Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

போலீஸ் ஸ்டேஷன்களில் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைனில் புகாரை அனுப்பி வைக்கும் வசதி

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அதிகாரிகளுக்காக காத்திருக்காமல்,ஆன்-லைனில் புகாரை அனுப்பி ரசீது, எப்.ஐ.ஆர்., பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஆன்லைனில் குற்றவாளிகள் பற்றிய தகவலை தெரிந்து கொள்வதற்கான நவீன தொழில் நுட்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கம்ப்யூட்டரை இயக்குவது தொடர்பான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சேலத்தில் இத்திட்டத்தின் அனைத்து சிறப்பு அம்சங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.


அமல்: திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் நேற்று முதல் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து எப்.ஐ.ஆர்., குற்றவாளிகள் தொடர்பான விபரங்கள், அவர்களின் கைரேகை, கண்விழி பார்வை போன்ற அனைத்து தகவல்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


சிறப்பு பயிற்சி: மாவட்டத்தில் உள்ள 42 போலீஸ் ஸ்டேஷன்களில் புதிதாக பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆர்.,கள். இனி கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ரசீது, நகல் போன்றவை வழங்கப்படும். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 3 போலீசாருக்கு இதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் பதிவேற்றங்களை கண்காணிக்கவும், போலீஸ் ஸ்டேஷன்களின் பதிவுகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்தவாறு ஆன்லைனில் புகாரை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கலாம். பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.,கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் குற்றபத்திரிக்கை, சாட்சிகள் தொடர்பான விசாரணை அனைத்தையும் இணையதளத்தில் பார்க்கலாம். வழக்கு தொடர்பான போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான தகவல்கள், இந்த இணையதளத்தில் இடம்பெறாது. இத்திட்டத்தை, ஜெயச்சந்திரன் எஸ்.பி.,நேற்று துவக்கி வைத்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
""பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அதிக அளவில் புகார்கள் பெறுவதற்கான வாய்ப்பு இந்த திட்டத்தின்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டுபிடிப்பது, காணாமல் போனவர்கள் குறித்து எளிதில் தகவல்களை பெறுவது போன்ற நன்மைகள் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும்,''என்றார்.