Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மத்திய அரசு வழங்கும் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு விற்கிறார் மோடி - சோனியா


மத்திய அரசு வழங்கிய நிதியை எல்லாம் சில தொழிலதிபர்களின் நலனுக்காக செலவழித்து விட்ட நரேந்திர மோடி, சராசரி மக்களின் வாழ்வை சீர்குலைத்து விட்டார் என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 2வது கட்ட தேர்தல் நடைபெறும் காந்தி நகர் தொகுதியில் சோனியா காந்தி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியதை விட 50 சதவீதம் கூடுதல் நிதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கியுள்ளது. முக்கியமான சில நபர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வளர்ச்சிக்காக இந்த நிதியை மோடி செலவழித்துள்ளார். சாமானிய மக்களுக்கு இந்த நிதியினால் எந்த பலனும் சென்றடையவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் குஜராத்திற்கு மத்திய அரசு 3,128 மெகாவாட் மின்சாரம் வழங்கி வருகின்றது. ஆனால் மின் இணைப்புக்காக காத்திருக்கும் ஏழைகளுக்கு புதிய மின்சார இணைப்பை வழங்க மறுக்கும் குஜராத் அரசு, 800 மெகாவாட் மின்சாரத்தை விலைக்கு விற்று, லாபம் சம்பாதித்து வருகின்றது.

குஜராத்தில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டியில் குதித்துள்ளோம். தவறான வாக்குறுதிகளின் மூலம் மக்களை தவறான பாதையில் மோடி வழி நடத்துகின்றார். பல்வேறு திட்டங்களின் மூலம் மத்திய அரசு வழங்கிய நிதியை அவர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. மற்ற கட்சிகளைப் போல் வெற்று வாக்குறுதிகளை நாங்கள் வழங்குவதில்லை.

ஆட்சிக்கு வந்தால் எங்கள் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் நிறைவேற்றுவோம். மோடியின் ஆட்சியில் குஜராத் எந்த வகையிலும் முன்னேறவில்லை. இங்குள்ள 20 லட்சம் பேர், வீடுகளின்றி தெரு ஓரங்களில் வசிக்கின்றனர். வேலை இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது. நலிவுற்ற பிரிவு மக்களின் மீது மோடியின் அரசு அக்கறை காட்டவில்லை. ஊழல் செய்பவர்களை பாதுகாத்து, அப்பாவிகளை தண்டிக்கும் இந்த அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டும். இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சியில் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் போராட்டம்


காவிரியில் தண்ணீர் இன்றி சம்பா பயிர் கருகி வருவதால்  விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை தள்ளுபடி     செய்யவேண்டும், விவசாயிகள் வாழ வழிவகை செய்யவேண்டும், நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு அரசு உரிய விலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட பாரதீய கிசான்சங்கம் சார்பில் இன்று, அரைநிர்வாணத்துடன் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தது.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.  அதையும் மீறி திட்டமிட்டபடி ரெயில் மறியல் நடைபெறும் என பாரதீய கிசான் சங்கம் அறிவித்தது. அதன்படி இன்று காலை மாநில   துணைத்தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டவிவசாயிகள் திருச்சி ஜங்ஷன்ரெயில் நிலையத்திற்கு சட்டையின்றி திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியிருந்தனர். அத்துடன் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸ் உதவி கமிஷனர்கள் காந்தி, சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் சிகாமணி, நிக்சன்  உள்ளிட்ட போலீசார் மறித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய  முயன்றனர். அப்போது போலீசாரிடம் ரெயிலை மறிக்க தங்களுக்கு அனுமதி  வழங்கவேண்டும் என்று கேட்டனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு திடீரென ரெயில் நிலையம் முன்புள்ள ரோட்டில் படுத்தார். வெயில் அதிகமாக இருந்ததால் கொதிக்கும் தரையில் படுத்த அவரை எழுந்திருக்குமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே விவசாயிகள் சிலர் அங்கிருந்து நழுவி ரெயில்   நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கினர். அந்த சமயம் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு உருவானது. இதைத்தொடர்ந்து போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டஅய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை கைது செய்து குண்டு கட்டாக வேனில் ஏற்றினர்.

"இன்னும் சிறைகளிலேயே தொடர்கிறவர்களும் ஒப்புக் கொள்ளுகிற உண்மை" - 'பிறைமேடை' தலையங்கம் -எம். அப்துல் அப்துல் ரஹ்மான் எம்.பி


