Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 10 ஆகஸ்ட், 2013

தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமான தொண்டன் -------- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகம் 8,மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை-1

இந்த கட்டிடம் சமுதாயத்தின் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் உரிமை நிரம்பிய உணர்வோடு கலந்த அற்புத வரலாறு கொண்டது.

முகம்மது இஸ்மாயில் என்கின்ற வணிகர் குடும்பத்திற்கு உரிமையான கட்டிடம் இது.இந்த முஹம்மது இஸ்மாயில் குடும்பம் உருதை தாய்மொழியாக கொண்ட குடும்பம்.இந்த குடும்பத்தினர் செய்து வந்த வணிகம் ஏனோ தெரியவில்லை பலத்த வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டது.கடன் தலைக்கு மேல் கடந்து பரவியது.

மாற்று வழியாக வங்கியில் வீட்டை அடகு வைத்து தொழில் நடத்தினர்.அதிலும் சேதமானது.வட்டி கட்ட முடியாத நிலையில் வீடு கடனில் மூழ்கி விட்டது.மூன்று மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு அது.வங்கி இறுதியில் வீட்டை ஏலத்திற்கு விட்டது.

முஸ்லிம் லீக் மாநில மாநாடு போட்டு ஒரு தொகையை கை இருப்பில் வைத்திருந்தது. இந்த இல்லத்தை ஏலத்திற்கு எடுத்தது.காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் பெயரில் தான் இந்த வீடு உரிமையாக்கப் பட்டது.


 வங்கியில் இருந்து ஏலத்திற்கு எடுத்த வீட்டை கையகப் படுத்த முஸ்லிம் லீகின் சார்பாக காயல் பட்டினம் பி.ஏ .காக்கா, A .K .ரிபாய் சாஹிப் ,இஸ்மாயில் கனி சாஹிப் ,இளையனன்குடி P .N .I .அபுதாலிப் சாஹிப் ,காயல் ஹம்ஸா மற்றும் இன்னும் சிலர் அங்கே சென்றனர்.

சட்ட விதிப் படி அந்த கட்டிடத்தில் உள்ள எந்த பொருளும் முந்தைய உரிமையாளருக்கு சொந்தம் ஆகாது.அங்குள்ள எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து செல்லக் கூடாது.

ஆனால் காயிதே மில்லத் இப்படி சொல்லி அனுப்பி இருந்தார்கள் ,
"அங்கே வாழ்ந்து தாழ்ந்து போனவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் மன வேதனைகளை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் மனம் நம்முடைய எந்தச் செய்கையாலும் புண்பட்டு விடக் கூடாது.
அந்த வீட்டிலிருந்து ,எந்த எந்த பொருள்களை அவர்கள் எடுத்துச் செல்ல நாடுகிறார்களோ ,அவற்றை எல்லாம் அவர்களை எடுத்து செல்ல ,முழுவதுமாக அனுமதித்து விடுங்கள்"
என்று காயிதே மில்லத் சொல்லி இருந்தார்கள்.

அதன் படி இஸ்மாயில் பாய் குடும்பம் எடுத்துச் செல்ல நாடிய அனைத்தையும் எடுத்து செல்ல அனுமதித்தனர் லீக் குழுமத்தினர்.


 8,மரைக்காயர் லெப்பை தெரு வீட்டுக்குள் உரிமைக் குரல் பத்திரிகை அலுவலகமும் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலுவலகமும் ஒரு சேர செயல் பட்டன.

தமிழக மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் லீகர்களுக்கு மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடம் அடைக்கலம் தரும் அன்னை வீடானது.

எல்லா நேரங்களிலும் அங்கே கலகலப்பு இருந்தது.தன்னை அறியாமல் ஒரு முழு உரிமையோடு அங்கே இருந்த அனைவரும் நடமாடி திரிந்தார்கள்.

மாலை வேளைகளில் சென்னையில் இருக்கும் காலங்களில் எல்லாம் ,காயிதே மில்லத் அவர்கள் அங்கே வந்து விடுவார்கள்.
ஒரு அறிவார்ந்த திருக்கூட்டம் குழுமி இருக்கும்.இந்திய அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அங்கே அலசப்படும்.

