Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சுற்றுலா கைடு - ஒரு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த தொழில்


சுற்றுலா கைடு என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த தொழிலாகும். ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நாட்டைப் பற்றிய ஒரு சிறந்த மதிப்பீட்டை, சுற்றுலாப் பயணிகளிடம் உருவாக்கும் ஒரு மாபெரும் பணியை கைடு மேற்கொள்கிறார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, நலன், திருப்தி மற்றும் சந்தோஷம் போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நல்ல தகவல்தொடர்பு திறன், வெளிநாட்டு மொழியில் புலமை மற்றும் பிறரிடம் சகஜமாக பேசிப் பழகும் பாங்கு போன்றவை ஒரு வெற்றிகரமான சுற்றுலா கைடுக்கு தேவையான பண்புகள்.

லைசன்ஸ் அளிக்கப்பட்ட கைடுகளின் வகைகள்

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், போதுமான தகுதிகளை அடைந்த கைடுகளுக்கு, பிராந்திய அடிப்படையில் லைசன்ஸ்களை வழங்குகிறது. மொத்தம் 5 பிராந்தியங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவையே. மாநில அளவிலான லைசன்ஸ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. இதற்கான விபரங்கள், அந்தந்த மாநில சுற்றுலாத் துறைகளின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.

பிராந்திய நிலையிலான கைடுகளில்(Regional level guides - RLG) 4 பிரிவினர் உள்ளனர்


1. பொது

முழுநேர அடிப்படையில், தங்களுக்கான பிராந்தியங்களில் இவர்கள் பணிபுரியலாம். இவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்களாக, பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், தங்களின் பள்ளி படிப்பிலும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

2. பொது - மொழி அடிப்படையிலான

பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், கொரியன், ரஷ்யன், ஜப்பானீஸ், தாய், அராபிக், ஹங்கேரியன், போலிஷ், ஹீப்ரூ மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் புலமைப்பெற்றவர்கள் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள். இவர்கள், அவ்வப்போது, சுற்றுலா அமைச்சகத்தால் அடையாளம் காணப்படுவார்கள்.

இவர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் தவிர்த்த, மேற்கூறிய மொழிகள் ஒன்றில் புலமை பெற்றிருக்க வேண்டும்.


3. நிபுணத்துவ கைடுகள்

சுற்றுலா, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம் மற்றும் வனம் - வனவிலங்குகள் போன்ற சுற்றுலா தொடர்பான துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், சிறப்பு பிரிவில் அடங்குவார்கள். நிபுணத்துவ கைடுகள் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்கள், ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருக்க வேண்டும்.



