Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 19 நவம்பர், 2015

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகர் ஷெனாய் நகர் பகுதிக்குட்பட்ட கெஜலட்சுமி காலனி, கதிரவன் காலனி உள்ளிட்ட பகுதி  மக்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 3000 நபர்களுக்கு  உணவை  வழங்கினார். அவருடன் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, எஸ்.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் கே.எம். நிஜாமுதீன், பேராசிரியர் கே.டி. கிஸர் முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

 அங்கு, பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  ‘’தமிழ்நாட்டில் பெருமளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக வட தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் இழப்பும்,வெள்ள சேதமும், அழிவும் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பல்வேறு சமூக மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிர்வாகிகள் எல்லா இடங்களிலும் பள்ளிவாசல் ஜமாஅத்துகளோடு இணைந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு வழங்கி வருகிறோம்.

நேற்றைய தினம் தென்சென்னை பகுதியான சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர் பகுதிகளில் உணவுகளை வழங்கினோம். இன்று மத்திய சென்னையில் வழங்கி வருகிறோம்.

நாங்கள் உணவு வழங்கும் போது பொது மக்கள் சொல்வது என்னவென்றால் ஆட்சியாளர்களை விட திமுகவினர் உதவிகளை அதிகளவில் செய்து வருகிறார்கள் என்றும் எங்களுக்கு உணவு கிடைக்கிறது. அதே வேளையில் உடுத்த துணி இல்லை, படுக்க பாய் இல்லை, தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கடி தாங்க முடியவில்லை என்று இப்படி பல குறைகளை சொல்கிறார்கள்.  எனவே உடனடியாக தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். தமிழக முதல்வர் அவர்கள் ஆர்.கே. நகர் பகுதிக்கு சென்று வந்ததாக பத்திரிகையில் பார்த்தேன். அவர் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றிருக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் பாதிப்புகளை அவர் முழுமையாக கண்டறிந் திருக்க முடியும்.

வெள்ள சேதத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார். இது போதாது இன்னும் அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும்.  இவ்வளவு பெரிய சேதம் அழிவு ஏற்பட்ட பிறகும் மத்திய அரசுக்கு நிவாரணம் குறித்து கடிதம் எழுதவில்லை.நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை முதல்வர் பிரதமருக்கு எழுதுவார். ஆனால் வெள்ள சேதங்கள் குறித்த ஒரு கடிதம் கூட எழுதவில்லை.

பாதிப்பு இருக்கின்ற நேரத்தில் கடிதம் எழுதினால் மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய பேரிடர் மேலாண்மைக்குழு, ஆய்வுக்குழு ஆகியவைகள் நேரில் வந்து ஆய்வு செய்யும் பொழுதுதான் முழுமையான நிவாரணங்கள் கிடைக்கும். காலம் கடந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது ,தொலைபேசியில் பேசுவது முழு நிவாரணம் கிடைக்காது.

மத்திய அரசும் வழக்கம்போல் ‘யானை பசிக்கு சோலப்பொரி’ என்றில்லாமல் உடனடியாக மத்தியக்குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகளவில் நிவாரண உதவிக்கான தொகையை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது இடை விடாமல் மூன்று, நான்கு நாட்கள்தான் மழை பெய்துள்ளது. 10, 15 நாட்கள் கூட இடை விடாமல் மழை பெய்திருக்கிறது. ஆனால் அப்போது எல்லாம் இப்படிப்பட்ட வெள்ள சேதமும், அழிவும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காத துதான் காரணம்.

ஏரிக் குளங்களை சரிவர தூர் வாரவில்லை-கரைகளை மேம்படுத்தவில்லை-கால்வாய்களையும் தூர் வாரும் பணிகளை செய்யவில்லை. வீராணம் ஏரி தூர் வாரும் பணியும் நடைபெறவில்லை. அதனால்தான் ஏரி உடைந்து பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

165 இடங்களில் ஏரிகள் உடைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் ஒன்று இரண்டு ஏரிகள் உடைவது சகஜம்தான். ஆனால் 165 ஏரிகள் உடைந்தது என்றால் ஆளுங்கட்சியின் மெத்தன போக்கே ஆகும்.

ஆளுங்கட்சியை காட்டிலும் திமுகவினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக மு.க.ஸ்டாலின் பணி பாராட்டு கிறேன்.

தமிழ் இந்து நாளேடு ஒரு கருத்து கணிப்பை எடுத்துள்ளது. இதுபோன்ற மழைக்காலங்களில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் ஆட்சியில் ஆற்றிய பணிகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டதில் 44 சதவீதம் பேர் திமுக ஆட்சியிலே சிறப்பாக செய்தனர் என்று கருத்து தெரிவித் திருக்கிறார்கள்.

