Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பரிதாபமாக அடங்கிப்போன இரு அரசியல் பிரபலங்கள்

அரசியலில் நீண்ட காலம் ஆவேசமாக பணியாற்றி, இப்போது அடங்கிப் போனவர்களில் இருவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, 67 மற்றும் சமதா கட்சியின் முன்னாள் தலைவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், 83, குறிப்பிடத்தக்கவர்கள்.

பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அரசியலே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். அதற்காகவே, திருமணம் செய்து கொள்ளாமல், காலத்தைக் கடத்தியவர், 49 வயதில், இப்போதைய மத்திய அமைச்சர் தீபாவை திருமணம் செய்து கொண்டார்.கடந்த, 2011ம் ஆண்டு அவர் படுக்கையில் படுக்கும் வரை தீவிரமாக செயலாற்றியவர். மேற்கு வங்கத்தின், ராய்கஞ்ச் லோக்சபா தொகுதியிலிருந்து தொடர்ந்து, ஐந்து முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ராஜிவ் பிரதமராக இருந்த போது, இணை அமைச்சராக இருந்தவர்.

பல ஆண்டு காலம், இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்; மன்மோகன் சிங்கின், முதலாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர். காங்கிரசை ஆதரித்து பேசுவதில் முன்னணியானவர்.திடீரென ஏற்பட்ட பயங்கரமான பக்கவாத நோயால், படுத்த படுக்கையாகி, உயிருள்ள சடலமாக, தன் மனைவியின் வீட்டில் படுத்துக் கிடக்கிறார். அவரின், இதயம் மட்டும் இயங்குகிறது; உடல் உறுப்புகள் எதுவும் செயலாற்றவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அறையை விட்டு வெளியே வர முடியாமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவரை, எழுப்பப் போவது யாருமில்லை. ஏனெனில், டில்லி, "எய்ம்ஸ்' மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்; ஜெர்மனியின் டசல்டர்ப் நகரின் டாக்டர்களும், அவரை குணப்படுத்த முடியாது என, தெரிவித்து விட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறார்.

அது போலவே, 20 வயதில் துவங்கிய போராட்டத்தை, 80 வயது வரை நடத்திய ஜார்ஜ் பெர்னாண்டசும், வினோத உடல்நலக்குறைவால், மூன்றாண்டு காலமாக முடங்கிக் கிடக்கிறார். கிறிஸ்தவ பாதிரியாராக வர வேண்டியவர், அரசியல்வாதியாக மாறி, இந்திரா, ராஜிவ் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். அரசியலில் சிங்கமாக உலா வந்தவர், இப்போது, தன் முன்னாள் மனைவி லைலா கபீர் வீட்டில், சுயநினைவு இல்லாமல் சுருண்டு கிடக்கிறார்.