Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 24 அக்டோபர், 2012

மனித குலத்திற்கான மாநபியின் அரபா பிரகடனம் !

1417 ஆண்டுகளுக்கு முன்
 ஹிஜ்ரி 10-ஆம்; ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின்
இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மதீனாவிலிருந்து புனித மக்காவை நோக்கிப்புறப்பட்டபோது ஆயிரக்கணக்கான நல்லறத்தோழர்களும் அவர்களோடு பயணமாகினர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை அணுகிய போது, அரபு நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும் கூட ஆயிரமாயிரம் ஹாஜிகள் பெருமானார்(ஸல்)அவர்களின் திருக்கூட்டத்துடன் வந்து இணைந்தனர்.அவர்கள் ஒன்றேகால் இலட்சத்தையும் தாண்டிவிட்டனர்.

அரபாத் பெருவெளியில் திரண்டது இந்த மனித வெள்ளம்! எங்கு நோக்கினும் மனிதக்கூட்டந்தான்! இருபத்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் பெருமானாரைப் பேசவும் விடாமல் விரட்டியடித்த அதே மக்கள் இன்று மக்காவின் அரபாத் பெருவெளியில் குழுமினர்.

இந்த இருபத்து மூன்றாண்டுகளிலே எப்படிப்பட்ட அற்புதம் நடந்துவிட்டது! என்பதை எண்ணிப்பார்க்கவே பெரும் அதிசயமாக உள்ளது.

பெருமானார்(ஸல்)அவர்களுக்கு வாழ்வே இல்லையெனத் துரத்தியடித்த அதே மக்காநகரம் இன்று அவர்களின் ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தது!

பெருமானாரைக் கொலைசெய்வதையே தங்கள் இலட்சியமெனக் கொண்டிருந்தவர்கள், இன்று அவர்களது உயிர்த் காக்கும் தோழர்களாய், அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்வதே தங்களின் பாக்கியம் என நினைப்போராய்ச் சுற்றி நின்றனர்!!
பெருமானாரை இரத்தக்காயத்துடன் விரட்டியடித்த தாயிப் நகர மக்கள், இன்று அவர்களது ஆதரவாளர்களிலே முன்னணி வீரர்கள்!

பெருமானார் அவர்களைத் தூற்றுவதையும், தீங்கிழைப்பதையும், தொழிலாகக் கொண்டிருந்தோர், பெருமானாரின் புகழ்பாடுவதை பெருமையாக எண்ணினர். இன்று!

சுருங்கச்சொன்னால், ஒரே அணியில் மாபெரும் சக்தியாக எதிர்த்து நின்ற அந்த அரபு நாடு இன்று அவர்களது சுட்டுவிரலிலே அசைந்தாடியது. இதுதான் இறைவன் பேரருள் !

பெருமானார்(ஸல்) அவர்கள் மேடையிலே ஏறிநின்றார்கள்.சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்களுக்கு மேற்கொண்ட பிரமாண்டமான அந்த மக்கள் வெள்ளத்தின் கண்களும் காதுகளும் கூர்மையாயின. எங்கும் நிசப்தம்! ஊசி விழுந்தால்கூட கேட்கத்தக்க அமைதி!

மனித குலத்திற்கு அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய பெருமானார்
அங்கு கூடிய இருந்த மக்களை நோக்கி உரையாற்ற துவங்கினார்கள் ...,
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’ ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு
( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும்.(இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில்தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

குற்றவாளியே தண்டிக்கப்படவேண்டும் 
( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல., வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

அராஜகம் செய்யாதீர்கள்!
( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
                                                                            
                                                                                    வட்டி ஒழிப்பு 
( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்…

பெண் உரிமை 
மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

சகோதரத்துவம் 
மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!

பிறர் உடைமைகள் புனிதமானவை 
ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன்… அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன! இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

நேரான பாதை 
மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றிவாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திறகுச் செல்வீர்கள்.

மறுமைக்கு அஞ்சுதல் 
மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது 
மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல.வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தைவிடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

இஸ்லாம் முழுமை படுத்தப்பட்டது  
( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா?இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?’நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்!இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,’ அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!
இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள். மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்… ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். (ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது,இப்னு ஜரீர்)

உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கை பிரகடனம் செய்த மனிதப் புனிதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வழி பற்றி நடந்தால் , அவர்களின் நெறி பற்றி நடந்தால் உலகம் அமைதி பெரும் என்பதில் எள்ளின் முனை அளவுகூட சந்தேகம் இல்லை .அந்த பெருமானாரின் வழியை பின்பற்றவும் , அதனை உலக மாந்தருக்கெல்லாம் பரப்பவும் ,இந்த ஈகைத் திருநாளில் சபதம் ஏற்ப்போம் !