வானிலை அறிக்கை வந்ததும் கலைஞர் ஒரு அறிக்கை கொடுத்தார். முன்னெச்சரிக்கை நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். அவருடைய அனுபவத்தால் இதனை முன் கூட்டியே தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அலட்சிய படுத்தியதின் விளைவே இவ்வளவு அழிவிற்கும் காரணமாகும். தேர்தல் இன்னும் 6 மாதங்களில் வர இருப்பதால் நிவாரண உதவிகளை காலம் தாழ்த்தி வழங்கி அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொள்ள தமிழக முதல்வர் முயன்று வருவதாக செய்திகள் வருகின்றன.

இதனை கைவிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கி அவருடைய வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டு கொள்கிறேன்.’’

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி?

கல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு புகழ்பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில், அந்த கல்வி செல்வத்தை அடைய, நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது.

வசதியான வாழ்வுக்கும், நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கும், தரமான உயர்கல்வி என்பது மிகவும் முக்கியம். ஆனால், அதைப் பெறுவதற்கு ஒருவர் அதிகம் செலவு செய்ய வேண்டுமென்பதால், வங்கிக் கடனை நோக்கி பலரும் செல்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, புரபஷனல் படிப்புகள் அனைத்திற்கும் கல்விக்கடன் பெறலாம். ஆனால், பல மாணவர்கள் சரியான வழிமுறை தெரியாமலும், வங்கிகளின் அலட்சியம் மற்றும் புறக்கணிப்பாலும் தங்களின் கல்விக் கடன் வாய்ப்புகளை இழக்கின்றனர். எனவே, அவர்கள் எளிதான முறையில் வங்கியில் கல்விக்கடனைப் பெறும் வழிமுறைகளை அறிந்துகொண்டால், அதன்மூலம் வீண் மன உளைச்சல் மற்றும் அலைச்சல் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

தகுதி
வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, நீங்கள் அதற்கு தகுதியான நபரா என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, வங்கிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி அவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான வங்கிகள், 16 முதல் 26 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குகின்றன. அதேசமயம், வங்கிகளுக்கு இடையில், கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி விதிமுறைகளில் வேறுபாடுகளும் உண்டு.

வங்கிகள் மற்றும் பல்கலைகள் இடையிலான ஒத்துழைப்பு
பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் போன்றவை, அவை தேசிய அல்லது சர்வதேச கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, வங்கிகள், நிதி அமைப்புகள் அல்லது கல்விக் கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு, வட்டி விகிதம் குறைவு மற்றும் திருப்பி செலுத்துவதற்கான அதிக கால அவகாசம் போன்ற சலுகைகள் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. இத்தகைய சலுகைகள், மாணவர் சமூகத்தால் வரவேற்கப்படுபவைகளாக உள்ளன. ஏனெனில், அவர்கள் கடனை திரும்ப செலுத்துவதற்குள், ஒரு நல்ல பணி வாய்ப்பை பெறுவதற்கான அவகாசத்தைப் பெறுகின்றனர்.

உங்களின் தற்போதைய நிதிநிலை
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, உங்களின் தற்போதைய சொந்த நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட்டுக் கொள்வது முக்கியம். கல்வி உதவித்தொகையைப் பெறுவதன் மூலம், உங்களின் செலவின சுமையைக் குறைக்கலாம். நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி நிறுவனம் மற்றும் உங்களின் விருப்ப படிப்பு ஆகியவற்றை தேர்வு செய்தவுடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உங்களுக்கான கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்து விசாரிக்கலாம்.

கல்விக் கடனை திரும்ப செலுத்துதல்
நீங்கள் தேர்வுசெய்யும் படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிறகு, உங்களுக்கான பணி வாய்ப்புகள் எப்படி மற்றும் அதில் கிடைக்கும் ஆரம்பநிலை சம்பளம் ஆகியவை பற்றி ஆராய வேண்டும். கல்விக் கடன் வழங்கும் பல வங்கிகள், கடனை திருப்பி செலுத்த 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கின்றன.

அதேசமயம், கல்விக் கடனை எந்தளவிற்கு விரைவாக திருப்பி செலுத்துகிறோமோ, அந்தளவிற்கு ஒரு மாணவரின் நிதி ஆதாரம் சேமிக்கப்படுகிறது. ஏனெனில், அவர் கட்டும் தேவையற்ற வட்டியின் அளவு குறைகிறது. நீண்டகாலம் ஒரு கடனை திருப்பி செலுத்துகையில், நாம் அதிகளவு வட்டி கட்டியிருப்போம் என்பதையும் நினைவில் கொள்க.

