Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 10 ஜனவரி, 2013

கல்வியை விட்டு தொழிற்சாலை பணியை நோக்கி மாணவிகள் .....!


காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவியர், தொழிற்சாலை பணிக்கு சென்று விடுவதால், மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.

அரசின் நோக்கம்
இங்கு 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும், ஆதரவற்ற மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த காப்பகம், கடந்த 2005ம் ஆண்டு, அரசு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. 300 மாணவியர் தங்கி படிக்க வேண்டிய காப்பகத்தில், 106 மாண வியர் மட்டும் படிக்கின்றனர்.
பெற்றோர், பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு படிக்கும் மாணவிக்கு, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, உணவு, சோப்பு, போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

"காசு' பார்க்கும் மாணவியர்
காஞ்சிபுரம் குழந்தைகள் காப்பகத்தில், திருவண்ணாமலை, சென்னை, சேலம், மாவட்டங்களில் இருந்தும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாணவிகளும் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஒன்பதாம் வகுப்பு முதல், கல்லூரி வரை, ஆண்டுத் தேர்வை 40 மாணவியர் எழுதுகின்றனர்.
தேர்வு முடிந்த பிறகு, ஒன்றரை மாதம் விடுமுறைக்காக வீடுகளுக்கு செல்கின்றனர். அப்போது அருகில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் வேலைக்கு சென்று, மாதம் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.அதன்பிறகு படிக்க விரும்புவதில்லை. படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பணியை தொடர்கின்றனர்.

காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மாணவியரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தும், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைகிறது. இதனால், அரசு திட்டம் வீணாகி வருகிறது.
இது குறித்து அரசு காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ""வயது வந்த மாணவியர் குறிப்பிட்ட வகுப்பு வரைதான், காப்பகத்தில் தங்கி படிக்கின்றனர்.

ஆண்டுத் தேர்வின் போது, தொழிற்சாலைகளில் பணிக்கு செல்லும் மாணவியர், மாதம்தோறும் சம்பளம் பெறுவதால், திருமணத்திற்கு தயாராகி விடுகின்றனர். இதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது,'' என்றார்.

மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் கிளார்க்குகள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு


மதுரை காமராஜ் பல்கலையில் கிளார்க்குகள் உட்பட 211 பணியிடங்கள் நியமனம் செய்வதில், உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று, பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

துணைவேந்தர் கல்யாணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பல்கலையில் பல்வேறு கட்டடப் பணிகளை மேற்கொள்ளவும், தேவையான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து திட்டமிடல் பணிகளுக்கு "கட்டட கமிட்டி" நியமிக்கப்பட்டது.

பல்கலையில் 176 கிளார்க்குகள் உட்பட 211 பணியிடங்களை நிரப்புவதில், உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். இதில், 51 பணியிடங்கள் "பேக்லாக்" (பின்னடைவு காலியிடங்கள்) அடிப்படையில் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்திய முறை மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை


ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள இந்திய முறை மருத்துவ பணியிடங்களை, கவுன்சிலிங் மூலம் நிரப்ப, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், தமிழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 475 ஆரம்ப சுகாதார நிலையங்களில், இந்திய முறை மருத்துவப் பிரிவு இயங்கி வருகிறது. இதில், 275 நிலையங்களில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயங்கும், இம்மருத்துவ பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வீதம், மாதத்திற்கு, 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.

இதில் மருத்துவர்கள், பணிக்காக குறைந்தபட்சம், 200 கி.மீ., பயணம் செய்ய வேண்டி உள்ளதால், ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியில் இருந்து, 60க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர். இப்பணியிடங்களை நிரப்பும்போது, பணிக்கு தேர்ந்தெடுக்கும் மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு, முக்கியத்துவம் தர வேண்டும் என, இந்திய முறை மருத்துவர்கள் கோரி உள்ளனர்.

இதுகுறித்து, நெல்லை மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பணிபுரியும் சித்த மருத்துவர் கூறியதாவது: எங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில், மாதத்திற்கு, 12 நாட்கள் பணிபுரிய, அங்கேயே தங்க முடியாது. எங்கள் ஊரில் தங்கியபடி, 200 கி.மீ.,க்கு மேல், பயணிப்பதால், சம்பளத்தில் பெரும் பங்கு, பயண செலவிற்கே போய்விடுகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, இந்திய முறை மருத்துவ பணியிடங்களை நிரப்பும்போது, மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

"ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இந்திய மருத்துவ முறை பணியிடங்களை, அங்கு பணிபுரியும் மருத்துவர்களைக் கொண்டே, கவுன்சிலிங் மூலம் நிரப்பினால், மருத்துவர்கள் வசிக்கும் மாவட்டத்திற்குள்ளேயே அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். இதற்கான பரிந்துரை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என, இந்திய முறை மருத்துவ இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையை தூண்டும் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் ரத்து செய்யப்படுமா?


மாநில கல்லூரியில் சமீபத்தில் நடந்த அரிவாள் வெட்டு மோதலை அடுத்து, அதற்கு காரணமான, மாணவர் பேரவை தேர்தலை ரத்து செய்யும்படி, உயர் கல்வி துறைக்கு கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

மாநில கல்லூரியில், சமீபத்தில், மாணவர்கள் அரிவாளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், சமீபத்தில் நடந்த மாணவர் பேரவை தேர்தல், பெரும் பங்கு வகித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பஸ் ரூட் அடிப்படையில் மாணவர்களிடையே ஏற்படும் பகையுணர்ச்சி, தேர்தலிலும் எதிரொலித்து, அரிவாள் வெட்டில் வந்து முடிந்துள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களை தடுப்பது குறித்து ஆலோசிக்க, பேராசிரியர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையில், மாநில கல்லூரி முதல்வருடன் நேற்று அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில், மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து, அவர்களை கண்காணிக்க பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மோதல்கள் தேர்தலை மையப்படுத்தி நடப்பதால், மாணவர் பேரவை தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும்.

வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை ரத்து, பஸ் பாஸ் ரத்து, கல்லூரியிலிருந்து நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் முடிவு செய்யப்பட்டன. இந்த பரிந்துரைகள், உயர்கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயர்கல்வி துறை அதன் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என, தெரிகிறது.

மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில், போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என,  தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, "29 ஏ" பஸ் செல்லும் ஒவ்வொரு நிறுத்தத்திலும், போக்குவரத்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால், எப்போதும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி, மேற்கூரையில் ஏறியபடி பயணிக்கும் மாணவர்கள், பஸ்சினுள் அமைதியாக சென்றனர். ஒவ்வொரு வழித்தடத்திலும், போக்குவரத்து போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்


உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடந்தது. நாகையில் விவசாயிகளின் சாலை மறியலால் பதட்டம் நிலவுகிறது. திருவாரூரிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடகா மறுத்து விட்டது. இதனையடுத்து பயிர் கருகியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இதனால் மனமுடைந்த 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,682 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வறட்சி குறித்து ஆராய நிதியமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு உரிய முடிவு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

திருவாரூர்: திருவாரூரில் கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக தொடர்ந்தது. மதியம் 12.45 மணியளவில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை விலக்கி கொண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் போராட்டம் இரண்டு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு தே.மு.தி.க.,வினர் ஆதரவு கொடுத்துள்ளனர். போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு சால்வை அணிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மன்னார்குடி இடையே சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டம் தொடர்கிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரிலும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. விவசாயிகள் போராட்ட இடத்தில் உணவு சமைத்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். அரசு உரிய முடிவு அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காவிரி இறுதித்தீர்ப்பை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும். காவிரி நீரை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:நாகையிலும் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம், இன்று மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பாலகிருஷணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும், பயிர் காப்பீடாக 8,682 என மொத்தம் 13, 682 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகை போதாது. நாங்கள் கூடுதலாக கேட்கிறோம். வறட்சி குறித்து ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்மட்டக்குழுவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. உயர்மட்டக்குழு தமிழகம் முழுவதும் வறட்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்கிறோம். அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டால் தலைமைச்செயலகத்திற்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து தகவல் வந்த பிறகு தான் எதுவும் கூற முடியும். தலைமைச்செயலகம் சென்னையில் உள்ளதா அல்லது கொடநாட்டில் உள்ளதா என சந்தேகம் உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னையை புரிந்து கொள்ளவில்லை. இதுவரை விவசாயிகள் அமைதியாக சட்டம் ஒழுங்கு கெடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மதியத்திற்குள் உரிய பதிலை அறிவிக்காவிட்டால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் இதற்கு தமிழக அரசே பொறுப்பு என கூறினார்.

சாலை மறியலால் பதட்டம்:நாகை மாவட்டத்தில், மாநில விவசாய சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் நாகை வெளிப்பாளையம் அருகே பேருந்து நிலையத்திற்கு அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 புறங்களிலும் அவர்கள் அமர்ந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. என்ன செய்வது என தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.