Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 13 நவம்பர், 2012

போலி சாமியாரை செருப்பால் அடித்த பெண்கள்


ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வசித்து வருபவர் சீனிவாச ராவ், குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டார். ஆறு மாதங்களுக்கு முன், விசாகப்பட்டினத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர், சீனிவாச ராவுக்கு அறிமுகம் ஆனார்.

அப்போது, "நான் சாமியார், எனக்கு மாய மந்திர வித்தைகள் தெரியும்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள பணக் கஷ்டத்தை போக்க, ஒரே வழி, பூமியில் வைக்கப்பட்டுள்ள, புதையலை கண்டுபிடிப்பது தான்' என்று, சீனிவாச ராவிடம் பாஸ்கர் கூறினார்."மந்திரங்கள் ஓதி பூஜை செய்தால், புதையல் உள்ள இடத்தைக் கண்டு பிடித்து விடலாம்' என்றும் தெரிவித்தார்.பாஸ்கர் பேச்சை நம்பிய சீனிவாச ராவ், விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்று, தன் வீட்டில், ஐந்து மாதங்களாக புதையலை தேடி, மாய மந்திர பூஜைகள் செய்தார்.

பூஜைக்காக சீனிவாச ராவ், இதுவரை, 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். ஆனால், புதையல் மட்டும் கிடைக்கவில்லை.இதில், கோபமடைந்த சீனிவாச ராவ் குடும்பத்தினர், இதுகுறித்து, தங்களின் அடுக்குமாடி குடியிருப்பில், வசிக்கும் மற்றவர்களிடம் தெரிவித்தனர். கோபமடைந்த அப்பகுதி பெண்கள், மோசடி செய்த பாஸ்கரை நிற்க வைத்து, செருப்பால் அடித்து உதைத்து, விஜயவாடா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெறிச்சோடி கிடக்கும் சென்னை


தீபாவளி பயணத்திற்காக, ஒரே நேரத்தில் பயணிகள் புறப்பட்டதால், கடந்த இரு நாட்களாக ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் ஏற்பட்ட நெரிசல், சென்னையில் நேற்று குறைந்தது.

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பயணிகளால், பஸ், ரயில்களில், கடந்த இரு நாட்களாக கூட்டம் அலைமோதியது. சிறப்பு ரயில்கள், சிறப்பு பஸ்கள் மூலம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம்னி பஸ்களிலும், ஏராளமான பயணிகள் பயணித்தனர்."கூவி கூவி' அழைப்புநேற்று முன்தினம் இரவு, சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட்ட நீலகிரி மற்றும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில், கூட்டம் குறைவாகவே இருந்தது. எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து, நேற்று காலை இயக்கப்பட்ட, குருவாயூர் கூடல் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மதியம் இயக்கப்பட்ட வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், கூட்டம்
குறைவாக இருந்தது.சென்ட்ரலிலிருந்து,நேற்று காலை இயக்கப்பட்ட, கோவை எக்ஸ்பிரஸ்,கோவை துரந்தோ எக்ஸ்பிரஸ், மதியம் இயக்கப்பட்ட, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதே நிலை நீடித்தது.
கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து, தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும்,நேற்று முன் தினம் இரவு, 11:00 மணிக்கு பிறகு, கூட்டம் குறைவாகவே இருந்தது. நேற்று காலை, 12:00 மணி வரை கூட்டம் இருந்தது. அதன் பிறகு, கண்டக்டர்கள், "கூவி கூவி' பயணிகளை அழைத்து சென்றனர்.

தலைகீழ் மாற்றம்பயணிகள் கூட்டம் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீபாவளிக்காக முக்கிய நகரங்கள் இடையே, 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. பெரும்பாலான பயணிகள், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், பெரும் நெரிசல் ஏற்படவில்லை.
இத்துடன், போதுமான ரயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டதால், பயணிகள் நெருக்கடி, நேற்று முன்தினம் இரவுடன் முடிந்தது. நேற்று பகலில் இயக்கப்பட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே
இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.சென்னை, புறநகர் மின்சார ரயில்களிலும் வழக்கமான நாட்களை விட, நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால், அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணிகள் இருக்கையில் அமர்ந்து, பயணம் செல்லும் நிலை இருந்தது.வழக்கத்தை விட, நேற்று, தலைகீழாக மாறிய நிலைமையால், முக்கிய சாலைகள் கூட வெறிச்சோடி கிடந்தன. வாகனங்கள் குறைந்த அளவிலேயே சென்றன. ஜவுளிக்கடைகளில், வழக்கமான அளவிலேயே மக்கள் வந்து சென்றனர். சந்தைகளிலும் பெரிதாக கூட்டம் இல்லை. தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பட்டாசுக் கடைகளில் மட்டும், ஓரளவு கூட்டம் இருந்தது.சென்னையில் வசிப்போர் பெரும்பாலும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இவர்கள் தேவையான பொருட்களை ஏற்கனவே வாங்கி விட்டு, தீபாவளியை சொந்த ஊரில், உறவுகளுடன் கொண்டாட சென்று விட்டனர்.சென்னை வாசிகளும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், பொருட்களை வாங்கி கொண்டதால், நேற்று நெரிசல் இன்றி சென்னை வெறிச்சோடி காணப்பட்டது.

கின்னஸில் இடம் பிடித்த 100 அடி நீள கார்


உலகிலேயே மிக நீளமான கார் ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த காரின் நீளம் 100 அடி. 26 சக்கரங்களை கொண்ட இந்த காரில், ரெயில்களில் உள்ளது போல் முன்பகுதியில் ஒரு டிரைவர் கேபினும், பின் பகுதியில் ஒரு டிரைவர் கேபினும் அமைந்துள்ளது.