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

உணர்வலைகள் உந்தப்படுகிறபோது உண்மைகளும், யதார்த்தங்களும் பல சமயங்களில் திசை மாறிவிடுகின்றன. ஆயுள் சிறைவாசிகளாக அடைக்கப்பட்டுக் கிடக்கிற தேகங்கள் கதிரவனின் கடும் வெப்பத்தை மறைத்து நிற்கிற மேகங்களைப் போன்றவவைகள். தோற்றத்தில் மேகங்கள் கருமையைப் பூசிக் கொண்டதைப்போலத்தான் தெரியும்; அவைகளுக்குள் அடங்கிக் கிடப்பது அனைத்து ஜீவன்களுக்கும் அவசியமான தண்ணீர் அல்லவா? அதைப் போலத்தான் இவர்களைப் பார்க்கிறபோது தவறு செய்தவர்களாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். சரியா, தவறா என்பதற்குள் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனாலும் தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் சிறைக் கொட்டடிகளிலிருந்து மீண்டு வந்தவர்களும், இன்னும் சிறைகளிலேயே தொடர்கிறவர்களும் ஒப்புக் கொள்ளுகிற உண்மை இது. இருந்தபோதிலும் இவர்களின் இதயங்கள் தங்களின் சுயலாபங்களை எண்ணியதே இல்லை; தங்களின் சொந்தபந்தங்களைக்கூடப் பெரிதாக ஏற்கவில்லை; மனைவி மக்களையும் மனதில் கொள்ளவில்லை; முழுக்க முழுக்க உள்ளார்ந்த உணர்வுகளுக்கு மட்டுமே உருகி நின்றார்கள்; "இளங்கன்று பயமறியாது என்பார்களே; இந்த இளங்குருத்துக்களை இஷ்டத்திற்கு வழிகாட்டியவர்கள் இன்பமாக உலா வருகிறார்களே; தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்களே" என்று வேதனைக் கண்ணீர்விட்ட நம் தலைவர் மர்ஹும் சிராஜுல் மில்லத் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன். அப்படி மாட்டிக் கொண்டவர்களில் ஒருவன்தான் தம்பி கோவை அபுதாஹிர்.


அபுதாஹிரோ மற்ற எவருமோ சிறை செல்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு துளியளவும் காரணம் இல்லை; என்றாலும் அவனது உடல்நிலை எஸ்.எல்.இ. என்று சொல்லப்படும் ஓர் அபூர்வ கொடிய நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல், மண்ணீரல், இதயம் மற்றும் அவனுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் ‘‘என்னை வழிகெடுத்தவர்களும் கைவிட்டுவிட, பரிதவித்து நிற்கிற எனக்கு ஆதரவு கரம் நீட்டமாட்டீர்களா?’’ எனத் தகவல் அனுப்பிக் கேட்டான் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் அவர்களிடத்தில். ஏறத்தாழ ஐந்து வருடங்களாகின்றன. இதுவரையிலும் 11 தடவை பரோலில் வெளியே வந்து தனது சுற்றத்தார் ஆதரவோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாலேதான் இந்த அளவுக்காவது இறைவனின் பேரருளால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சொல்ல வேண்டும். இந்த 11 தடவைகளில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பரோலில் வெளிவந்த 2 தடவை நீங்கலாக மற்ற 9 தடவைகளும் முஸ்லிம் லீக் தலைமை மேற்கொண்ட முயற்சியால் மாத்திரமே சாத்தியமானது என்பதை எவரும் மறுக்க முடியாது.

துரதிஷ்ட நிலை; ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பிறகு பலமுறை நாம் விண்ணப்பங்கள் கொடுத்தும், அபுதாஹிரின் சுற்றத்தார் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போகவே அவரின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றமும் சென்ற 24.08.2012 அன்று அளித்த தீர்ப்பில் ‘அபுதாஹிரின் மருத்துவ சிகிச்சையை முக்கிய அம்சமாகக் கொண்டு 90 நாட்களுக்கு பரோலில் வெளியே சென்று வரலாம்’ என ஆணை பிறப்பித்தது. ‘அபுதாஹிரை வெளியேவிட முடியாது’ என்று அடம்பிடித்துக் கொண்டு அரசு தரப்பில் மறுபரிசீலனை மனுதாக்கல் செளிணியப்பட்டது. உயர்நீதிமன்றம் அதையும் டிஸ்மிஸ் செய்து ‘உடனே பரோலில் விடவேண்டும்’ என்று மறுதீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வந்து இப்போது இரண்டு மாதங்கள் ஆகியும் பரோலில் விடுவதற்குப் பதிலாக மொட்டைப் பிடிவாதம் கொண்டு தமிழக அரசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அரசாக தமிழக அரசு இருப்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு அபுதாஹிரின் குடும்பத்தார் கொண்டு சென்றால் என்னவாகும்? என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.


இதற்கிடையில் சென்ற சில தினங்களுக்கு முன்பாக சிறைச்சாலையிலேயே கிடந்த அவனது உடல் நிலை மிகவும் மோசமாகி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். அங்கேயும் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் கோவை குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் இருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்தது. இதற்கு முன் பலமுறை தமிழக அரசின் உள்மீதுறைச் செயலாளரையும், சிறைத் துறை மேலதிகாரியையும் சந்தித்து பரோலில் விடுமாறு வேண்டுகோள் வைத்திருந்தபோதிலும் சென்ற 27.11.2012 அன்று டில்லியிலிருந்தே தமிழக உள்துறைச் செயலாளர் திரு.ராஜகோபால் அவர்களுக்கு பேக்ஸ் மூலம் வேண்டுகோள் கடிதம் அனுப்பி பரோலில் விடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.

தமிழக அரசின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் தென்படாமல் இருந்ததால் சென்ற 8.12.2012 சனிக்கிழமையன்று சென்னை அரசு தலைமைச் செயலகத்திற்கே சென்று உள்துறைச் செயலாளரை நேரில் சந்தித்து சற்று கடுமையாகவே அழுத்தம் கொடுத்து நிலைமையை விளக்கினேன். வழக்கம்போல ஆவண செளிணிவதாகச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற வகையில் பதில் இருந்ததாகச் சொல்லலாம். நல்லது இனிமேலாவது நடக்கட்டும்.

தீவிர சிகிச்சையில் இருக்கும் அபுதாஹிரைச் சந்தித்து நிலைமையை அறிய விருப்பம் கொண்ட தாளிணிச்சபை முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் மறுநாளே என்னை கோவை புறப்பட்டுச் செல்லப் பணித்தார்கள். அன்றிரவே பயணித்து மறுநாள் ஞாயிறு காலை கோவை சென்றடைந்து கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடன்வர நேராக மருத்துவமனைக்குச் சென்றேன்.

ஒடுங்கிப்போன தேகம்; நடுங்கிப்போன இதயம்; வீங்கிப்போன முகம்; கழுத்திலும் கைகளிலும் செருகப்பட்ட நிலையில் மருந்துக் குழாய்கள்; தலைவிரி கோலமாகவும்  கண்கள் இரண்டையும் ஒப்புக்காக மூடித் திறக்கும் இறுகிய இமைகள்; நெஞ்சு புடைத்து மீண்டும் உள்வாங்கும் மூச்சுத் திணறல்; உடுத்திய கைலியைக்கூடப் பிடித்துக் கொள்ளாத முடியாத குழியாக  ஆகிவிட்ட வயிறும் இடுப்பும்; பார்த்த மாத்திரத்தில் ‘வாங்க’ என்றுகூடத் தெளிவாகச் சொல்ல முடியாமல் ஒட்டிக் கொண்ட உதடுகள்; படுத்த நிலையில் இருந்த தேகம் மெதுவாக எழுந்து உட்கார முயற்சிக்கிறது; முடியவில்லை. இந்த தேகத்தைச் சுற்றி ஏ.கே.47 துப்பாக்கியுடனும், காக்கி உடையுடனும் எட்டு காவல் துறை அதிகாரிகள்; இரண்டு உளவுத்துறை அதிகாரிகள். இவர்களெல்லாம் பாதுகாப்புக்காக நிற்கிறார்களாம் மருத்துவமனையில். கைதி தப்பிவிடாமல் இருப்பதற்காம். என்னே உஷார்! ‘‘இந்த துப்பாக்கியே நோயைப் பன்மடங்காக்கிவிடும்போல் இருக்கிறது சற்று தள்ளி நில்லுங்கள்’’ என்று துப்பாக்கியுடன் அருகில் நின்று கொண்டிருந்த காவலாளியிடம் சொன்னேன்.

அபுதாஹிருக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் மறுநாளே டில்லி செல்ல வேண்டும். கோவைக்குச் சென்றபோது சிறைவாசிக் குடும்பங்களுக்காக உதவிடும் கிச்சான் புகாரி, சம்சுதீன், கோவை தங்கப்பா, ரஹ்மத்துல்லாஹ், அப்துல் பாசித், குட்டியப்பா என்று பலரும் சந்தித்து பல்வேறு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிறைநெஞ்சே! கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த அபுதாஹிரைக் கண்டு கொள்ள எந்த கழகம் முன்வந்தது? எந்த அமைப்பு அருகே வந்தது? இப்போது சில நாட்களாக அபுதாஹிரின் உடல்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டு விளம்பரமே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. போராட்டம் என்றும், முற்றுகை என்றும், அத்துமீறல் என்றும் திடீரென கரிசனம் வந்து அபுதாஹிருக்காகச் செளிணிகிறோம் என்கிறார்களே! உள்ளபடியே அபுதாஹிருக்கு பரோல் விடுதலை கிடைக்க வேண்டும் என்றுதான் செய் கிறார்களா? அல்லது இப்படிச் செய்வதால் அதிகாரிகளுக்கு எரிச்சல் உண்டாகி பரோல் கிடைக்கப் பெறாமல் போய்விடட்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது இத்தனை நாட்கள் முஸ்லிம் லீகைத் தவிர வேறு யாருமே அண்டவில்லையே! எங்கே போனார்கள் இவ்வளவு நாட்களாக? நாம் கேட்கவில்லை. அபுதாஹிரின் சுற்றமே கேட்கிறது.

யாராவது பதில் சொல்வார்களா? உளப்பூர்வமாக ஈடுபட்டால் வரவேற்க வேண்டியதுதான்.

உருகிக் கொண்டிருக்கும் அருமைத் தம்பி அபுதாஹிர் உடல் நலம் பெற துஆ செய்வோம்; துணை நிற்போம்!

தயவு செய்து அவனை விளம்பரப் பொருளாக மட்டும் ஆக்கிவிடாதீர்கள் !என்று பிறைநெஞ்சே! நீயும் கேள்; நானும் கேட்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்.