காயிதே மில்லத் , பி.ஏ .காக்கா,சென்னை மாவட்ட தலைவர் ஹக்கீம் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் (மியாகான் சாஹிபின் மாமனார்), அப்துஸ்ஸமத் சாஹிப்,ஏ .கே.ரிபாய் சாஹிப்,மதுரை மாவட்ட செயலாளர் ஷரிப் சாஹிப் M .P .,பி.என்.ஐ.அபுதாலிப் சாஹிப் , இப்படி சிறப்புக்கு உரியவர்கள் எல்லாம் இருந்து தினம் தினம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இங்கே ஒரு நபரை கட்டாயம் சொல்லி ஆக வேண்டும்.

இஸ்மாயில் கனி அண்ணன். லிப்டன் தேயிலைக் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.அந்த நேரம் போக மீதி நேரங்களில் முஸ்லிம் லீக் தலைமை நிலைய அலுவல்களிலேயே காலம் கழித்தார்.

காயிதே மில்லத்திற்கு , இஸ்மாயில் கனி சாஹிபை விட தமிழகத்தில் நம்பிக்கையான ஒரு முஸ்லிம் லீகர் எவருமே கிடையாது.இப்படி துணிந்து சொல்லி விடலாம். இஸ்மாயில் கனி ,மிக நேர்மையானவர். ஆழமான நம்பிக்கையானவர். ஏற்றுக் கொள்ளக் கூடிய பொறுப்புகளில், தீவிரமான ஈடுபாடுக் கொள்ளக் கூடியவர்.

முஸ்லிம் லீக், உரிமைக் குரல் அலுவலகமான 8,மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடத்திலுள்ள அனைத்து கதவுகளுக்கும் ,அலமாரிகளுக்கும் இரு சாவிகள் உண்டு.ஒரு சாவி தலைமை நிலைய பொறுப்பாளரிடம் இருக்கும்,மற்றொரு சாவி இஸ்மாயில் கனி அவர்களிடம் இருக்கும். இது காயிதே மில்லத் செய்து இருந்த ஏற்பாடு.

இஸ்மாயில் கனி நல்ல கவிஞரும் கூட.அந்த கட்டிடதொடு இவர் கொண்டிருந்த உறவின் அளவு இன்னொருவர் எவரும் பெற்று இருக்கவில்லை.

ஆனால் , காயிதே மில்லதினுடைய மறைவுக்கு பின்னால் ,சில பல காரணங்களினால் இஸ்மாயில் கனி அவர்கள் , அந்த கட்டிடத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டார்.இது மிகவும் கசப்பான செய்தி.

தலைமையகத்தை சார்ந்திருந்த அனைவரினுடைய நெஞ்சிலும் இந்த வலி இருந்தது.ஆனாலும் விரும்பத் தகாத இது நிகழ்ந்து விட்டது.

காயிதே மில்லதினுடைய இளவல், கே.டி.எம்.அஹமது இப்ராகிம் சாஹிப் மாநிலத்தினுடைய பொது செயலாளராக இருந்தார்கள்.அவர்களிடம் தான் மற்றொரு சாவி இருந்தது.

காயிதே மில்லத் வாழ் காலத்திலே கே.டி .எம்.அஹமது இப்ராகிம் சாஹிப் காலமாகி விட்டார்கள்.

கே.டி .எம்.பற்றி இன்னொரு இடத்தில விரிவாக சொல்லி ஆக வேண்டும்.

கே.டி .எம் மறைவுக்கு பின்னால் ,தமிழ் மாநிலத்தினுடைய பொதுச் செயலாளராக ஏ .கே.ரிபாய் சாஹிப் தேர்ந்தெடுக்கப் பட்டார் .

ஒரு நாள் தலைமை நிலையத்திற்கு, இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் வந்தார்கள்.தன்னிடம் காயிதே மில்லத் ஒப்படைத்து இருந்த அத்தனை சாவிகளையும் ஏ.கே.ரிபாய் சாஹிபிடம் ஒப்படைத்தார்.அதனோடு ஒரு லெட்டெர் பேடு தாளையும் ரிபாய் சாஹிபிடம் கொடுத்தார்.அந்த லெட்டெர் பேடின் தாள் காயிதே மில்லத் அவர்களின் M .P .லெட்டெர் பேடின் தாள்.