குறுகிய தெருக்களிலும் சுலபமாக திரும்பும் வகையில், காரின் நடுப்பகுதி வளைந்து, மடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் கண்காட்சிகளில் வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த கார் முதலில் தயாரிக்கப்பட்டது.

ஹாலிவுட்டில் உள்ள ஆடம்பர பங்களாவுக்கு இணையாக இந்த காரின் உள்ளே, அனைத்து சொகுசு வசதிகளும் செய்யப்படுள்ளன. நீச்சல் குளம், பார், ஹெலிபேட், செயற்கைக்கோள் ஆண்டெனா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மினி அரண்மனை போல் உள்ளது இந்த ‘மெகா’ கார்.

இந்த சொகுசு காருக்கு சட்டபூர்வமாக சாலைகளில் ஓடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. எனினும், சினிமா படப்பிடிப்பு, திருமண ஊர்வலம் போன்றவற்றிற்கு இந்த காரை வாடகைக்கு எடுக்க, உலக கோடீஸ்வரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகின் மிக நீளமான சொகுசு கார் என்று கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த காரின் ஒரு மணி நேர வாடகை, பல லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நவம்பர் 14 ,உலக நீரழிவு தினம்


உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்...

இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.

நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை, இன்சுலினை நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கபடுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும். 2ம் வகை வயதான பின் வரும் நோய். இதை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
முதலாம் வகை, சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் பீட்டா செல்கள் அழிக்கப்படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும்,

 இன்னும் சிலருக்கு இன்சுலினை வீரியம் உள்ளதாக வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளம் வயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்தவித தடுப்பும் உபயோகப்படாது. நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் இருந்து 10% பேர் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பாங்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருத்தல், அதிக உடல் இயக்கம் இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.

மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறை பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய்க்கான மருந்து
முதலாம் வகை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் வகை நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடையை குறைப்பதோடு சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொழுப்புச் சத்தை குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% பேர் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% பேர் மாத்திரைகளும் 17% பேர் இரண்டும் உபயோகிக்கிறார்கள். நீரிழிவு நோய் முதலாம் நிலையில் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால், அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.

இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல, இவர்களுக்கு முன் இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்கப்படும் போது சர்க்கரை அளவு 100,120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.
அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 4.1 கோடிக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முதல் நிலை பாதிப்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. 2005ம் ஆண்டு மட்டும் 20 வயதுக்கும் மேலானவர்களில் 15 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதய நோய், பக்கவாதம்
நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வரக்கூடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இதய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இதய நோய், பக்கவாதம் வந்தபின் 65% பேர் இறக்கிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்களில் 75% பேருக்கு 130/90க்கு மேல் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருந்து உட்கொள்கிறார்கள்.

 20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோயாளிகள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டுக்கு 24,000 பேர் புதிதாக கண் பார்வை இழப்பதாக சொல்லப்படுகிறது. சிறுநீரக கோளாறு வரவும் நீரிழிவு நோய் முதல் காரணம் ஆகிறது. ஆண்டுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.  2002ம் ஆண்டில் நீரிழிவு நோய் உள்ளவர்களில் 1,50,000க்கும் அதிகமானோர் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்றுப்போதல், உணவு செரிக்கும் சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு கால்கள் நீக்கபட வேண்டிய நிலைகூட வருகிறது. பற்களும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.  பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம்.

''பிளாக் டீ'' குடித்தால்  நோய் கட்டுப்படுமாம்
''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுகூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.

 மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது.
“பிளாக் டீ‘ யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.


திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு சங்க காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 115 விற்பனையாளர் பணியிடங்களும், 10 கட்டுநர் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். விற்பனையாளர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 கட்டுநர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 விண்ணப்பங்களை திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகம் மற்றும் சங்கரன்கோவில், தென்காசி, சிவகிரி, ஆலங்குளம், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, வள்ளியூர் ஆகிய மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

 விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பப் பதிவுக் கட்டணம் ரூ.150. கட்டுநர் பணிக்கு விண்ணப்பப் பதிவுக் கட்டணம் ரூ.100. இக் கட்டணத்தை வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம் மாதம் 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தபால் மூலமாகவோ, நேரடியாகவோ, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண் 2, சர்வக்ஞர் தெரு, பாளையங்கோட்டை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 இதுபோல் தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3589 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன.

 இதற்கு விண்ணப்பிப்போர் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

 விண்ணப்பத்தை திருநெல்வேலி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் அதன் 29 கிளைகளில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

 விண்ணப்பத்துடன் விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250-ஐ வரைவோலையாக இணைத்து அனுப்ப வேண்டும்.
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 தகுதிகள்: வயது- 1.1.2012-ம் தேதியன்று விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் தலைவர், கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள் சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், என்.வி. நடராசன் மாளிகை, 170 பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரிக்கு இம் மாதம் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

மத்திய அரசு நிதி நிறுவனத்தில் மேனேஜர் பணி


மும்பையில் உள்ள Export - Import Bank of India -வில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியாக உள்ள பணியிடங்கள்: Deputy Manager /JM1, Manager / MM II, Chief Manager /MM III

Deputy Manager /JM1பணிக்கு முதுகலை பட்டப்படிப்புடன், இளநிலையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager / MM II, Chief Manager /MM III பணிக்கு வங்கி மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது சிஏ முடித்திருக்க வேண்டும்.  (அ)

2 வருட முழுநேர படிப்புடன் முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பகுதிநேர படிப்பு மற்றும் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களை www.eximbankindia.com என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நவம்பர் 21 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு http://eximbankindia.in/srd1012.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.