Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

தமிழகத்தில் 284 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது


பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2010-11 கல்வியாண்டு தரம் உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2010-11 கல்வியாண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகம் முழுவதும் 284 பள்ளிகள் ஆரம்பப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தற்போது வரை தலைமை ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை . பள்ளி ஆசிரியர்களே (பொறுப்பு) தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் குறுகிய காலத்தில, தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் முருக செல்வராஜ் கூறியதாவது:
தலைமை ஆசிரியர்கள் பதவி, பள்ளிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிகல்வித்துறை சார்பில், நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்து செயல்பாடுகளும், நலத்திட்டங்களுக்கும் தலைமை ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.

இதுபோன்ற சூழலில் தலைமை ஆசிரியர் பதவிகள் காலியாக இருப்பது ஏற்புடையதல்ல. மேலும் இப்பொறுப்பிற்கு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவேண்டும்.
அவ்வாறு நிரப்பப்படும் போது ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் காலியாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு பட்டதாரி ஆசியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் பணி இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு புதிய பணிநியமனத்திற்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடம் நிரப்பப்படாமல் இருப்பதால் இதுபோன்ற நிர்வாக ரீதியாக பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின் தடையால் பருப்பு ஆலைகள் முடங்கின


மின்தடையால், விருதுநகரில் மட்டும் எண்ணெய், பருப்பு ஆலைகள், தினமும், 13 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருகின்றன. மேலும், 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.விருதுநகரில், 140 பருப்பு ஆலைகள் உள்ளன. இங்கு நாள்தோறும், 1,500 டன் அளவிற்கு உளுந்து, துவரை, பாசிப் பருப்பு, மசூர் பருப்பு, பட்டாணி ஆகியவை பதப்படுத்தப்பட்டு வந்தன.

இது, தற்போதைய மின் தடையால், 400 -700 டன்னாக குறைந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு, 2.50 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுக மாகவும், 8 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்குள்ள, 80 எண்ணெய் உற்பத்தி ஆலைகள், நாள் ஒன்றுக்கு, 50 டன் வரை உற்பத்தி செய்த நிலை மாறி,மின் தடையால், 15 டன் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.இதில் மட்டும், 4.50 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 1,000 தொழிலாளர்கள், பணி வாய்ப்பை இழந்து உள்ளனர்.

மல்லியை சுத்தம் செய்யும், 120 ஆலைகளில், தொடர்ந்து, 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால் மட்டுமே, சுத்தம் செய்யும் பணிகள் நடக்கும்.இங்கு, நாள் ஒன்றுக்கு சுத்தம் செய்யப்படும் மூட்டைகளின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தில் இருந்து, 4,000மாக குறைந்துள்ளது.இதனால், 2 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 3,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, தகர டின் தயாரிப்பு உள்ளிட்ட சிறு தொழில்களுக்கு நாள் ஒன்றுக்கு, 4 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. 3,000 தொழி லாளர்களுக்கும் பணி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்தத்தில் அனைத்து பொருட்களின் உற்பத்தி குறைவால், தினம், 13 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பருப்பு உற்பத்தியாளர் கார்த்திகேயன் கூறும்போது, "மின்தடையால், பருப்பு உற்பத்தி 40 சதவீதமாக குறைந்து விட்டது. ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் போது, உற்பத்தி செலவு மூன்று மடங்கு உயர்கிறது. இந்த நிலை நீடித்தால், பருப்பு ஆலைகள் மூடப்படும் நிலை ஏற்படும்,' என்றார்.எண்ணெய் உற்பத்தியாளர் சாவி நாகராஜ், "எண்ணெய் வித்து உற்பத்தி அடியோடு பாதித்துள்ளது. மின் தடையால் ஏற்கனவே பல எண்ணெய் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 8-வது துணை வேந்தராக டி. சாந்தாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதிவியேற்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பதவியேற்புக்கு பின் அவர் பேசியது: இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் மாணவர்கள் அறிவுப்பூர்வமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும். எனது பணியின்போது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன். அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பல்கலைக்கழக விதிகளில் பாதிப்பு இல்லாதவற்றை பின்பற்றுவோம். பாதிப்பு இருந்தால் ஆலோசனை செய்து விதிகள் மாற்றப்படும் என்றார்.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் பேசும்போது, தமிழகத்தில் மருத்துவ சேவையை மேம்படுத்த மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் தரமான மருத்துவக் கல்வியை அளித்து வருகிறது.


பல்கலைக்கழகத்தின் மூலம் கல்லூரிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்தவேண்டும்.

மேலும் மற்ற பல்கலைக்கழகங்களுடனும் ஒத்துழைப்பை ஏற்படுத்தவேண்டும். புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.