அந்த லெட்டெர் பேட் தாளின் கீழே காயிதே மில்லத் அவர்களின் கை ஒப்பம் இருந்தது.தேதிக் குறிக்கப் படவில்லை. இப்படி ஒரு வெற்றுத் தாளில் காயிதே மில்லத் இந்த உலகில் வேறு எவரிடமும் கையெழுத்து இட்டு கொடுத்ததே இல்லை.

இதை பார்த்த ஏ .கே.ரிபாய் சாஹிப் அதிர்ந்து போனார்.ஏனென்றால் இந்த தகவல் எவருக்குமே தெரியாது.

இஸ்மாயில் கனி சொன்னார். "தேவைப் படும் பொழுது எந்த அலுவல் காரணத்திற்காகவும் ,இந்த லெட்டெர் பேடை பூர்த்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.இது பரம ரகசியமாகவே இருக்கட்டும்” என்று காயிதே மில்லத் ஒரு சந்தர்பத்தில் சொல்லித் தந்ததாக சொன்னார்.

ஏ .கே.ரிபாய் சாஹிப் அந்த லெட்டெர் பேடு தாள்களை இஸ்மாயில் கனி அவர்களிடமே திரும்ப கொடுத்து விட்டு ,"வாப்பா உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளச் சின்னம் இது.இதை பிரேம் போட்டு நீங்களே பாதுகாத்து வாருங்கள்.இது உங்கள் குடும்பத்தின் பொக்கிஷம்" என இஸ்மாயில் கனியிடம் ,ஏ .கே ரிபாய் சொன்னார்.

அந்த காயிதே மில்லத் கையெழுத்திட்ட வெற்றுத் தாள் இஸ்மாயில் கனி அண்ணன் குடும்பத்திடம் தான் இன்றும் இருக்க வேண்டும்.

ஒருநாள் ,அப்துல் வஹாப் M .A .PTh அவர்கள் இஸ்மாயில் கனி இல்லத்திற்கு மனைவியோடு திடீரென்று வந்தார்.இஸ்மாயில் கனி இதை எதிர் பார்க்கவில்லை . அப்துல் வஹாப் துணைவியார் கையில் தாம்பூலம் இருந்தது.அதில் சில பேரீத்தம் பழங்களும் ,வாழைப் பழங்களும் வைத்து இஸ்மாயில் கனி குடும்பத்தாரிடம் தரப் பட்டது.

"என் மூத்த மகனுக்கு உங்கள் மூத்த மகளை மணமுடிக்க பெண் கேட்டு வந்திருக்கிறோம்' என அப்துல் வஹாப் சாஹிப் கூறினார்கள். வேறு எந்த கொடுக்கல் வாங்கலும் நமக்குள் தேவை இல்லை என்று மேலும் சொன்னார்கள்.

இஸ்மாயில் கனி அண்ணன் சிரமத்தில் இருந்த காலகட்டம் அது.அப்துல் வஹாப் சாஹிபின் மகன் உயர்ந்த அரசுப் பதவியில்,நிறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இஸ்மாயில் கனி அண்ணனுடைய நேர்மைக்கும்,நம்பிக்கைக்கும் இறைவனே வழங்கிய அருட்கொடை அது. இஸ்மாயில் கனி அண்ணன் இன்று இல்லை.

முஸ்லிம் லீகினுடைய மரைக்காயர் லெப்பை தெரு தலைமையகத்தில் ,இன்றும் என்றும் எவர் நடமாடித் திரிந்தாலும்,இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் ஹக்கில் துஆ செய்ய கடமை பட்டிருக்கிறார்கள்.

இன்று தலைமை நிலையத்தில் மேனேஜராக இருக்கக் கூடிய மீரா சாஹிபுக்கு ,தொழில் கற்று கொடுத்த குரு இஸ்மாயில் கனி அண்ணன்.

இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் காத்த இரு மன்ஸில்களும் இரு பெரும் தலைவர்களும் --- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் இரண்டு மன்ஸில்களை தவிர்த்து விடவே முடியாது. அதாவது இந்த இரு மன்ஸில்களில் தான் லீக் என்னும் பிரம்மாண்டமான மரம் வேர் பாவி கிளை விட்டு ,விழுது பாய்ச்சி ,செழித்தெழுந்து நின்றது .

ஒன்று கே.டி.எம். அஹமது இப்ராஹீம் மன்ஸில்,மற்றது தயா மன்ஸில்.

கே .டி .எம். மன்ஸில், வட சென்னை மண்ணடியில் ஹார்பருக்கு எதிரே வங்கக் கடலின் காற்றுத் தழுவி கிடக்கும் மரைக்காயர் லெப்பைத் தெரு எட்டாம் எண்ணில் இருந்த முஸ்லிம் லீகின் தலைமை நிலையம்.

கே .டி .எம். மன்ஸிலின் மூன்றாவது மாடியில் நின்று ,கிழக்கு திசை நோக்கிப் பார்த்தால், பரந்து விரிந்து கிடக்கும் வங்கக் கடல் காட்சி தரும். ஆங்காங்கே சில கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கும். கே .டி .எம். மன்ஸிலின் முதல் தளத்தில் இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமுத்திரம் கண்ணுக்கு தெரியாது ஆனாலும் அங்கே தான் சம்பவங்கள் விரிந்து கிடக்கும்.

இன்னொரு மன்ஸிலான தயா மன்ஸில் தென் சென்னை அன்றைய கடைக்கோடியான குரோம்பேட்டையில் ஒரு தெருவுக்குள் அமைதியாக இருந்தது. ஆனால் கடலின் ஆழத்தை விட ஆழமான சம்பவங்களை மறைத்துக் கொண்டு நிம்மதியாக இருந்தது. இந்த மன்ஸில் மாட மாளிகையோ, கூட கோபுரமோ அல்ல.

ஒரு சுமாரான இடத்தின் மத்தியில் தஞ்சை மாவட்ட கை வினைஞர்களால் உருவாக்கப் பட்டிருந்த ஒரு குடிசையும் ,அதனை ஒட்டி வலது பக்கம் இரண்டு சிறு அறைகள், இடது பக்கம் ஒரு அறை ,நடுவே ஒரு குட்டி முற்றம். அந்த முற்றத்திற்கு பின்னே ஒரு சமையல் அறை,ஒரு குளியல் அறை.இது தான் தயா மன்சில் .

இந்த மன்ஸிலுக்கு வலப்பக்கம் மூன்றடி உயர சுற்று சுவர் , அதற்கு மேலே ஒரு சின்னக் குடில். அந்த குடிலுக்கு உள்ளே ஆறேழு நாற்காலிகள். அவற்றிலும் ஒன்றிரண்டு நாற்காலிகளுக்கு ஒரு கால் இருக்காது.அந்த காலுக்கு பதிலாக தனித்தனி செங்கற்கள் அடுக்கிச் செங்கல் கால்கள் நிற்கும். இந்தக் குடிலும் தயா மன்ஸிலின் ஒரு அங்கம் தான்.

இந்த மன்ஸில் ஒரு தனி மனிதருக்கு சொந்தமானது. அந்த மனிதர் கோடீஸ்வரரின் பரம்பரையை சார்ந்தவர் சமுதாய பணிக்காக தன் முழு சொத்தையும் கரைத்து விட்டவர். சென்னை ராஜதானியின் எதிர்க் கட்சி தலைவராக இருந்தவர். டெல்லி நாடாளுமன்றத்தில் பதினைந்து இருபது ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்புக் குழு உறுப்பினராக இருந்தவர்.இந்த தயா மன்ஸில் கூட அவரின் நெல்லையில் இருந்த பூர்வீக சொத்தை விற்று தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த தயா மன்ஸிலுக்குள் இந்தியாவின் ஆகப் பெரும் தலைவர்கள் எல்லாம் வந்து அமர்ந்து அவரைச் சந்தித்து அரசியில் பேசி சென்று இருக்கிறார்கள்.

பண்டிட் நேரு அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்த பலர் வந்து அவரை இந்த மன்ஸிலில் சந்தித்து இருக்கிறார்கள். தமிழகத்தினுடைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சில முறைகள் வந்து இந்த மன்ஸிலில் சந்தித்து சென்றிருக்கிறார்.மற்றும் அமைச்சர்கள் வந்து சந்தித்து இருக்கின்றனர். அடுத்து வந்த முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா, சில பல முறை வந்து சந்தித்து சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்த முதலமைச்சர் கருணாநிதி பல முறை இந்த மன்ஸிலில் வந்து சந்தித்து இருக்கிறார்.

மூதறிஞர் ராஜ கோபாலச்சாரி இதே மன்ஸிலில் அவரை வந்து சந்தித்து சென்று இருக்கிறார். இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே இருக்கும் இந்த தயா மன்சில் காரர் இவர்களில் எவர் வீட்டிற்கும் சென்று சந்தித்து அரசியல் பேசியது இல்லை என்ற சரித்திர உண்மையும் இவருக்கு சொந்தமானது.

அந்த இவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹமது இஸ்மாயில் சாஹிப். பெருமைக்குரிய அத்தனை இந்திய தலைவர்களும் இந்த மன்ஸிலில் உள்ள கால் ஒடிந்த செங்கல் அடுக்கிய நாற்காலியில் தான் அமர்ந்து பேசி சென்று இருக்கிறார்கள்.

இறைவன் எனக்கும்,எங்களுக்கும் பாக்கியம் வழங்கி அருளி இருக்கிறான். அனைத்து நன்றியும் அவனுக்கே. நானும் ,நாங்களும் அந்த தயா மன்ஸில் முற்றத்திலும் இல்லத்திற்குள்ளும் ஓடி விளையாடி இருக்கிறோம். அந்த கண்ணியத்திற்கு உரியவரின் மடியில் அமர்ந்து மகிழ்ந்து இருக்கிறோம்.

கே .டி .எம். அஹமது இப்ராஹிம் .இவர் காயிதே மில்லத்தின் தம்பி .எங்கள் பிள்ளைப் பருவத்தில் கே டி எம் என்று சொன்னால் எங்களுக்கு தெரியாது. 'வக்கீல் தாதா " என்றவர் தான் கே .டி .எம். என்று பின்னால் தெரிந்து கொண்டோம்.

இந்த கே .டி .எம். பெயர்தான் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு காயிதே மில்லத் காலத்திலே சூட்டப் பட்டது. காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராகவும் ,சென்னை ராஜ்யத் தலைவராகவும் இருந்தார்கள். கே .டி .எம். சென்னை ராஜ்ய பொது செயலாளாராக இருந்தார். ((கே.டி.எம், ராஜ்ஜியம் என்பதை மாநிலம் என்று மொழி பெயர்த்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. கே.டி.எம் காலம் வரை சென்னை ராஜ்ஜியம் என்று தான் குறிக்கப்பட்டது. அதற்கு பின்தான் தமிழ் மாநிலம் என முஸ்லிம் லீக் தன்னை கூறிக் கொண்டது)

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் “பைலா” இவர்களால் தான் சரி பார்க்கப் பட்டு திருத்தப் பட்டு அமைய பெற்றது. காயிதே மில்லத் வாழ் காலத்திலேயே கே .டி .எம் காலமாகி விட்டார்கள். கே .டி .எம் மை அடுத்து அவரிடத்தில் என் தந்தையார் ஏ. கே. ரிபாய் சாஹிப் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

கே .டி .எம் உடைய நேர்மையும் அழுத்தமும் சில இடங்களில் காயிதே மில்லத்தை விட ஒரு இன்ச் உயர்ந்து இருக்கும். இப்படிச் சொல்வதில் நிச்சயம் குற்றமில்லை .

காயிதே மில்லத் தன்னளவில் மகத்தான நேர்மைக்கு உரியவர்கள். அப்பழுக்கு அங்கே இருக்காது. ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களிடம் குறைபாடு இருக்கும். காயிதே மில்லத்திற்கும் இது தெரியும்.

சில பல அரசியல் காரணங்களுக்காக அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இது ஒருவகையான காம்ப்ரமைஸ் போல தான் தெரிகிறது.

கே .டி எம் இடம் இந்த கதையே கிடையாது இது மாதிரிநேரங்களில் கடுமையாகவே நடந்து கொள்வார்.

வக்கீல் தாதா (கே .டி எம்) முகம் எப்போதுமே இறுக்கமாகத்தான் இருக்கும். சிரிப்பு அவர்கள் இதழில் வந்ததாக எங்களுக்கு நினைவே கிடையாது.

ஒரு கடுமை முகம் முழுவதும் பதிந்து பரவி கிடக்கும். பற்றாக்குறைக்கு இரு காதுகளும் கேட்காது. வக்கீல் தாதா என்றவுடன் இந்த தோற்றம்தான் எங்களுக்கு நினைவிலிருக்கும்

நெல்லை பேட்டையில் இருந்து சென்னை தலைமையகத்திற்கு இயக்க சார்பாக கிளார்க் மீராசாவுக்கு கடிதம் எழுதுவார்கள். அந்த கடிதத்தில் தன் சொந்த அலுவலையும் எப்போதாவது செய்ய சொல்லி எழுதிருப்பார்கள். இப்படி அனுப்பிய கடிதங்களை எண்ணி சென்னை வந்தவுடன் ஒவ்வொரு கடிதத்திற்கும் இரண்டு அணா கணக்கிட்டு தலைமையகத்தில் செலுத்தி விடுவார்கள். மீராசா செய்த பணிக்காக அவருக்கும் பணம் தருவார்கள்.

கே .டி எம், பூரணமான ஜனநாயகவாதி . லீகினுடைய பொதுக் குழு தலைவர் தேர்தலை அறிவிக்கும் போது தானும் போட்டியிடுவார். வழி மொழிய யாரும் இல்லாததால் காயிதே மில்லத் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதற்கு கே .டி எம் சொல்லும் காரணம் மிக முக்கியமானது. “ ஜன நாயகம் என்பதில் ‘ஏக மனதாக’ என்பது கொஞ்ச காலத்தில் தனி மனித வழிபாடாக மாறிவிடும் . முஸ்லிம் லீகின் சிறு தொண்டன் கூட தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதை உறுதி படுத்தத்தான் நான் போட்டி இடுகிறேன்." என்பார்கள்.

சில வேளைகளில் செயற்குழுவில் காயிதே மில்லத்தின் கருத்துக்கு உடன்பட மாட்டார்கள். அந்தக் கருத்தில் லீக் தன்மை குறைந்து வேறொரு இயக்கத்தின் தன்மை இருப்பதாக முடிவு செய்து விடுவார்கள்.

செயற்குழுவில் இதனை பகிரங்கமாகப் பேசுவார்.

"காயிதே மில்லத்தின் இந்த கருத்தில் காங்கிரஸ் தன்மை கலந்து இருக்கிறது. காயிதே மில்லத் பழைய காங்கிரஸ்காரர் என்பதை மறந்து விடக் கூடாது. என்னைப் போன்ற முழு லீகனுக்கு இதில் சம்மதம் இல்லை" என பகிரங்கமாக போட்டு உடைத்து விடுவார்.

செயற்குழு முடிந்தவுடன் காயிதே மில்லதும் கே. .டி.எம் மும் ஒன்றாக சேர்ந்து குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு செல்வார்கள்.

கே.டி.எம். சென்னை வந்தால்,தயா மன்ஸிலில் தான் தங்குவார்கள் .

இந்த கடுமையான மலைக்குள் கனிவான ஈரம் கசிவதும் உண்டு .அதற்கு ஓர் அடையாளம் இன்று தலைமை நிலைய மேனேஜராக இருக்கும் மீராசா தான்.

கே.டி.எம். சென்னை வரும்போது எல்லாம் கிழிசல் தைத்த சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வருவார் மீராசா. கே.டி.எம் இதை பார்த்து விட்டு , " மீராசா நமக்கு கஷ்டம் இருக்கலாம் ,அதற்காக கிழிந்த சட்டை போட்டுக் கொண்டு அலுவலகம் வரக் கூடாது ஏனென்றால் நீ லீகின் ஊழியன் .நீ இப்படி அலுவலகம் வருவது லீகிற்கு அவமானம்.நீ புது சட்டை வாங்கிக் கொள்” என்று பணம் கொடுப்பார்.