மேலும், நீங்கள் படிப்பு முடிந்து ஆரம்ப கட்டத்தில் பெறுகின்ற பணி வாய்ப்பில் பெறுகின்ற சம்பளம் மற்றும் அடுத்தடுத்த காலகட்டங்களில் உங்களின் சம்பளம் எந்தளவு அதிகரிக்கும் என்பதை விசாரித்து தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான், நீங்கள் கல்விக்கடனை எப்படி திருப்பி செலுத்தலாம் என்பதை திட்டமிட முடியும்.

கடன் தரும் நிறுவனங்கள்
தனக்கான கல்விக் கடனை பெறும் முயற்சியில் ஒரு மாணவர் ஈடுபடுகையில், அவர் பலவிதமான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றி கேள்விப்படுவார். அந்த பலவிதமான நிறுவனங்களில், தனக்கு ஒத்துவரக்கூடியது எது என்பதை நன்கு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

ஏனெனில், இந்த முயற்சியில் மாணவர்கள் சில மோசடி நிறுவனங்களையும் சந்திக்க நேரலாம். குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பல போலியான சலுகைகளை வழங்குவதாக கூறி, அவை மாணவர்களை ஏமாற்ற முயலலாம். எனவே, ஒரு மாணவருக்கான கல்விக்கடன் பெறும் தகுதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுவான நடைமுறையில் வங்கிகள் என்ன மாதிரியான சட்ட திட்டங்களைக் கொண்டுள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

போதுமானதாக இருத்தல்
நீங்கள் வாங்கும் கல்விக்கடன் உங்களின் அவசியமான தேவைகளை நிறைவுசெய்வதாக இருக்க வேண்டும். புத்தகங்கள், பயணச் செலவுகள், விடுதி கட்டணம், உணவு மற்றும் தனிப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட பல அத்தியாவசிய அம்சங்களுக்கான செலவினங்கள், உங்களின் கல்விக்கடன் தொகைக்குள் அடங்க வேண்டும். அதேசமயம், உங்களுக்கு தேவைப்படும் தொகையைவிட அதிகமாக, கல்விக்கடனைப் பெற வேண்டாம். ஏனெனில், திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

பொறுப்பாளர்
ஒரு வங்கி அல்லது கல்விக்கடன் தரும் ஒரு நிறுவனம், கல்விக்கடன் கோரும் மாணவருடன் சேர்த்து, அவரின் தாய் அல்லது தந்தை அல்லது உடன் பிறந்தோர் ஆகிய யாரேனும் ஒருவரை co-applicant -ஆக இருக்க வலியுறுத்துகிறது. ஏனெனில், பெற்றோர் அல்லது உடன் பிறந்தோரின் தற்போதைய வருமானம் வங்கிகளால் கணக்கில் எடுக்கப்படுகிறது.

ஏனெனில், வங்கிக் கடன் பெற்ற மாணவரால், சரியான காலத்தில் பணி வாய்ப்பைப் பெற்று, கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்படும்போது, co-applicant அதற்கான பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்படும்.

பிணையம்
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கல்விக்கடன் பெற விரும்புவோர், அதற்கேற்ப செக்யூரிட்டி(security) வைத்திருப்பது அவசியம். அதுவொரு சொத்தாகவோ, பங்குகளாகவோ அல்லது முதலீடாகவோ இருக்கலாம். இதன்மூலம், சிறப்பான வட்டி விகிதத்தில் கல்விக்கடன் பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். கல்விக் கடன் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்களை, விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக, அடையாளச் சான்று, வயது மற்றும் முகவரி சான்று, co-applicant -ன் உறவுமுறைக்கான அடையாளம், அவர்களின் முகவரிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவையே பெரும்பாலான இடங்களில் கோரப்படுகிறது. மேலும், நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம் மற்றும் கட்டண விபரங்களும் இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்பவராக இருந்தால், visa approval papers மற்றும் GMAT, SAT, GRE ஆகிய தேர்வுகளின் மதிப்பெண்கள் போன்றவையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திருப்பி செலுத்துதல்
கல்விக் கடனை எந்த முறையில் திருப்பி செலுத்தலாம் என்பது குறித்து, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம். மாதாந்திர தவணையாகவா அல்லது சிறியளவிலான வட்டித் தொகையுடனா அல்லது நிறுத்தி வைப்பா என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.

