Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 6 பிப்ரவரி, 2013

வருகிற கல்வியாண்டு முதல் எம்.ஏ., எம்.எஸ்.சி. படிப்பில் சேர இனி கவுன்சிலிங்


தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட 11 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் 62 அரசு கல்லூரிகள் 132 அரசு உதவி பெறும் கல்லூரிகள் 500-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் ஒற்றை சாளர முறையில் சேர்க்கப்படுகிறார்கள். அதுபோல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.

உயர் கல்வி வணிக மயமாகும் சூழலில் இருந்து விடுபட ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை அவசியம் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கே.பாண்டியன் கூறினார்.

இந்த நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்ட உயர்கல்வி மன்ற கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் சந்தியா பாண்டியன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக எம்.ஏ., எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். படிப்படியாக இந்த கலந்தாய்வு முறை பட்டப்படிப்புகளுக்கும் (பி.ஏ., பி.எஸ்.சி.) விரிவாக்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகம் உள்பட 11 பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பல்கலைக்கழக அளவிலும் ஒற்றை சாளர கலந்தாய்வு நடத்தப்படும். பொறியியல் படிப்புக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டும் உள்ளதால் மாநிலம் முழுவதும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆனால் கலை, அறிவியல் பிரிவில் 11 பல்கலைக்கழகங்கள் உள்ளதால் பல்கலைக்கழக அளவில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அரசுக்கு அனுப்பி உள்ளது. வருகிற கல்வியாண்டில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

வேலையில்லாத இளைஞர்களுக்கு பல்கலை கழக துணைவேந்தரின் ஆலோசனை


"தொழிற்சாலையில் பணிபுரிவதற்குரிய தகுதியான மாணவர்களை கல்லூரிகள் உருவாக்கவேண்டும். வேலை தேடும் மாணவர்கள் தகவல் தொடர்பு குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம்,'' என்று பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.

பாரதிதாசன் பல்கலை வணிகவியல், நிதித்துறையின் தொழிற்சாலை ஒருங்கிணைப்பு மையம், இந்திராகாந்தி கல்லூரி வேலைவாய்ப்பு சார்பில், 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.ஆடை வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட, 32 நிறுவனங்கள் பங்கேற்றன. மாநிலம் முழுவதும் இருந்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இவர்களில், 1,053 மாணவர் பணி நியமன ஆணைகளை பெற்றனர்.விழாவில், துணைவேந்தர் மீனா பேசியதாவது:பாரதிதாசன் பல்கலை இணைவுப்பெற்ற, எட்டு மாவட்ட கல்லூரி மாணவர்களுடன் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த, 7,000 மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான திறன் வாய்ந்த பணியாளர்களை, இதுபோன்ற முகாம்களில் தேர்வு செய்வது தற்காலத்தின் சிறப்பு அம்சம்.

தொழிற்சாலையில் பணிபுரிவதற்குரிய தகுதியான மாணவர்களை கல்லூரிகள் உருவாக்கவேண்டும். வேலை தேடும் மாணவர்கள் தகவல் தொடர்பு குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம். வேலைக்கு முயற்சிக்கும் கடைசி நேரத்தில் இதற்கென மெனக்கெடாமல், கல்லூரியின் முதலாம் ஆண்டிலேயே பயிற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், கல்லூரிச் செயலாளர் குஞ்சிதபாதம், பல்கலை வணிகவியல், நிதித்துறை செல்வம், கல்லூரி முதல்வர் வித்யாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு


கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி, பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இதனால் போக்குவரத்து செலவு, காலவிரயம், அலைச்சல் மற்றும் பிற இன்னல்கள் தவிர்கப்படுகிறது.

ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆகஸ்ட் 2011 முதல் ஜனவரி 2013 முடியவுள்ள புதுப்பித்தல் காலக்கெடுவிற்குள் புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் 28.2.2013க்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம். இந்த புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவோ அல்லது மனுச் செய்யவோ தேவையில்லை.

வீட்டில் உள்ள இணையதள வசதி உடைய கம்ப்யூட்டரிலோ அல்லது ஏதேனும் இண்டர்நெட் மையங்களிலோ சிறப்பு சலுகை அடிப்படையில் புதுப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிட் விற்பனையை ஏன் நிறுத்தக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி


கடந்த 2006ம் ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஆசிட் வீச்சை வழக்குகளை விசாரிக்க இந்திய குற்றவியல் சட்டத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்கவேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இம்மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ஆசிட் வீச்சு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றும், ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிக்கப்படவேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், மத்திய உள்துறை செயலர் தலைமையில் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும், அதில் ஆசிட் விற்பனையை தடை செய்தல், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு, சிகிச்சை மற்றும் நிவாரணம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விசாரணையின் போது, ஆசிட் வீச்சு தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்த குற்றம் செக்ஷன் 326 (ஏ) மற்றும் (பி) ஆகியவற்றின் கீழ் வர வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.