Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 15 ஆகஸ்ட், 2012

அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை பெற்று, நீண்டகாலம் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைக்கு உள்ளே திருந்திய மனிதர்களாக மாறி, முறையான வாழ்க்கை வாழத்துடிக்கிறார்கள். 

சீர்திருத்தும் இடம்தான் சிறைச்சாலை, தண்டிக்கும் இடம் அல்ல. ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப்பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, விடுவிக்கப்படாமலேயே சிறைக்குள் வாடுகின்றனர். 

பலர் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் சிதறி சின்னா பின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத்துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். 

ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப்போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. சிறைவாசியைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ, பரோல் விடுப்பு தரப்படுகிறது. 

அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்கு திரும்பி வர இயலாமல், ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால்கூட, இந்தியத் தண்டனைச் சட்டம், 224 பிரிவுகளின்கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால் பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவதும் கிடையாது. 

இந்த அணுகுமுறையை மாற்றி, மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பொதுமன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும். வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். 

மேல் முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும். எனவே அவர்களுக்கும் பரோல் விடுப்பு வழங்க வேண்டும். கடந்த ஆண்டும் இதே கோரிக்கைகளை முன் வைத்தோம். திருந்திய மனிதர்களாக, சிறைச்சாலைக்கு உள்ளே ஏராளமான மனிதர்கள் பொது மன்னிப்பு பெற முடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். 

இந்த ஆண்டு திராவிட இயக்க நூற்றாண்டு, அண்ணாவின் 104-வது பிறந்த நாள் ஆகும். அதையொட்டி பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்போரை, விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு வைகோ அதில் கூறியுள்ளார்.