சிறியளவிலான வட்டித்தொகை செலுத்துதல் மாதாமாதம் ஒரு தொகை செலுத்துதல் ஆகிய முறைகள், நீங்கள் பட்டம் பெற்றவுடன் உங்களின் சுமையைக் குறைப்பதாக இருக்கும். ஆனால், நிறுத்தி வைப்பு என்ற நிலைக்கு செல்ல வேண்டாம் என்பதே பொதுவாக அறிவுரை.

திங்கள், 21 ஜூலை, 2014

ஜூலை25 ரமளான் கடைசி வெள்ளி "அல்குத்ஸ்" தினம் பலஸ்தீன முஸ்லிம்களை பாதுகாக்க புனித பைத்துல் முகத்தஸை மீட்க அல்லாஹ்விடம் மன்றாடுவோம்! --- பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்

உலக முஸ்லிம்களின் முதல் கிப்லா "பைத்துல் முகத்தஸ்"- மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்று. இறுதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விண்வெளி பயணம் தொடங்கிய இடம் - பலஸ்தீன் நபிமார்கள் நடமாடிய பூமி.

எனவேதான் பலஸ்தீன், பைத்துல் முகத்தஸ், ஜெருசலம் - உலக முஸ்லிம் களின் பிரச்சனை! இதை உணர்த்தவும், இஸ்ரேலிய யூத நாசகார சக்தி களிடமிருந்து மீட்டெடுக்கவும் ரமளான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை
"அல் குத்ஸ்" தினமாக உலக முஸ்லிம் களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு புனித ரமளான் மாதத்தை யுத்த காலமாக்கி அப்பாவி பலஸ்தீனர்களை வேட்டையாடி வருகிறது இஸ்ரேல். காஸாவில் கடந்த இருவாரங்களாக வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலில் 337 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், உயிரிழப்பு அதிகம். தரைமட்டமாக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளை அப்புறப்படுத் தினால்தான் சரியான எண்ணிக்கை தெரிய வரும். ஆனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில்!

"இஸ்ரேலின் மிருகவெறித் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள்" என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களில் அடுத்த தலைமுறை வளரக் கூடாது என்றே யூத சக்திகள் திட்டமிட்டு இதனை செய்கின்றன.

முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமை இல்லை - ஐரோப்பிய நாடு கள் மவுனம் சாதிக்க, இஸ்ரேல் தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதனால் ஐ.நா. சபை செயலிழந்து கிடக்கி றது.பலஸ்தீனத்தை இந்தியா உறுதியாக ஆதரித்த நிலை மாறி - இஸ்ரேல் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கூட இன்றைய மத்திய அரசு சம்மதிக்க மறுக் கிறது.இதுதான் அரசியல் மாற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டி ருக்கும் அலங்கோலம்!

எனவே, இப்போது ஒரே நம்பிக்கை எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடுவதுதான். பலஸ்தீனர்களின் உயிர் காக்க புனித பைத்துல் முகத்தஸை யூதர்களிடமிருந்து மீட்க ரமளான் கடைசி வெள்ளியான ஜூலை 25 ,ஜும்ஆ தொழுகையின்போது அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்து அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுவோம்.

துஆகள் தோற்பதில்லை அல்லவா!

பலஸ்தீனத்தை மையப்படுத்தி அன்றைய தின குத்பா உரை நிகழ்த்த சங்கைக்குரிய உலமா பெருமக்களை அன்புடன் வேண்டு கிறோம் என்று  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது அறிக்கையில் கூறியுள்ளார் .

சனி, 19 ஜூலை, 2014

இஸ்ரேல் தீவிரவாதிகள் தாக்குதல்: காஸாவில் உயிரிழப்பு 300-ஐ தாண்டியது

காஸா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இதனால், காஸாவில் 12ஆவது நாளாக இஸ்ரேலின் தீவிரவாதிகள் நடத்தி வரும் கடும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.

இஸ்ரேல் தீவிரவாதிகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த 8ஆம் தேதி முதல் கடும் போர் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலின் தீவிரவாதிகள்  விமானப்படை, கடற்படை மற்றும் பீரங்கிப்படை என முப்படைகளும் குழந்தைகள் ,பெண்கள் ,வயதானோர் என்று பாராமல்  காஸா மீது இரவு பகலாக குண்டுகளை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதற்கு பதிலடியாக,இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரை குறிவைத்து காஸா பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் போராளிகள்  தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 காஸாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2,200 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 9 மே, 2014

கடையநல்லூர் அல் - ஷபா ஹமீது +2 தேர்வில் 1168 மதிப்பெண் பெற்று சாதனை

கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி மாணவன் அல் - ஷபா ஹமீது +2 தேர்வில் 1168 சாதனை படைத்துள்ளார் .

 கடையநல்லூரில் சாதனை படைத்த  மாணவ, மாணவிகள்.....
முதலிடம் அல் ஷபா ஹமீது 1168
இரண்டாம் இடம் வத்ஸலா - 1137
மூன்றாமிடம் முஹம்மது முஸம்மில் - 1135
மூன்றாமிடம் ஆகாஷ் மாரி - 1135

முதலிடம் பெற்ற ஷபா ஹமீதை ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி செய்யது முஹையதீன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அஸ்கர் அலி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது, ஆசிரியர் அஷ்ரப் அலி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவனின் தந்தையுமான  அல் - அமீன் மற்றும் ஆசிரியர்கள்  , சக மாணவர்கள் வாழ்த்தினர்

வியாழன், 8 மே, 2014

பொறியியல் படிப்புகளும் அதற்கான வேலைவாய்ப்புகளும்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் 30-க்கும் மேற்பட்ட பொறியியல் படிப்புகள் உள்ளன. எந்தப் படிப்புகளையும் தேர்வு செய்வதற்கு முன்னதாக அந்தப் படிப்புகள் குறித்த விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.
மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சில என்ஜினீயரிங் படிப்புகள் குறித்த சிறிய அறிமுகம் .......

   

எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிக்கேஷன்ஸ்
என்ஜினீயரிங் படிக்க விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பம், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ். இந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதால் எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன்ஸ் துறைகளில் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தங்களது முத்திரையைப் பதிக்கலாம் என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்து தங்களது வேலைவாய்ப்புத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவே பல மாணவர்கள் விரும்புகிறார்கள். எனவே, எந்தப் பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் இப்படிப்பில் சேருவதில்தான் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பது வெளிப்படை. எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரான் டிவைசஸ், சிப் டிசைன், சாஃப்ட்வேர் புரோகிராமிங், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், கம்ப்யூட்டர் கம்யூனிக்கேஷன், டிரான்ஸ்மிஷன் லைன்ஸ், நெட் ஒர்க்கிங், ஆப்டிக்கல் கம்யூனிக்கேஷன், கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மைக்ரோ புராசசர், மைக்ரோவேவ் என்ஜினீயரிங்...இப்படி பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் படிப்பை முடித்துவிட்டு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் மாணவர்களைவிட, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணிகளில் சேரும் மாணவர்களே அதிகம்.

    மெக்கானிக்கல்
பொறியியல் பாடப்பிரிவுகளில் முக்கியமான துறை இது. அண்மைக்காலமாக இந்தப் படிப்பில் சேர பல மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர  சாதனங்கள், பொருள் உற்பத்தி முறைகள், பொறியியல் வடிவமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது இப்பாடப்பிரிவு. படிப்புக் காலம் மற்ற பொறியியல் படிப்புகளைப் போல 4 ஆண்டுகள்தான். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சாண்ட்விச் படிப்புக்கு மட்டும் ஓராண்டு கூடுதலாக (5 ஆண்டுகள்) படிக்க வேண்டும்.
இந்த ஓராண்டில் மாணவர்கள் தொழிற்சாலைகளில் நேர்முகப் பயிற்சி பெறுவார்கள். இதனால், சாண்ட்விச் படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சாத்தியங்கள் அதிகம். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அரசுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்

இது கம்ப்யூட்டர் யுகம். இந்த மகத்தான கண்டுபிடிப்பு மனித வாழ்வின் சகல அம்சங்களிலும் ஊடுருவி தனது முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்புக்கு இவ்வளவு மவுசு இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. படித்து முடித்த திறமையாளர்களுக்கு உடனடி வேலை, கை நிறைய ஊதியம் என்றால் யாருக்குத்தான் இனிக்காது. எனவேதான், இத்துறையை நோக்கி புற்றீசல் போல மாணவர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரமாண்டமான வளர்ச்சி இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர், புரோகிராமிங் மொழிகள், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கம்ப்யூட்டர் வரைவியல், கம்ப்யூட்டர் பொறியியல், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற கம்ப்யூட்டர் துறைக்குத் தேவையான முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அதாவது கம்ப்யூட்டர் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள் ஆகிய துறைகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை மந்தநிலை போன்ற தாற்காலிகப் பிரச்சினைகள் வந்து போனாலும்கூட, இந்தப் படிப்பைப் படித்த திறமையான மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி(IT)
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்கிற்கும் ஐ.டி. என்று அழைக்கப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் துறையின் உடன் பிறப்பு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான தொழில்நுட்பங்களும் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தத் தொழில்நுட்பங்களைக் கையாளுவது குறித்தும் உள்ள படிப்புதான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் முக்கிய விருப்பப் படிப்புகளில் இதுவும் ஒன்று. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்த திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்குப் பஞ்சமில்லை!

    எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் 
எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின் ஆற்றல் பகிர்வு உள்பட எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் தொடர்பான பாடப்பிரிவுகளைக் கொண்டது இப்படிப்பு. எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு  மின் துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பைப் படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

    சிவில் என்ஜினீயரிங்
பொறியியல் துறையின் முன்னோடிப் படிப்பு சிவில் என்ஜினீயரிங். கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில் சிவில் என்ஜினீயர்களின் பங்கு முக்கியமானது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இருப்பதால், சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கான தேவை என்பது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே துறை என்று பெரும்பாலும் அரசுப் பணிகளையே சிவில் என்ஜினீயர்கள் நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இப்போது திறமையான சிவில் என்ஜினீயர்களுக்கு தனியார் கட்டுமானத் தொழில் நிறுவனங்களிலும் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்து வருகிறது.

    மெகட்ரானிக்ஸ்
காலத்திற்கேற்ற வகையில் உருவாகி வரும் புதிய பொறியியல் படிப்புகளில் ஒன்று மெகட்ரானிக்ஸ். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் துறையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து,  மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளின் இணைவுதான் மெகட்ரானிக்ஸ். உற்பத்தித் தொழில்நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. 

    ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்
ஒரு காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் ஒரு பகுதியாக இருந்த ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் தற்போது தனித் துறையாக வளர்ந்து விட்டது. வாகன அமைப்பு உருவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. நேர்முகப் பயிற்சிக்கும் இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோமொபைல்  உற்பத்தி நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் ஆய்வு நிறுவனங்களிலும்  வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்திய ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால், இத்துறையில் படித்த பொறியாளர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

    ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்
விமானங்களை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் அதனைப் பராமரிப்பதிலும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்த பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட் என இப்பாடப்பிரிவின் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத்துறை, பாதுகாப்புத்துறை போன்ற பல்வேறு துறைகளில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    பயோ டெக்னாலஜி
இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. விவசாயம், மருந்துப் பொருள்கள், பதனீட்டு உணவுகள், ஜவுளித்துறை...இப்படி இதன் பயன்பாடு விரிந்து வருகிறது. எனவே, இதுகுறித்த படிப்புகள் உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பயோ டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை, அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு  நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சமீபகாலமாக விப்ரோ, டி.சி.எஸ். இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட பி.டெக். பயோ டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

    இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்
இது தொழில் யுகம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக தற்காலத் தொழில்துறையினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்வதற்காக இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் போன்ற பிரத்யேகப் பட்டப்படிப்புகள் தேவைப்படுகின்றன. தொழிற் சாலைகளில் உள்ள இயந்திரங்களையும் பணிபுரியும் மனிதர்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று கற்றுத்தரும் படிப்பு இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையைப் போன்றதே இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் துறை என்றாலும், தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்தி முறைகள், அதற்குப் பயன்படும் சாதனங்கள், அவற்றை ஆராய்ந்து தெரிவு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் போன்றவை இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்கில் கற்றுத் தரப்படுகின்றன. அரசுத் துறை, தனியார் துறை தொழிற்சாலைகளிலும் கன்ஸல்டன்சி நிறுவனங்களிலும் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன்
எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்புகளுடன் மின்னணு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பற்றிய படிப்புதான் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன். எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான சாதனங்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதையும்,  அவற்றின் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இப்படிப்பு மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். தொழில் நிறுவனங்கள், மின் நிலையங்கள், உரம் மற்றும் இரும்பு, ரசாயன ஆலைகளில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    கெமிக்கல் என்ஜினீயரிங்
கெமிக்கல் என்ஜினீயரிங் தவிர்க்க முடியாத முக்கியத் துறை. உரம், பெட்ரோலியப் பொருட்கள், சிமெண்ட், மருந்துகள், பெயிண்டுகள், செயற்கை நூலிழைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவையான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில்நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்டவை இப்படிப்பின் முக்கிய அம்சங்கள். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் இருக்கும். நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகத்தில் (செக்ரி) கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பைப் படிக்கலாம். பெட்ரோலிய, எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பார்மாசூட்டிக்கல்ஸ், உரத் தொழிற்சாலைகள், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள், பெயிண்ட் மற்றும் காகித உற்பத்தி நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிறுவனங்கள், ரசாயன ஆலைகள் போன்றவற்றில் கெமிக்கல் என்ஜினீயரிங் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அத்துடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்புத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

    மெரைன் என்ஜினீயரிங்
பயணிகளுக்கான கப்பல்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது இப்படிப்பு. கப்பலில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுதுபார்க்கவும் கற்றுத் தரப்படும். இப்பாடப்பிரிவு மாணவர்களுக்கு கப்பலில் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, போதிய  உடல் தகுதியும், உரிய பார்வைத் திறனும் இருக்க வேண்டும்.

    மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங்
பல்வே உலோகத்தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், செம்மைப் படுத்துதல், உலோகங்களைக் கலந்து உலோகக் கலவைகளை உருவாக்குதல், வடித்தெடுத்தல் உள்பட உலோகவியல் பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படும். அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றில் இப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

    என்விரான்மெண்டல் என்ஜீனீயரிங்
உலகமெங்கும் சுற்றுச்சூழல் குறித்த விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று வரும் காலம் இது. எனவே, என்விரான்மெண்டல் என்ஜினீயரிங் எனப்படும் சுற்றுச்சூழல் பொறியியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து, இயற்கை வளத்தைப் பேணுவதற்கான வழிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தரும் படிப்பு இது. காற்று மாசுபடுதலைத் தடுத்தல், தொழிற்சாலை சுகாதாரம், கதிர்வீச்சுப் பாதுகாப்பு, நச்சுக் கழிவு மேலாண்மை, நச்சுப் பொருட்கள் கட்டுப்பாடு, கழிவு நீர் மேலாண்மை, திடக் கழிவுப் பொருள் அகற்றம், பொது சுகாதாரம், நில மற்றும் நீர் மேலாண்மை குறித்து இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளிலும் அரசு சாரா அமைப்புகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளராகலாம்.

    அக்ரிகல்ச்சர் அண்ட் இரிகேஷன் என்ஜினீயரிங்
விவசாய உற்பத்தி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப முறையில் தீர்வு காண உதவுவது இந்தப் படிப்பு. விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க பொறியியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் படிப்பு கற்றுத் தருகிறது. களப்பணி செய்யத் தயாராக இருப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம். வேளாண்மைத் துறையிலும் வேளாண் தொழில்நுட்பத் துறையிலும் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு இது. அரசுத் துறை நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. தோட்டக் கலை பண்ணைகள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், உரம் மற்றும் நீர்ப்பாசனக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் போன்ற இடங்களிலும் வேலை கிடைக்கும்.

    பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்
பொறியியலும் மருத்துவமும் சேர்ந்த படிப்பு இது. மருத்துவக் கருவிகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் கருவிகளின் இயக்கத்திற்குத் தகுந்தபடி மென் பொருள் உருவாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களின் பங்கு முக்கியமானது. செயற்கை முறையில் இயங்கும் வகையில் உடல் பாகங்களை உருவாக்குவதிலும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களின் பங்கு இருக்கும். கிளினிக்கல் என்ஜினீயரிங், திசுக்கள் மற்றும் மரபு வழி பொறியியல், மெடிக்கல் இமேஜிங், மறுவாழ்வு பொறியியல், உடல் கூறு முறைகள், பயோ மெக்கானிக்ஸ், பயோ மெட்டீரியல்ஸ் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. மருத்துவ மனைகளில் கருவிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தவும் அதை, தொடர்ந்து பராமரிக்கவும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

    பிரிண்டிங் டெக்னாலஜி
பல்வேறு வகையான அச்சிடும் முறைகள், நவீன அச்சுத்துறையில் கம்ப்யூட்டரின் பங்கு, மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் பிரிண்டிங் டெக்னாலஜி பட்டப் படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பேக்கேஜ் பிரிண்டிங் பிரிவுகள், அச்சக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், இ-பப்ளிஷிங் நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    லெதர் டெக்னாலஜி
தோல் பதனிடுதல், காலணிகள் மற்றும் தோலாடைகள் உள்ளிட்ட தோல் பொருள்களை உற்பத்தி செய்தல், அதற்கு பயன்படும் சாதனங்களை இயக்குதல் உள்ளிட்ட தோல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தோல் பதனீட்டுக் கூடங்கள், தோல் பதனீட்டுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் ஆலைகள், தோல் ஆய்வு நிலையங்கள், தோல் தொழில் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தோல் உற்பத்தித் துறையில் முக்கிய நாடாக விளங்கும் நமது நாட்டின் தோல் பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 60 சதவீதம் ஏற்றுமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, திண்டுக்கல் போன்ற நகரங்கள் தோல் பதனீட்டுத் தொழிலிலும், தோல் உற்பத்தித் தொழிலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழுகின்றன. எனவே, இந்தப் படிப்பைப் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை இல்லை.

