Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 13 பிப்ரவரி, 2013

குற்றாலம் மலைப்பகுதியில் திடீர் தீ அரிய வகை மூலிகைகள், மரங்கள் நாசம்!


குற்றாலம் மலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ காரணமாக பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் சேதமடைந்திருக்கும் என தெரிகிறது. தொடரும் சம்பவங்களுக்கு சமூக விரோதிகள் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு மூலிகைகளுடன் கூடிய மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இவற்றுடன் அடர்ந்த காட்டில் வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது திடீரென தீப்பிடிக்கும் சம்பவம் நடக்கும். இதனால் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் அழியும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் குற்றாலத்தில் கடுமையான வறட்சி காரணமாக அருவிகளை ஒட்டிய நிலையில் விழுந்த தண்ணீரும் தற்போது முற்றிலும் நின்று விட்டது. இதனால் குற்றாலம் வறட்சி பூமியாக காட்சியளிக்கிறது. குற்றாலத்தில் நேற்று மலைப்பகுதியில் திடீரென தீ பற்றி எரிவது கண்டறியப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ சுமார் தொடர்ந்து எரிந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் வளர்ந்துள்ள விலை உயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை செடி, கொடிகளும் தீயில் எரிந்திருக்க கூடுமென கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் காரணமாக இருக்க கூடுமென்ற அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையில் வேகமாக பரவி வரும் தீயினை கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

செங்கோட்டை- சென்னைக்கு கூடுதல் ரயில், பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா...?


மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் ரயில்வே பட்ஜெட்டும் முக்கியமானதாகும். இந்த ரயில்வே பட்ஜெட் கூட்டத்தினை அனைத்துதரப்பு மக்களும் உன்னிப்பாக கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

செங்கோட்டையில் இருந்து, சென்னைக்கு தினமும் இரவு 7 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், செங்கோட்டை- மதுரைக்கு நாள் ஒன்றுக்கு 3 முறை பாசஞ்சர் ரயில்களும், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு, தினமும் 3 முறை ஒரே ஒரு பாசஞ்சர் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் எப்பொழுதுமே மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இடைப்பகுதியில் உள்ள சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி பகுதிகளை சேர்ந்த ரயில் பயணிகள், வியாபாரிகள், வர்த்தகர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மதுரை- செங்கோட்டை வரை இரட்டை வழி ரயில்பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்றும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வழித்தடத்தில் கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்பட்டால் இப்பகுதி மக்கள் மிகவும் பயனடைவதோடு மட்டுமல்லாமல் தென்னக ரயில்வேக்கு அதிகளவு வருமானமும் கிடைக்கும்.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் செல்லும் ரயிலில் செல்ல டிக்கட் எடுப்பதற்கே ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனர். ரயிலில் எப்போதுமே கூட்டம் நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் வழியோர பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வருமானத்தை கணக்கில் கொண்டு ரயில்வே துறை நிர்வாகம் சார்பில் கூடுதலாக பகல் நேரத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளான செங்கோட்டை- கோவை பாசஞ்சர் ரயில், மதுரை- செங்கோட்டை இருவழிப்பாதை மின்சார ரயில், செங்கோட்டை - நெல்லை கூடுதலாக ஒரு ரயிலும், செங்கோட்டை சென்னை பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டுமென்ற பல ஆண்டு கோரிக்கையினை வரும் 26ம் தேதி நடக்கும் ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டத்தை சேர்ந்த எம்பி.,க்கள் மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக., அமைச்சர்கள் இந்த கோரிக்கையினை நிறைவேற்றிட முன்வர வேண்டுமென ரயில்வே பயணிகள் மற்றும் வர்த்தகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 30 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலை


இந்தியாவில் இன்ஜியரிங் படிப்புக்கான மவுசு இன்னமும் உச்சத்தில் இருக்கிறது. இதன் விளைவாக இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

அக்கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்புகிறதா என்று கேட்டால் கேள்விக்குறியே. ஏனெனில், எந்தளவுக்கு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, அதே அளவுக்கு காலியிடங்களும் அதிகரிக்கின்றன. இந்தாண்டு தேசிய அளவில், புதிதாக 180 இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு, ஏ.ஐ.சி.டி.இ., இடம் அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதே நேரத்தில் 40 கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கோரியுள்ளன. இதில் 30 கல்லுõரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. 2012 - 13 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள இன்ஜினி யரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 525 ஆக உள்ளது. இவற்றில், கடந்தாண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.

இதில் 50 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். 48 விதமான இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் வெறும் 10 மாணவர்களுக்கு கீழே தான் சேர்ந்துள்ளனர். இது, புதிதாக கல்லூரி தொடங்க நினைப்பவர்களை எந்தளவுக்கும் யோசிக்க வைப்பதில்லை. கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் குறைவு காரணமாகவும், காலி இடங்கள் அதிகரிக்கின்றன.