Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

திறந்தவெளி பல்கலையில் 8 புதிய படிப்புகள்


தொழில் கல்வி அளிக்கும் வகையில், எட்டு புதிய பட்டய படிப்புகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் துவங்கப்படுகின்றன.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமுதாய கல்லூரிகள் மூலம், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது. சுகாதார உதவியாளர், ஆடை வடிவமைப்பு, கணினி வன்பொருள் பழுது பார்ப்பு, அலைபேசி பழுது பார்ப்பு, அழகு கலை நிபுணர் பயிற்சி, நான்கு சக்கர பழுது பார்த்தல் பயிற்சி என, 21 வகையான பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஓராண்டு பட்டய படிப்பு முடித்த மாணவர்களுக்கு, தொழில் துவங்குவதற்காக, 1,000 ரூபாய் அரசு நிதியுதவி அளிக்கிறது. தமிழகம் முழுவதும், 204 சமுதாய கல்லூரிகளில், 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி கற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு, தொழில் கல்வியை கொண்டு செல்லும் வகையில், 2012-13ம் ஆண்டில் பொருத்துதல், நெசவு, பின்னாலாடை, ஆடை சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல் பட்டயம், ஆயத்த ஆடை விற்பனைப்படுத்துதல், திருநங்கைகளின் மனித உரிமைக்கான சான்றிதழ் படிப்பு, சைபர் சட்டங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் புலனாய்வு உள்ளிட்ட, எட்டு புதிய பட்டய படிப்புகள் துவங்கப்படுகின்றன.

புதிய பட்டய படிப்புகளுக்கான, பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூனில் துவங்கும் கல்வியாண்டு முதல், புதிய பட்டய படிப்புகள் சமுதாய கல்லூரிகளில் இடம் பெறுகின்றன.

இதுகுறித்து சமுதாய கல்லூரிகள் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, தொழிற் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என, மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தவெளி பல்லைக்கழகத்தில் விவாதிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள, எட்டு தொழில்களில், புதிய பட்டயப் படிப்புகள் கொண்டு வரப்பட்டுகின்றன.

இதற்கு, டில்லி தொலைதூர கல்வி மாமன்றம், 20 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்


 "சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல் பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன.

இதனால், பள்ளிகளில் உள்ள ஒரு ஆய்வகத்தையே, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஒவ்வொரு பிரிவாக பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும், செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், சரிவர கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.

இதனால், மாணவ, மாணவியர், திருப்தியான முறையில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்கின்றனரா என்பதையும், உறுதியாக கூற முடியாது. இது போன்ற நிலையில், ஆன்-லைன் வழியாக, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் உள்ள மத்திய அரசின் சி.டி.ஏ.சி., (சென்டர் பார் டெவலப்டு ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்) மையமும், கேரளாவில் உள்ள அம்ரிதா பல்கலையும் இணைந்து, இந்த ஆன்-லைன், லேப்பை உருவாக்கி உள்ளன.


www.olabs.co.in என்ற இணையதளத்திற்குள் சென்று, 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், எத்தனை முறை வேண்டுமானாலும், முப்பரிமாண தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படங்களாக, இணையத்தில் உள்ளன. இதை பயன்படுத்தி, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

இது தொடர்பான சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அனுப்பப்பட்டு உள்ளது. அதில், சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி கூறியதாவது: பள்ளிகளில், செய்முறை பயிற்சியை மேற்கொள்ள, போதிய நேரம் கிடைக்காது. ஆன்-லைன் வழியில், எப்போது வேண்டுமானாலும், செய்முறை பயிற்சியில் ஈடுபடலாம்.

மாணவர்களின் செய்முறை தேர்வை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்பமும், இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்திற்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அறிவியல் ஆசிரியை ஷீலா கூறுகையில், "இத்திட்டம், அறிவியலை, மாணவ, மாணவியரின் வீட்டிற்கே கொண்டு செல்வதாக உள்ளது.

ஆன்-லைன் வழியில், மாணவ, மாணவியர், உற்சாகமாக, செய்முறை பயிற்சிகளில் ஈடுபடுவர். இதன் மூலம், அவர்களது அறிவியல் அறிவு மேம்படும்,' என, தெரிவித்தார்.

அப்பாவிகளின் நிலையிலிருந்து நீதிபதிகள் பார்க்க வேண்டும்: தலைமை நீதிபதி அகர்வால்


"ஒரு அப்பாவி, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோர்ட்டை நாடுகிறான். நீதிபதிகள், சட்டத்தின் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அப்பாவிகளின் நிலையிலிருந்து அணுக வேண்டும்,'' என, சென்னை ஐகோர்ட், தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் பேசினார்.

மதுரை ஐகோர்ட் கிளையில் அளிக்கப்பட்ட, வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தன் கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டது குறித்து, மதுரையில், பாண்டிய மன்னனிடம், கண்ணகி நீதி கேட்டதை, "சிலப்பதிகாரம்' கூறுகிறது. இது, தற்போதுள்ள நீதிபரிபாலன முறைக்கு, முன் மாதிரியாக திகழ்கிறது.

மதுரை, "பாரில்' திறமையான வக்கீல்கள் உள்ளனர். மற்ற கோர்ட்டுகளுக்கு முன்னுதாரணமாக திகழ முயற்சிக்கின்றனர். நீதிபதி எம்.சி.சாக்லா, "ஒரு நீதிபதி, வழக்கை கையாளும்போது, சட்டத்தை மட்டும் மனதில் கொள்ளாமல், அது சமூக மேம்பாட்டிற்கும், ஏழைகளை பாதுகாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். கர்வமின்றி நடந்து கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அப்பாவி, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோர்ட்டை நாடுகிறான். நீதிபதிகள், சட்டத்தின் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அப்பாவிகளின் நிலையிலிருந்து, அணுக வேண்டும். பொது மனிதன் நீதி, நியாயம் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, தற்காலிக தலைமை நீதிபதி பேசினார்.