    டெக்ஸ்டைல் டெக்னாலஜி
துணி உற்பத்தித் தொழில்நுட்பங்களுடன் அதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், பராமரிப்பு, நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களைக் கற்றுத் தரும் படிப்புதான் டெக்ஸ்டைல் டெக்னாலஜி. நூல் தயாரிப்பு, நூல்களை வெண்மையாக்குதல், மிளிர வைத்தல், ஆடை உருவாக்கம், சாயம் போடுதல், செயற்கை இழைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட ஜவுளித் தொழில்நுட்பங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அத்துடன் டெக்ஸ்டைல் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடு குறித்த தொழில்நுட்பங்களும் கற்றுத் தரப்படுகின்றன. டையிங், ஃபினிஷிங், டெக்னிக்கல் சர்வீசஸ், ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட், குவாலிட்டி கண்ட்ரோல், புராடக்ட் டெவலப்மெண்ட் என டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்களில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ரிலையன்ஸ், பாம்பே டையிங், நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், ஸ்ரீராம் பைபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? --- 2014 ; பட்டு உற்பத்தி துறையில் பொறியியல் படிப்பு

சில்க்(பட்டு) தொழில்நுட்பம் என்பது, பட்டு உற்பத்தியைப் பற்றி படிப்பதாகும் மற்றும் இத்துறை டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறையின் கீழ் வருகிறது.

பட்டுப் புழுக்கள் மற்றும் ரசாயன பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் மூலமாக, பட்டு உற்பத்தி செய்யப்படுவதன் வழிமுறைகள் குறித்து இப்படிப்பு கற்றுத் தருகிறது.

பட்டு என்பது ஒரு இயற்கையான இழையாகும். உலகத்தின் பழைய இயற்கை இழைகளுள் பட்டும் ஒன்றாகும். பிற இழைகளைவிட, இதற்கான முக்கியத்துவம் கூடுதலானது. முந்தைய காலங்களில், பட்டு உற்பத்தி செய்ய, பட்டுப் புழுக்கள் மட்டுமே, ஒரே ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன.

ஆனால், பிற்காலங்களில், பல்வேறான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிக் காரணமாக, பட்டுத் தயாரிப்பில் புதிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக, செயற்கை பட்டு இழைகள் உற்பத்தியும் தொடங்கியது.

பட்டு இழைகளுக்கு அதிகரித்திருக்கும் தேவை காரணமாக, இந்திய அரசு, சில்க் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ற படிப்பை தொடங்கியுள்ளது. பல கல்லூரிகளில் இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பின் நோக்கம், எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் பட்டு சந்தையை திறமையாக நிர்வகிக்கும் வகையில் நிபுணர்களை உருவாக்குவதேயாகும்.

தகுதிதங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பை, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வகையில் படித்து நிறைவுசெய்துள்ள மாணவர்கள், இப்படிப்பில் சேர்வதற்கு தகுதியுடையவர்கள்.

பட்டு தொழில்நுட்பத்தின் பாடங்கள்

Fiber Science
Yarn manufacture, yarn structure and properties
Fabric manufacture and fabric structure
Textile testing Dyeing

வாய்ப்புகள்
பட்டு தொழில்நுட்பத்தில் ஒருவர் தனது பி.டெக்., படிப்பை நிறைவுசெய்த பின்னர், பணிக்கு செல்லலாம் அல்லது அதே துறையில் எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்புகளை மேற்கொள்ளலாம்.

இத்துறையில், பி.டெக்., முடித்த ஒரு இளநிலைப் பட்டதாரிக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. அவை,
* கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர்
* தொழில்நுட்ப விற்பனை பிரதிநிதி
* மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியர்
* ஆபரேஷன்ஸ் பயிற்சி பெறுபவர்
* தொழில்நுட்ப நிபுணர்
* செயல்பாட்டு பொறியாளர்
* ஆராய்ச்சியாளர்

இத்துறையில் பணி வாய்ப்புகளை வழங்கும் சில முக்கிய நிறுவனங்கள்
மைசூர் சில்க் பேக்டரி
சில்க் மார்க்
கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ்
பாம்பே டையிங்
அரவிந்த் மில்ஸ் லிமிடெட்
ஜே.சி.டி. லிமிடெட்
லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ்
லக்ஷ்மி மில்.