Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 17 செப்டம்பர், 2012

விரைவில் 3,000 முதுகலை ஆசிரியர் நியமனம் : அமைச்சர் சிவபதி

"தமிழகத்தில் விரைவில், 3,000 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பேசினார்.
தமிழக மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதல் கட்டமாக, 1,080 பணியிடங்களுக்கு மாவட்ட அளவிலான கவுன்சிலிங், ஆன்-லைன் மூலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 397 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள, 683 காலிப் பணியிடங்களுக்கு, மாநில அளவிலான கவுன்சிலிங், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.இந்தியாவிலேயே முதல் முறையாக, ஆன்-லைன் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமன கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் முன்னிலை வகித்தார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உட்பட, 13 பாடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சிவபதி பேசியதாவது:தமிழக அரசு இதுவரை, ஒளிவு, மறைவில்லாமல் கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல், பணி நியமன ஆணைகளை வழங்குகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், முதல் முறையாக இணையதளம் (ஆன்-லைன்) மூலம் கவுன்சிலிங் நடக்கிறது. மாவட்ட அளவிலான கவுன்சிலிங் நேற்று நடந்தது. சொந்த மாவட்டங்களில் பணியிடம் இல்லாதவர்களுக்கு, இன்று (நேற்று) விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யும் கவுன்சிலிங் நடக்கிறது. பணி ஆணை பெறும் ஆசிரியர்கள், அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். பெற்றோர் போல மாணவர்களிடம் நடக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் துவங்கி, 25 ஆண்டு கால வரலாற்றில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் என மொத்தம், ஒரு லட்சத்து, 3,000 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத, 59 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சொந்த மாவட்டங்களில் வேலை கிடைக்காதோர் கவலைப்பட வேண்டாம். விரைவில், 3,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அப்போது, "சீனியாரிட்டி' அடிப்படையில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.