Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 1 மார்ச், 2013

எஸ்.பி.,க்கு வெடிகுண்டு மிரட்டல் : இன்ஜினியர் செண்பகராஜ் கைது


குமரி மாவட்ட எஸ்.பி.,க்கு, தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்ட எஸ்.பி., மணிவண்ணனுக்கு,நேற்று முன்தினம் வந்த இ-மெயிலில், நாகர்கோவில், கன்னியாகுமரியில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அப்பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

அடுத்த சிறிது நேரத்தில், மற்றொரு இ-மெயில் வந்தது. அதில், நாகர்கோவில் ஸ்டேட் பேங்க்கில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும், அது வெடிக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து, டி.எஸ்.பி. ரத்னவேல் தலைமையில் போலீசார், ஸ்டேட் பேங்க் சென்றனர். ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றினர். மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள், வங்கி முழுவதும் சோதனை செய்தனர். எனினும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்தவர் பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இ-மெயில், மொபைல் போன் மூலம் வந்துள்ளதை, சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்தனர். பின், பூதப்பாண்டி அருகே, அழகியபாண்டிபுரம் டவரில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை, உடனடியாக கைது செய்தனர்.

விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் செண்பகராஜ், 22, என்றும், கம்ப்யூட்டர் இன்ஜினியரான, இவர் நண்பரை சிக்க வைக்க, அவரது இ-மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆரம்ப கல்வியில் அறிவியல் ஊக்குவிப்பு அவசியம்


ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில், நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் அதிகளவு மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

அதிகளவு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உருவாக வேண்டும். அதற்கேற்ப கல்வி முறை இருக்க வேண்டும். ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி, என்ற நிலை மாற வேண்டும்.

அறிவியல் சார்ந்த பல துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இந்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் பெற வேண்டும்,&'&' என்றார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன் பேசுகையில், "பிரிட்டன், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல் உட்பட வெளிநாடுகளில் வசிப்போருக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வும், தொலைநோக்கு சிந்தனையும் அதிகம். அதேபோல், நம் மாணவர்களும் அதிகளவு ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

காட்டு யானைகளால் தூக்கத்தை இழந்த கிராம மக்கள்


 தலைவாசல் அருகே, கிராம பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்ததால், மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். எலந்தவாரி வனப்பகுதியில் உள்ள யானைகளை விரட்டுவது குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜவ்வாது மலை பகுதியில் இருந்து, உணவு தேடி வந்த, ஆறு காட்டு யானைகள், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் மேற்கு கல்வராயன் மலை வழியாக, கடந்த, 16ம் தேதி, சங்கராபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தன. கடந்த இரு நாட்களுக்கு முன், இடைபடு காடுகள் வனப்பகுதி வழியாக, தகரை, கல்லாநத்தம், எலவடி உள்ளிட்ட, ஆறு கிராமங்களில் புகுந்த யானைகள், இரண்டு மாடுகள், ஆறு கன்று குட்டி, ஆடுகளை மிதித்து கொன்றன.

குடியிருப்பு வீடுகள், விவசாய நிலங்களில் பயிர் செய்திருந்த கரும்பு, வாழை, மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. இதனால், மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். கடந்த, 27ம் தேதி, அதிகாலை, ஆறு யானைகளும், சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச் சாலையில், சின்னசேலம் புறவழிச் சாலையில், "ஹாயாக' நடந்து சென்று, மீண்டும் திரும்பியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மாலை, 7:00 மணியளவில், தலைவாசல் அருகே, புத்தூர், வரகூர் கரடு வழியாக, புத்தூர் கிராமத்துக்குள் யானைகள் புகுந்ததால், கிராம மக்கள், பீதியில் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் மற்றும் போலீசார், யானைகளை விரட்டியதில், அதிகாலை, 2:30 மணியளவில், ரங்கநாதபுரம் சடையப்பா கோவில் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.
பின், எலந்தவாரி மலை கிராமம் அருகில் உள்ள, எலந்தை மரம், ஆலம் மரம் தோப்பில் சென்று, காட்டு யானைகள் ஓய்வு எடுக்கின்றன. போதுமான உணவு கிடைக்காததால், யானைகள், எலந்தவாரி சடைய கவுண்டன் காப்பு காட்டில், சத்தமிட்டபடி இருந்தன. இதனால், எலந்தவாரி கிராம மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு, வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த யானைகளை, கல்வராயன் மலை, அரூர், திருவண்ணாமலை வழியாக, ஜவ்வாது மலைக்கு அனுப்புவது குறித்து, ஆத்தூர் மாவட்ட வன அலுவலகத்தில், சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட வனப்பாதுகாவலர் கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா மாநிலத்தை வாழ்விடமாக கொண்ட, ஏழு காட்டு யானைகள், ஜவ்வாது மலையில், பல ஆண்டுகளாக இருந்தன. கடந்த ஆண்டு, ஏப்ரல், மே மாதம், 40 வயது கொண்ட பெண் யானை, ஆறு யானைகளை வழி நடத்தி வந்தது.

கர்ப்பமாக இருந்த, அந்த யானையும், குட்டியும் இறந்தது. அதனால், வழித்தடம் தெரியாமல், ஆறு யானைகளும் தவிக்கின்றன. கடந்த, 150 ஆண்டுகளுக்கு முன், கல்வராயன் மலையில், யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விட பகுதியாக இருந்ததால், இந்த யானைகள் வந்துள்ளன.
சேலம், விழுப்புரம் மாவட்ட வனத்துறை இணைந்து, காட்டு யானைகளை, அதன் வாழ்விடமான தாணியப்பாடி, ஜவ்வாது மலைக்கு விரட்டும் பணிகள் மேற்கொள்ளும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மலை அடிவார கிராமங்களில் உள்ள, குடியிருப்பு வீடுகளில், வெல்லம், கொள்ளு, உப்பு போன்றவைகள் வைக்க வேண்டாம். பட்டாசு, வெடி போட்டு தொந்தரவு செய்யாமல் இருந்தால், சேதம் ஏற்படாது. பயிர் சேதத்துக்கு, அரசு நிவாரண உதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.