Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 10 ஜனவரி, 2013

இந்திய முறை மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை


ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள இந்திய முறை மருத்துவ பணியிடங்களை, கவுன்சிலிங் மூலம் நிரப்ப, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், தமிழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 475 ஆரம்ப சுகாதார நிலையங்களில், இந்திய முறை மருத்துவப் பிரிவு இயங்கி வருகிறது. இதில், 275 நிலையங்களில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயங்கும், இம்மருத்துவ பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வீதம், மாதத்திற்கு, 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.

இதில் மருத்துவர்கள், பணிக்காக குறைந்தபட்சம், 200 கி.மீ., பயணம் செய்ய வேண்டி உள்ளதால், ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியில் இருந்து, 60க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர். இப்பணியிடங்களை நிரப்பும்போது, பணிக்கு தேர்ந்தெடுக்கும் மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு, முக்கியத்துவம் தர வேண்டும் என, இந்திய முறை மருத்துவர்கள் கோரி உள்ளனர்.

இதுகுறித்து, நெல்லை மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பணிபுரியும் சித்த மருத்துவர் கூறியதாவது: எங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில், மாதத்திற்கு, 12 நாட்கள் பணிபுரிய, அங்கேயே தங்க முடியாது. எங்கள் ஊரில் தங்கியபடி, 200 கி.மீ.,க்கு மேல், பயணிப்பதால், சம்பளத்தில் பெரும் பங்கு, பயண செலவிற்கே போய்விடுகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, இந்திய முறை மருத்துவ பணியிடங்களை நிரப்பும்போது, மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

"ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இந்திய மருத்துவ முறை பணியிடங்களை, அங்கு பணிபுரியும் மருத்துவர்களைக் கொண்டே, கவுன்சிலிங் மூலம் நிரப்பினால், மருத்துவர்கள் வசிக்கும் மாவட்டத்திற்குள்ளேயே அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். இதற்கான பரிந்துரை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என, இந்திய முறை மருத்துவ இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக