல் மில்லத், நலம் சூழ - வளமுடன் வாழ - இருகரமேந்தி இறைஞ்சுவோம். ஏக இறைவன் வல்ல அல்லாஹ்விடம்!

- கவிஞர் வி.எஸ். முஹம்மத் ஃபஸ்லுல்லாஹ்

காங்கிரசின் வேடிக்கை : கட்சியைவிட்டு வெளியேறிவருக்கு காங்கிரஸ் கட்சியின் கமிட்டி கூட்ட அழைப்பு


 அகில இந்திய காங்., கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ரங்கசாமிக்கு காங்., மேலிடம் அனுப்பியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்., கமிட்டி கூட்டம், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாநிலத்தில் நடத்தப்படுவது வழக்கம். இதில் பங்கேற்க, நாடு முழுவதும் உள்ள அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர்களுக்கு - ஏ.ஐ.சி.சி., மேலிடம் கடிதம் அனுப்பும்.

இந்த ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், 20ம் தேதி அகில இந்திய காங்., கமிட்டி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாநிலங்களிலும் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல, புதுச்சேரியில் உள்ள அகில இந்திய காங்., உறுப்பினர்கள், 11 பேருக்கு காங்., மேலிடம் கடிதம் அனுப்பியுள்ளது.

கடிதங்கள், மாநில காங்., அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த, 11 பேரில், தற்போதைய முதல்வர் ரங்கசாமியின் பெயரை குறிப்பிட்டு வந்துள்ள கடிதமும் அடக்கம். இந்த கடிதத்தால், புதுச்சேரி காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2010ல், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி, காங்., கட்சியில் இருந்து வெளியேறி, என்.ஆர்., காங்., என்ற புதிய கட்சியை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொல்லி, ஓராண்டுக்கு மேலாகியும் அகில இந்திய காங்., உறுப்பினர் பட்டியலில் இருந்து, ரங்கசாமியின் பெயரை நீக்காததால் இந்த கூத்து அரங்கேறியுள்ளது.

பணி நியமனம், பதவி உயர்வு: தமிழகத்தில் இரட்டை பட்டப்படிப்புக்கு தடை


தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் இரட்டை பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அந்த தகுதி அடிப்படையில், நேரடி நியமனம் செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், தொடக்க கல்வித்துறையில் பல்வேறு தொகுப்பு வழக்குகள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் 2012 ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து பல்கலை.,களில் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவர், இரட்டை பட்டப்படிப்பு மூலம் ஓராண்டில் (2 பட்டபடிப்பு) பெறும் பட்டத்தை 3 ஆண்டு பட்ட படிப்பிற்கு இணையாக கருத முடியாது. எனவே, பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இத்தகுதிகளை ஏற்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

"உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை"


 நாட்டில், உயர் தரத்துடன் உயர் கல்வியை, குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது என்றும், உயர் கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள், 30 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ கூறினார்.

கொச்சியில், விழா ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: நமக்கு இப்போது தேவை, தரமான கல்வி. குழந்தைகளுக்கு தரமான உயர் கல்வி கிடைக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தப்படுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள், 30 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. இதை பலப்படுத்துவது அவசியமாகிறது.

இந்தியாவில், 55 கோடி இளைஞர்கள், 24 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இது இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு. இவர்கள், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில், பார்லிமென்டில் மசோதா கொண்டு வர முயற்சித்தும், நிறைவேறாமல் தள்ளிப் போய் கொண்டுள்ளது. வரும் பட்ஜெட் தொடரில், இந்த மசோதா கண்டிப்பாக கொண்டு வரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.