Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 13 நவம்பர், 2012

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு சங்க காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 115 விற்பனையாளர் பணியிடங்களும், 10 கட்டுநர் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். விற்பனையாளர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 கட்டுநர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 விண்ணப்பங்களை திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகம் மற்றும் சங்கரன்கோவில், தென்காசி, சிவகிரி, ஆலங்குளம், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, வள்ளியூர் ஆகிய மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

 விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பப் பதிவுக் கட்டணம் ரூ.150. கட்டுநர் பணிக்கு விண்ணப்பப் பதிவுக் கட்டணம் ரூ.100. இக் கட்டணத்தை வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம் மாதம் 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தபால் மூலமாகவோ, நேரடியாகவோ, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண் 2, சர்வக்ஞர் தெரு, பாளையங்கோட்டை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 இதுபோல் தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3589 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன.

 இதற்கு விண்ணப்பிப்போர் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

 விண்ணப்பத்தை திருநெல்வேலி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் அதன் 29 கிளைகளில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

 விண்ணப்பத்துடன் விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250-ஐ வரைவோலையாக இணைத்து அனுப்ப வேண்டும்.
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 தகுதிகள்: வயது- 1.1.2012-ம் தேதியன்று விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் தலைவர், கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள் சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், என்.வி. நடராசன் மாளிகை, 170 பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரிக்கு இம் மாதம் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக