Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 3 மார்ச், 2013

பாபநாசம் அணையில் விரைவில் படகுபோக்குவரத்து மீண்டும் துவங்க முடிவு


திருநெல்வேலி மாவட்டம்  காரையார் பாபநாசம் அணையில் கடந்த சுமார் 6 மாதங்களுக்கு முன் பல்வேறு காரணங்களால் படகுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் படகு தொழிலை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து படகு உரிமையாளர்கள் அரசாங்கம் மற்றும் வனத்துறையினரிடம் பாபநாசம் அணையில் படகு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தொடர்ந்துகோரிக்கை வைத்தனர். இந்நிலையில்நேற்று இது தொடர்பான இரண்டாவது உள்ளூர் ஆலோசனைக்குழு கூட்டம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் நடந்தது.

புலிகள் காப்பகம் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி தலைமை வகித்தார். கூட்டத்தில் அம்பை எம்.எல்.ஏ., சுப்பையா, மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி, கன்னியாகுமரி கலெக்டர் நாகராஜன், நெல்லை மாவட்ட புலிகள் காப்பக கள இயக்குநர் சுப்ரதமகாபத்ரா, மாவட்ட வன அலுவலர் பத்மா, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் ரிட்டோதிரியாஸ்,சேரன்மகாதேவி சப்-கலெக்டர்ரோகிணி, அம்பை தாசில்தார் சரஸ்வதி, உதவி வனப்பாதுகாவலர் ஆனந்த்குமார், அம்பை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் குருசாமி, களக்காடு புலிகள் காப்பகம் துணை இயக்குநர்சேகர், ஆலங்குளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வி.கே.புரம் நகராட்சி தலைவி மனோன்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலத்துறை முகம்மது ஹைதர்அலி, மணிமுத்தாறு பஞ்.,தலைவர் சிவன்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் படகு உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி பாபநாசம் அணையில் படகு இயக்குவது என்றும், படகை இயக்கும்போது அணைப்பகுதி தண்ணீரில் டீசல் கசிவு கூடாது, படகில் சைலன்சரை பொருத்தி இயக்கவேண்டும், மண்ணெண்ணெய் ஊற்றி படகு இயக்க கூடாது, படகு அணையில் ஓட இருப்பதால் தண்ணீருக்குள் கழிவு ஏதும் கலக்காமல் இருக்கவேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து இன்னும் சில நாட்களில் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் குதிரைவெட்டி வரை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மல்கானி , மாவட்ட டிஆர்ஓ உமாமகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதி உற்பத்தியாகி மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருப்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். அதேநேரத்தில் தண்ணீரும் மிகவும் மதிப்பு மிக்கது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரச்னைகளையும் முக்கியமாக கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் படகுபோக்குவரத்து துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வாழும் மலை வாழ் மக்களுக்கும் அணையில் படகு இயக்க நியாயமான வாய்ப்பு கொடுக்கவேண்டும். மொத்தம் 24 படகுகள் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சுமார் 3 நாட்களில் அணையில் படகுபோக்குவரத்து துவங்கப்படும். அப்போது படகு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்ட முடிவில் காரையார் காணிக்குடியிருப்பு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் அம்பை எம்.எல்.ஏ.,சுப்பையாவை முற்றுகையிட்டு பாபநாசம் அணையில் இயக்கப்படும் படகுகளில் எங்களுக்கும் உரிமைவேண்டும். இதுகுறித்து நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கூறினர். இதனை தொடர்ந்து ஏற்கனவே அணையில் படகுபோக்குவரத்து நடத்தும் உரிமையாளர்களுக்கும், பழங்குடி காணியின மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் எம்.எல்.ஏ., சுப்பையா தலைமையில் நடந்தது.

அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்குகொருவர்பேசி நல்ல முடிவு எடுக்கவேண்டுமென்று எம்.எல்.ஏ., சுப்பையாகேட்டுக் கொண்டார். இந்நிலையில் பழங்குடியின மக்களுக்கு படகு ஓட்டுவதற்கு உரிமை கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அணையில் படகை ஓட்டவிமாட்டோம் என்றும் காணியின மக்கள் தெரிவித்தனர்.

இந்திய நாட்டின் மிகப்பெரிய "ஷாப்பிங் மால்" கொச்சியில் 25 லட்சம் சதுரடியில் ரெடி


நாட்டின், மிகப் பெரிய வணிக வளாகம், 25 லட்சம் சதுரடி பரப்பளவில், கொச்சியில் தயாராகி விட்டது. இந்த வளாகம், வரும், 10ம் தேதி திறக்கப்படுகிறது. கேரளாவின் வர்த்தக தலைநகரான, கொச்சி, எடப்பள்ளி பகுதியில், "லூலு மால்" என்ற பெயரில், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் செயல்படும், மிகப் பெரிய வணிக நிறுவனமான, "லூலு' சென்டர்களின், நிர்வாக இயக்குனர், யூசுப் அலிதான், இந்த வணிகவளாகத்தை கட்டியுள்ளார். மொத்தம், 17 ஏக்கர் நிலத்தில், 25 லட்சம் சதுரடியில், 1,600 கோடி முதலீட்டில், மூன்று தளங்களுடன் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நகைகள், துணிகள், மின்னணு சாதனங்கள், காலணிகள், வங்கி கிளைகள், ஏ.டி.எம்., மையங்கள், ஒன்பது தியேட்டர்கள், 27 உணவகங்கள், குழந்தைகள் விளையாட, 55 ஆயிரம் சதுரடியில் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் உட்பட பல வகையான, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில், மாநிலத்திலேயே அதிகளவி லான, ஒன்பது தியேட்டர்களை, பி.வி.ஆர். நிறுவனம் அமைத்துள்ளது. தினமும் ஒரு லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான இந்த வணிக வளாகம், வரும், 10ம் தேதி திறக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி ரத்து: மத்திய அரசின் திட்ட நிதியை வீணாக்கும் தமிழக அரசு


அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டதால், அதற்கான நிதி வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, கட்டமைப்பு வசதி, கல்வி முறையில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் துவங்கி, ஃபிப்ரவரி மூன்றாம் வாரம் வரை, ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடவாரியாகவும், நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வும், பொதுத்தேர்வும் நடத்தப்பட உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கல்வித்திறனை பாதிக்கும் என்பது குறித்து காலைக்கதிரில் செய்தி வெளியானது.இதனால் தமிழக அரசு அனைத்து பயிற்சிகளையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 40 கோடி ரூபாய்க்கும் அதிக அளவில் ஆசிரியர் பயிற்சிக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மார்ச் 31ம் தேதிக்குள் பயன்படுத்தாவிட்டால், மீண்டும் மத்திய அரசுக்கு திரும்ப வழங்க வேண்டியிருக்கும்.

அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சியை ரத்து செய்திருக்க வேண்டியதில்லை எனவும், அதனால், அதற்கான நிதி விரயமாவதாகவும் கல்வி அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்வித்துறை அலுவலர் கூறியதாவது:திட்ட நிதியை பொறுத்தவரை, அந்த நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மார்ச், 31ம் தேதிக்குள் செலவழிக்காவிட்டால், அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஜூன் மாதம் முதல், டிசம்பர் மாதத்துக்குள் வழங்காமல், தேர்வு நேரத்தில் நடத்த திட்டமிடுவதும், அதை ரத்து செய்வதும் என, அதற்கான நிதியை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படுகிறது.

அடுத்த ஆண்டிலாவது முன்கூட்டியே பயிற்சியை நடத்தி, நிதி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.