4. நிபுணத்துவம் - மொழி அடிப்படையிலான
சுற்றுலா தொடர்பான, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம், தொல்லியல் துறை, வனம் - வனவிலங்கு மற்றும் சுற்றுலா ஆகியவை தொடர்பான படிப்புகளில் முனைவர் பட்டம் அல்லது சிறப்பு படிப்பை முடித்தவர்கள் இப்பிரிவில் அடங்குவார்கள்.
வெளிநாட்டு மொழியில், படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் போன்ற அம்சங்களோடு, நல்ல புலமைத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதிகள் மற்றும் பணியிடங்கள்
மேற்கூறிய சுற்றுலா கைடுகள் பிரிவுகளில் ஒருவர் தேர்வு பெற்றிட, முதல் மீடியா விளம்பரம் கொடுக்கப்படும் தேதி பிரகாரம், 20 வயதுடையவராக இருத்தல் வேண்டும். பல்வேறு நாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் அதற்கு தேவைப்படும் கைடு பணிநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், சுற்றுலா கைடுகளின் தேவை அளவிடப்படும். இந்தப் பணியானது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும்.
தேர்வாதல்
கைடுகளை தேர்வு செய்யும் செயல்பாடானது, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்(IITTM) அல்லது சுற்றுலா அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு ஏதேனும் அமைப்பைக் கொண்டு நடத்தப்பெறும். ஒருவர் தேர்வு பெற்றவுடன், அவருக்கு IITTM -ல் பயிற்சியளிக்கப்படும்.பிராந்திய வாரியாக, பயிற்சிக்காக, எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு கொடுக்கப்படும் விளம்பரங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 3 மணிநேரம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலமாக, பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் ஒருவரின் பொது நுண்ணறிவுத் திறன் மற்றும் தகுதி பரிசோதிக்கப்படும்.மொத்தம் 300 மதிப்பெண்களில், குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும்.பயிற்சிக்காக அறிவிக்கப்பட்ட இடங்கள், நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும்.
பயிற்சி மற்றும் லைசன்ஸ் பெறுதல்
குவாலியர், புவனேஷ்வர், டெல்லி, கோவா மற்றும் நெல்லூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள IITTM -ன் வளாகங்களில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய ஆர்கியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் இடங்களில் களப் பயிற்சி மற்றும் வகுப்பறை பயிற்சிகள் இத்திட்டத்தில் இடம்பெறும்.
பொது மற்றும் பொது(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 26 வாரங்களும், நிபுணத்துவம் மற்றும் நிபுணத்துவம்(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 13 வாரங்களும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்த அனைவரும், இன்னொரு பெரிய படிநிலையைக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் Viva voce போன்ற அம்சங்களைக் கொண்ட அடுத்தக்கட்ட தேர்வானது, ஒருவரின் வழிகாட்டும் திறன், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் இடங்களைப் பற்றிய அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வெளிநாட்டு மொழியில் அவரின் புலமை(தேவையான இடங்களில்) போன்றவை இவைகளின் மூலம் அளவிடப்படும்.
இந்த இறுதித் தேர்வை ஒருவர் எழுத, வகுப்பறை மற்றும் களப்பயிற்சியில், குறைந்தது 80% வருகைப்பதிவை பெற்றிருக்க வேண்டும். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தப்பின்னர், இந்திய அரசின், பிராந்திய இந்திய சுற்றுலா அலுவலகத்தால், பிராந்திய நிலையிலான கைடு லைசன்ஸ் வழங்கப்படும்.
இந்த லைசன்ஸ் 3 வருடங்களுக்கு செல்லும். பின்னர், Refresher courses முடித்து இதை புதுப்பித்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டு மொழியில் புலமை
கைடு படிப்பை வெற்றிகரமாக முடிக்க, இந்தப் புலமையானது அவசியமான ஒன்று. ஆங்கிலத்தில் தடுமாற்றம் உள்ளவர்கள், பிரட்டிஷ் கவுன்சில் நடத்தும் மொழித்திறன் படிப்புகளில் பங்கேற்று, தங்களின் மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம். மேலும், பிற வெளிநாட்டு மொழிகளைப் படிக்க, தனியார் நிறுவனங்களை அணுகலாம்.
அவை, இதுதொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மொழிகளைப் படிப்பவர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் நடத்தும் மொழி படிப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறுவதே சிறந்தது. ஏனெனில், இதன் மதிப்பு அதிகம்.
சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும்
அதிகளவிலான வாய்ப்புகள் இதுபோன்ற ஆபரேட்டர்களிடமிருந்தே வருகின்றன. Cox and kings, Thomas cook, Le passage to India tours and travels, Kuoni travels, Abercrombie, Kent India and SITA tour and travels போன்றவை, முன்னணி சுற்றுலா ஆபரேட்டர் நிறுவனங்களாகும்.இவை பெரும்பாலும், சர்வதேச விமானங்கள் அதிகம் வரும் மும்பை மற்றும் டெல்லியை அடிப்படையாக கொண்டவை.
சம்பளம்
சுற்றுலா தொழில் துறையில் நல்ல அறிமுகம் பெற்ற ஒருவர் லைசன்ஸ் பெற்ற கைடு, வருடத்திற்கு ரூ.4 முதல் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கிறார். மேலும், வருவாயானது, ஒருவர் எந்த மொழியில் புலமை பெற்றிருக்கிறார் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
ஆங்கிலம் மட்டுமே நன்கு அறிந்த ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.2,500 பெறுகிறார். ஆங்கிலம் தவிர்த்த பிற வெளிநாட்டு மொழிகளில் பணிபுரியும் ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.3,000 வரை பெறுகிறார்.
முக்கிய அறிவுரை
சுற்றுலா ஆபரேட்டர்களின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கையாளும்போது, கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் உங்களைப் பற்றி தரும் Feedback -கள்தான், உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை அதிகரித்து, அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும்.