மீராசா புது சட்டை அணிந்து கொள்வார். ஆனாலும் அடுத்த முறை கே.டி.எம் சென்னை வரும்பொழுதும் மீராசா கிழிந்த சட்டையில் இருப்பார். கே.டி.எம் புது சட்டைக்கு பணம் தருவார்கள்.மீராசா புது சட்டைக்கு மாறிக் கொள்வார்,

கே.டி.எம். கண்காணிப்பில் தன்னை தயார் படுத்தி கொண்டவர்தான் இஸ்மாயில் கனி அண்ணன். இவரும் ஒரு முக்கால் கே.டி.எம் தான்.

இந்த கே.டி.எம் நினைவாகத் தான் தலைமை நிலையத்திற்கு கே.டி.எம் மன்ஸில் என பெயர் பொறிக்கப் பட்டது.

குட்டி குறிப்பு :-


நெல்லை சந்திப்பில் ஒடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றை ஒட்டி மேற்கில் ஒரு பள்ளிவாசல். இது நெல்லை சந்திப்பு பள்ளிவாசல். பள்ளிவாசலுக்கு மேற்கே ஆறேழு கட்டிடங்கள் தாண்டி பழைய பஞ்சாயத்து தொடக்க பள்ளிக்கூடம். அதை ஒட்டி ஒரு சின்ன சந்து ,சந்தைத் தொட்டு ஒரு கட்டிடம். இந்தக் கட்டிடம் 1957 நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு பின் வசூலான மீதிப் பணத்தை வைத்து ,முஸ்லிம் லீக் தனகென்று ஒரு கட்டிடத்தை சொந்தத்திற்கு வாங்கியது. இந்த இடத்திற்கு கைலாசபுரம் என்று பெயர்

மாநில துணைத் தலைவராகவும்,மாவட்ட தலைவராகவும் இருந்த எங்களின் தாதா மு.ந. அப்துர் ரஹ்மான் சாஹிப் லீகிற்காக வாங்கிய முதல் கட்டிடம்.

இதில் ஒரு பகுதி சுமாரான வீடாக இருந்தது. இந்தப் பகுதியை ஜமாதுல் உலமா ஆசிரியர் மௌலானா மௌலவி அபுல் ஹசன் ஷாதலி ஹஸ்ரத் அவர்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தனர்.ஷாதலி ஹஸ்ரத் பக்கத்தில் இருந்த பள்ளிவாசல் இமாமாக பணி புரிந்தார்கள்.

தென்காசி ஹஸ்ரத் அப்துல் காதர்(ஹாஜியார் தாதா ) முஸல்மான் பத்திரிகையின் ஆசிரியர். அகமதியா இயக்கத்திற்கு அந்த காலத்தில் தமிழில் வெளிவந்த முதல் எதிர்ப்பு சுன்னத்துல் ஜமாஅத் பத்திரிகை இது தான்.

இவர்கள் மகன் தான் ஷாதலி ஹஸ்ரத் அவர்கள். இந்தக் கட்டிடம் தான் தமிழகத்தில் முஸ்லிம் லீக் தனக்கென்று வாங்கிய முதன்முதலான கட்டிடம்.

இரண்டாவதாக வேலூர் சுண்ணாம்புக் கார தெருவில் மாவட்ட முஸ்லிம் லீக் தனக்கென்று ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கி மாவட்ட தலைமையகம் ஆக்கியது.

மூன்றாவதாகத்தான் மாநில முஸ்லிம் லீக் தனக்கென்று சென்னை மரைக்காயர் லெப்பை தெருவில் எட்டாம் எண் கட்டிடத்தை விலைக்கு வாங்கி மாநில தலைமையகமாக அறிவித்து கே.டி.எம் அஹமது இப்ராகிம் மன்ஸில் என்று பெயர் சூட்டிக் கொண்டது.