Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 மார்ச், 2013

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்


ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள் குறித்து மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்தார்.

தீர்மானம் வெற்றி
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவுள்ளதாக்கும் விதத்தில் இந்தியா திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் குரல் கொடுத்தன.ஆனால் இந்தியா அப்படி திருத்தம் எதுவும் கொண்டுவராமலேயேதான், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இலங்கை தமிழர்களுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மத்திய அரசு செய்த துரோகம் என்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர்த்த பிற தமிழக எம்.பி.க்கள் ஆவேசமாக விமர்சிக்க வைத்துள்ளது.

சல்மான் குர்ஷித் விளக்கம்
இந்த நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் நேற்று பேட்டி அளித்தார். அப்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–ஜெனீவாவில் (அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்ய) இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் திருப்தி அளிக்கிறது. இந்த தீர்மானத்தில், சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், ‘சர்வதேச சமுதாயம் திருப்தி அடையும் வகையில்’ என்ற வாசகங்கள் இந்தியாவால்தான் சேர்க்கப்பட்டன.

முயற்சிக்கப்பட்டது
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. மிகவும் வலுவான வார்த்தைகளுடன் தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு சீர்குலைக்கப்பட்டது. இந்தியாவுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அதில் மாற்றங்கள் செய்யவும், ஆதரவு திரட்டி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவும் முயற்சிப்பதுதான் சிறந்தது.

இலங்கை உறவு முக்கியம்
இலங்கையுடனான உறவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இந்தியா இலங்கையுடன் இணைந்து செயல்பட்டுத்தான், அங்குள்ள தமிழர்கள் மறுவாழ்வு பெறுவதற்கும், அரசியல் உரிமைகள் பெறுவதற்கும் இந்தியா பாடுபட முடியும்.இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

கல்லூரியிலேயே தேர்வு கட்டணம் கட்ட அனுமதிக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை


திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் மனோ கல்லூரியில் இதுவரை கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி வந்த தேர்வு கட்டணம் பட்டமளிப்பு கட்டணம் ஆகியவற்றை வ்ங்கி மூலம் செலுத்த வேண்டும் என திடீரென கூறியதால் மாணவிகளுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது. முன்பு போல் கல்லூரியிலேயே தேர்வு கட்டணம் கட்ட அனுமதிக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

சாத்தான்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இது பெண்கள் மட்டுமே பயிலும் மகளிர் கல்லூரியாக செயல்படுகிறது. மாணவிகள் தங்கள் தேர்வுக் கட்டணம் மற்றும் அரியர்ஸ் பாடங்களுக்கான கட்டணம் ஆகியவற்றை கல்லூரி அலுவலகத்திலேயே செலுத்தி வந்தனர். எல்லா கல்லூரிகளிலுமே இதுதான் நடைமுறையாக உள்ளது.

இந்த ஆண்டு திடீரென அனைத்து கட்டணங்களும் "பதிவாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்" என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும் என கூறிவிட்டனர். இதனால் மாணவிகள் கல்லூரியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.350 வரைவோலை எடுக்க ரூ.31 டிடி கமிஷன் செலுத்தவும் வேண்டியுள்ளது. இதில் தேர்வுக் கட்டணம், அரியர்ஸ் தேர்வு கட்டணம், பட்டம் பெறுவதற்கான கட்டணம் என தனித்தனியாக டிடி எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.93 கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும் தற்போது கல்லூரி, இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை போராட்டத்திற்காக காலவரையறையின்றி மூடப்பட்டதாலும் மாணவிகள் தேர்வு கட்டணம் செலுத்த தினசரி வந்து செல்கின்றனர். மேலும் அதற்குரிய படிவம் பல்கலைக்கழகத்திடம் இருந்து வரவில்லை என திருப்பி அனுப்பப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.

எனவே முன்புபோல் மாணவிகளிடம் கட்டணங்களை கல்லூரியிலேயே வசூல் செய்து மொத்த தேர்வு கட்டணத்தையும் ஒரே வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ பல்கலைக்கழகத்தில் செலுத்த கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரம் உயராத பள்ளி கூடம் கல்வியை கைவிடும் மாணவர்கள்!


திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், இப்பகுதி மாணவர்கள் சிலர் 9ம் வகுப்பை தொடர முடியாமல் படிப்பை கைவிடும் அவலம் தொடர்கிறது.

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியம் முருக்கம்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, 1960ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி 2004ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 258 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

இப்பள்ளியில் 8-ம் வகுப்பை முடித்த மாணவ, மாணவிகள், 9-ம் வகுப்பைத் தொடர சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள மணலூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட தச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. நெடுந்தொலைவு மற்றும் போதிய போக்குவரத்து வசதியின்மை காரணமாக சில மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்க இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இக்கிராம மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இக்கிராம ஊராட்சித் தலைவர் ஏ.கருணாகரனிடம் கேட்டபோது, இப்பள்ளியை தரம் உயர்த்த ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு முன்மொழிவுகள் முறையாக அனுப்பி வைக்கப்படுகிறது. சென்ற 15-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து முன்மொழிவுகள் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு முறையாக மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதி இருந்தும் இப்பள்ளியை தரம் உயர்த்தாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

எனவே, மாணவ, மாணவிகள் கல்வியை இடைவிடாது தொடரும் வகையில், இப்பள்ளியை தரம் உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகுதி நேர பொறியியல் படிப்பு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

விண்ணப்பப் படிவங்களை சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும், கோவையில் அரசு பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தைப் பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணமாக பிற இனத்தவர்களிடம் ரூ. 300-ம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் எஸ்.சி.ஏ. பிரிவினரிடம் ரூ. 150-ம் வசூலிக்கப்படும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை, "செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கை, கோவை'' என்ற பெயரில் வரைவோலையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களைப் பெற விரும்புபவர்கள் வரைவோலையுடன், சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில் ரூ. 50 அஞ்சல் தலையை ஒட்டி, "செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பகுதி நேர இளநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன.