Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 டிசம்பர், 2012

சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது மறைந்துவிட்டார்.----- பேராசிரியர் .கே.எம்.காதர் மொஹிதீன்


 மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்து இன்று (20-12-2012) அதிகாலை 2-30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவ மனையில் மரண முற்றார் என்னும் செய்தி நெஞ்சைப் பிழிந்தது.

அவரின் ஜனாஸா நல்லடக்கம் கடையநல்லூரில் 21-12-2012 காலை 9 மணிக்கு நடைபெற விருக் கிறது என்னும் தகவலும் வந்திருக்கிறது. ஹஜ்ரத் அவர்களின் மகன்களும் மருமகன்களும் உடனிருந்து பலவிதமான நல்ல சிகிச்சைகளையும் செய்து வந்தனர். அல்லாஹ்வின் நாட்டம் ஆலிம் அவர்களின் மறைவு இன்றைக்கு ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம்கள் உணருகிறோம்.

மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்கள் உலமாகளில் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்; குர்ஆன் ஹதீஸ் ஷரீஅத் சட்ட விளக்கங்களில் ஒளிச்சுடராக விளங்கியவர்; தஸவ்வுஃ என்னும் ஆன்மீக ஞானக்கலையில் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். அவரின் பெயரில் அவரின் தந்தையின் பெயரின் முதல் எழுத்து மூலம்-சையது சுலைமான் கலீபா சாஹிப் என்பதன் மூலம் அவரின் தந்தையவர்களும் ஆன்மீக வழிவாறில் ஆழ்ந்திருந்தவர் என்பதை அறியலாம். அதோடு, ‘மஸ்தான்’ என்பதும் ‘கலந்தர்’ என்பதும் சூபிஸக் கொள்கையில் ஊறிப்போனவர்களுடன் தொடர்புடையவை என்பதையும் தெரியலாம். தனது பெயரில் உள்ள சொற்களுக்கு மிகவும் பொருத்தமான வாழ்வு முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்த ஹஜ்ரத் அவர்கள் நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்.

காயல்பட்டணம் மஹ்ழரதுல் காதிரியா அரபிக் கல்லூரி முதல்வராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி, பன்னூற்றுக் கணக்கான ‘மஹ்ழரி’களை உருவாக்கி, நாட்டிலும் அயல்நாடுகளிலும் இஸ்லாமிய சன்மார்க்கப் பிரச்சார பீரங்கிகளாக உலாவரச் செய்துள்ளார்.அண்மையில் அவரது மகனார் இல்லம் (சென்னை வேளச்சேரியில் உள்ளது) சென்று அவரின் உடல் நலம் விசாரித்து வந்தோம்.  உடல் மெலிந்திருந்தது; ஆனால், அவரின் உள்ளம் என்றும் சுறுசுறுப்பாகவே இருந்தது என்பதற்கு அப்பொழுதும் மார்க்க விளக்கம் பற்றியே பேசினார்கள். அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் கேரளாவில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் யாவரும் பேட்டா கட்டிய உலமாகளாக மட்டுமல்லாமல், காதிரியா தரீகாவிலும் சங்கைமிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுகு ரஹ்மானி ஹஜ்ரத் ‘ஷேய்கு’ என்னும் அந்தஸ்து உடையவராகப் போற்றப்பட்டுள்ளதை அன்றைக்கு நாங்கள் கண்டோம்.


கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களைத் தமிழ்கூறும் முஸ்லிம் உலகம் எஸ்எஸ்கே ஹஜ்ரத் என்று பெருமையாக அழைத்தது. அவர் உரையாற்றாத ஊர் தமிழகத்தில் எதுவும் இருக்காது எனலாம். மீலாது விழாக்களிலும், திருக்குர் ஆன் மாநாடுகளிலும், ஷரீஅத் சட்ட கூட்டங்களிலும், மதரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் ஹஜ்ரத் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவரின் கொஞ்சும் தமிழில் பொதிகையில் பூத்த சங்கத் தமிழ் மலரின் மணம் வீசும்; மஸ்தான் பாடல், சீறாப்புராணச் செய்யுள் என்று விரவிவரும். குர்ஆன் வசனங்களுக்கு புதியதும் பொருந்தியதும் நவீன விஞ்ஞான உலகம் வியக்குமாறும் விரிவுரை செய்வார்கள்; ஹதீஸ் கலையில், இமாம் கஸ்ஸாலி போன்ற மேதைகளின் வழியில் நின்று விளக்கவுரை தருவதில் வல்லவராகத் திகழ்ந்தார்கள். கடையநல்லூர் சிராஜ் இதழ் ஆசிரியர் அப்துல்ஹை அவர்களின் அத்தியந்த தோழராக இருந்த மௌலானா அவர்கள், அமைதியின் உருவாகவும், அடக்கத்தின் வடிவமாகவும், ஆழமான ஞானக் கடலாகவும் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களோடு உரையாடுவது மூலம், இஸ்லாமிய வரலாற்றையே நினைவுக்குக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும். அந்த நல்லவர், சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது மறைந்துவிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் மற்றும் எல்லாத் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்து இயக்கத்திற்கு தூண்டுகோலாகவும் பெருந்துணையாகவும் இருந்தார்கள். சோதனை மிகுந்த காலங்களில் சோர்வைத் துடைப்பதற்கு துணைநின்ற உலமாகளில் ஹஜ்ரத் அவர்கள் மிக முக்கியமானவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பை ஏற்றார்; பின்னர், மாநில துணைத் தலைவராகப் போற்றப்பட்டார். முஸ்லிம் லீக் மாநாடுகளில் மார்க்க ஒளியில் அரசியல் விளக்கம் தந்த அந்த வரலாற்று நிகழ்வுகள் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. முஸ்லிம் லீக் வரலாற்றில் கடையநல்லூர், அன்சாரிகளைப் போன்றவர்கள் என்று காயிதெ மில்லத் சொன்னார்கள். அதன் ஒட்டுமொத்த உருவமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உழைத்துச் சிறந்தவர். கிளியனூர் மதரஸத்துல் ரஹ்மானியா - நமது டாக்டர் ஹாஜா கே.மஜீது-இன்றைய வக்ஃபு வாரிய உறுப்பினர்-அவர்களின் தந்தை நிறுவியதாகும். இப்பொழுது டாக்டர்தான் அந்த கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இந்த மதரஸாவில் ஓதியவர்-பட்டம் பெற்றவர் ஹஜ்ரத்-அதனால்தான் அவருக்கு ‘ரஹ்மானி’ சேர்ந்திருக்கிறது. இன்றைய மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ஒன்றைச் சொன்னார்கள்: ரஹ்மானியா மதரஸாவில் கலந்தர் மஸ்தான் இறுதி வகுப்பில் இருந்தார்; அப்பொழுது முதல் வகுப்பில் நான் இருந்தேன். வாரந்தோறும் நடக்கும் பேச்சுப் பயிற்சி வகுப்பில் கலந்தர் மஸ்தான் அவர்களின் பேச்சுத்தான் எல்லோராலும் பாராட்டப்பெறும்; உஸ்தாதுகளே மிக உயர்வாக அவரின் சொற்பொழிவை மதிப்பார்கள் என்று சொன்னார். அத்தகைய மெத்தகு மேதை இன்று நம்மிடம் இல்லை.

தமிழக உலமாகளுக்கு கடல் கடந்த நாடுகளில் பேரும் புகழும் நிறைய உள்ளது. அதில் முதல் தரத்தைப் பெற்றிருந்தவர் மௌலானா கலந்தர் மஸ்தான் அவர்கள்.

35 முறை ஹஜ் செய்துள்ளவர்; ஹஜ்ஜின் போதும் இஸ்லாமிய விரிவுரை ஆற்றியவர். அகில இந்திய உலமாகள் சபையின் துணைத் தலைவராக இருந்தார்; கடையநல்லூர் தங்ஙள் கட்சி என்னும் தரீகாவுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இறுதிவரை மஹ்ழரத்துல் காதிரியாவின் முதல்வர் பொறுப்பிலே இருந்து, இன்று எல்லாரையும் பிரிந்து அல்லாஹ்வின் சந்நிதானம் நோக்கிப் பயணம் மேற்கொண்டுவிட்டார்.

"மௌத்துல் ஆலிம் மௌத்துல் ஆலம்-அறிஞரின் மரணம், அகிலத்தின் மரணம்’’ என்பது அரபி பழமொழி. ஆம். மனிதர்களின் மனங்களுக்கு ஞான ஒளியை வழங்கி வருபவர்கள் ஆலிம்கள்-அறிஞர்கள். அவர்களின் மறைவு அதிகரிக்கு மானால், ஞானமற்றவரின் கூட்டம் ஞாலத்தில் அதிகரித்துவிடும்-ஞானமற்றவர் பெருகும்போது ஞாய மற்றவர்கள் பெருகுவர்; அதனால் ஞாலம்-உலகம் ஞான சூன்யத்துக்கு ஆட்பட்டுவிடும் எனில், அழிவும் மரணமும் ஏற்படும் என்பது இயற்கை விதியேயாகும். 

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களுக்கு உயர்ந்த உன்னத இடத்தை அளித்து சுவர்க்கப் பூங்காவில் சுகித்திருக்கச் செய்வானாக.

ஹஜ்ரத் அவர்களின் மறைவால் வாடியுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரின் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் நமது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்போமாக. 

போடிநாயக்கனூர் அருகே ரூ.1350 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்


மதுரை மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே ரூ.1350 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்று இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி (ஐ.என்.ஒ.)விஞ்ஞானி டாக்டர் சத்திய நாராயணா கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி கருத்தரங்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார். விஞ்ஞானி சத்திய நாராயணா கருத்துரையாற்றினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது: நியூட்ரினோ என்பது சூரியனுடைய கதிர்களிலிருந்து வெளிவரும் மிகவும் நுண்ணிய எல்க்ட்ரானைவிட அளவில் சிறிய அணுவாகும். இதனைக் கண்டறிந்து, அளவு முறைகள், பயன்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய, இந்திய நியூட்ரினோ அப்செர்வேட்டரி (I.N.O.) என்ற நிறுவனம் ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி மையத்தை அமைக்கவுள்ளது. இந்த மையம் மதுரை மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மலையைக் குடைந்து அமைக்கப்படவுள்ளது. இது மதுரை பொட்டிப்புரம் கிராமம் வரை அமையும். இத்திட்டத்திற்கு 12-வது திட்டக் குழுவில் ரூ.1350 கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


உலக அளவில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் மிகப் பெரிய திட்டமாக இது உருவாகவுள்ளது. இதில் அனைத்து பொறியியல் துறைகளின் பங்கும் ஏராளமாக உள்ளது. இந்தத் திட்டத்தை இந்திய அணுசக்தி கழகம்(D.A.E.)மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்(D.S.T.)இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இதுவரை 26 ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், 100 விஞ்ஞானிகளும், மும்பை டாடா அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை நிறுவுவதற்கு பணி செய்து வருகிறார்கள்.

இந்தச் திட்டத்தை நிறுவுவதற்கு, இணைந்து பணியாற்றக்கூடிய வசதி வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இங்குள்ள ஆராய்ச்சிக் கூடங்கள், கணினி வல்லுநர்கள், இயந்திரவியல் துறையினர் மூலம் புதிய இயந்திரங்களையும், கணினி மென்பொருள்களையும் ஏற்படுத்தித் தர முடியும். எனவே இத் திட்டத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்கு தரப்படும் என்றார் அவர்.


மேலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் எவ்வாறு சூரியனிடமிருந்து, நியூட்ரான் சேகரிக்கப்பட்டு, மலைக் குகைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டு, அதனை ஆராய்ச்சியில் எவ்வாறு ஈடுபடுத்துகிறார்கள் என்பது குறித்த பட விளக்கம் செய்முறை விளக்கத்துடன் காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை வேந்தர் பி.கன்னியப்பன் பேசுகையில் கூறியதாவது: நியூட்ரினோ ஆராச்சிக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் பி.டெக்., எம்.டெக்., அளவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும். மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் ஆராய்ச்சிகளைத் தொடங்க ஐ.என்.ஓ. வழிவகுக்கும் என்றார்.


இக்னோ: Sustainable Management ஆன்லைன் படிப்பு


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) ஆன்லைன் வழியாக Sustainable Management of Biodiversity படிப்புக்கு தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை, ஆராய்ச்சி, பொறியியல், மருத்துவ படிப்பு ஆகிய படிப்பை எடுத்து படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பு குறைந்தபட்சம் 1 மாத காலமாகும். அதிகபட்சம் 6 மாத காலமாகும். விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படிப்பில் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட உள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு இக்னோ பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.

திறந்தவெளி பல்கலைகழகத்தில் +2 படிக்காமல் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை


பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்.

அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர். பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.

இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:

* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...

* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...

* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...

* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.