Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும் :சரத் பவார்

வரும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள ‌லோக்சபா ‌தேர்தலில் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகளே பிரதமரை தேர்வு செய்யும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தேர்வில் மாநில கட்சிகள்:
‌தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடியை அடையாளம் காட்டினாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகள் மட்டுமே பிரதமரை தேர்வு செய்யும். மேற்குவங்க மாநிலத்தை சேர்‌ந்த திரிணமுல் காங்கிரஸ், உ.பி., மாநிலத்தை சேர்ந்த சமஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தமிழகத்‌தை சேர்ந்த அ.தி.மு.க, ஆகிய ஆறு கட்சிகளே பிரதமர‌ை தீர்மானிக்கும் கட்சிகளாக அமையும்.
மேற்கண்ட கட்சிகள் ஆட்சி அமைக்‌க முடியாவிட்டாலும் அக்கட்சிகளின் துணையின்றி பிரதமர் தேர்வு நடைபெற சாத்தியம் இல்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் மம்தா , நவீன், முலாயம்சிங், மாயாவதி, நிதிஷ் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முக்கிய காரணியாக விளங்குவர் என தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு இன்னார்தான் தகுதி என்று தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே அறிவித்தால், அந்த நபருக்கும் கட்சிக்கும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். தற்போது, நரேந்திர மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பவார், ராகுல் குறித்து கூறுகையில், அவருடைய திறமை குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது; ஆனால் அவருடைய குடும்ப பின்னணி காரணமாக அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என்றார்.

வரும் தேர்தலில் தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து காங்கிரஸ் உடனான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் எனவும், மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை; ஆனால் ராஜய்சபா எம்பி.,யாக வருவேன் எனவும் தெரிவித்தார்.

திறக்கபடாமல் முதல்வருக்காக காத்திருக்கும் 12 புதிய கல்லூரிகள்

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பதற்காக, தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்ட, 12 அரசு கல்லூரிகள் காத்திருக்கின்றன. அவற்றில் சேர்ந்த மாணவர்கள், 37 நாட்களாக வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டசபை தொடரில், விதி எண் 110 ன் கீழ், "தமிழகத்தில், சிவகாசி, கோவில்பட்டி, முதுகுளத்தூர், திருவாடானை, கடலாடி, குமாரபாளையம், காங்கேயம், பேராவூரணி, ஓசூர், உத்தரமேரூர், காரிமங்கலம், கரம்பகுடி ஆகிய, 12 ஊர்களில், புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் துவக்கப்படும்" என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய கல்லூரிகள் கட்டுவதற்கான நிதி, ஒதுக்கீடும் செய்யப்பட்டன. தற்காலிகமாக, வாடகை கட்டங்கள், அரசு பள்ளி கட்டங்களில், கல்லூரிகள் துவக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானது.

சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய 5 கல்லூரிகளுக்கு, முதல்வர்கள், 15 பேராசிரியர்கள், 17 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மற்ற 7 கல்லூரிகளுக்கும், மாற்றுப்பணியாக பிற கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு இளங்கலை பிரிவிற்கும், 60 பேர் வீதம், ஜூலை 19 முதல், மாணவர் சேர்க்கை நடந்தது. குறைந்த கல்வி கட்டணம் என்பதால், ஒவ்வொரு கல்லூரிகளிலும், 250க்கு மேற்பட்ட மாணவர்கள்,சேர்ந்துள்ள நிலையில், இதுவரை வகுப்புகள் துவக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், "புதிய அரசு கல்லூரி வகுப்புகளை, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம், துவக்கி வைக்க உள்ளார். அதற்காக, கல்லூரிகள் காத்திருக்கின்றன" என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

அரசு கல்லூரிகளில் சேர்ந்து, 37 நாட்களாகியும், வகுப்புகள் துவங்காததால், கல்லூரி எப்போது துவங்கும் என,மாணவர்கள் தினமும் கல்லூரி வந்து கேட்டு செல்கின்றனர். "விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என கல்லூரி நிர்வாத்தினர், கூறி அனுப்புகின்றனர்.

"தாமதமாக வகுப்புகள் துவக்கினால், படிப்பதில் சிரமம் ஏற்பட்டு, பருவத் தேர்வுகளை எழுதுவதிலும், சிக்கல் ஏற்படும்" என மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, உடனே வகுப்புகள் துவக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.