Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 29 ஆகஸ்ட், 2012

இளைய தலைமுறையே! நம் சமுதாயத் தந்தையின் வாழ்க்கையை அறிந்துகொள் !


பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க  போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.
அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.
ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இதுபோல்  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காயித் என்றால் வழிகாட்டி. சாயிக் என்றாலும் அரபியில் வழிகாட்டிதான். ஒட்டகத்தின் முதுகில் ஏறி அதை வழி நடத்துபவனுக்குப் பெயர் சாயிக். ஆனால் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றைத் தன் கையிலே பற்றிக் கொண்டு, தான் முன்னால் நடந்து, பாதையில் உள்ள கரடு முரடுகளில் ஒட்டகத்தின் கால் இடறி விடாமல் அதை வழிநடத்துபவருக்குப் பெயர்தான் காயித். இன்று அரசியலில் சாயிக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. காயிதே  களுக்குத்தான் பஞ்சம் !

ஓட்ஸ் - மருத்துவ குணம்


ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது.

இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது.  இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது.

அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது

ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

சிங்கப்பூரில் படிப்பவர்களுக்கு செலவும், நேரமும் மிச்சம்


பொதுவாக, மேலாண்மை படிப்புகளுக்கு பெயர்பெற்ற சிங்கப்பூர், தற்போது பலதுறைகளில் படிப்புகளை வழங்கி வருகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பாக, சிங்கப்பூரின் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை 70,000. ஆனால் அந்த எண்ணிக்கை 2009ம் ஆண்டின் முடிவில் 1,00,000 என்ற அளவிற்கு அதிகரித்தது.

வரும் 2015ம் ஆண்டின் இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 1,50,000 என்ற அளவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாக்க திட்டங்கள்
மாறிவரும் உலக பொருளாதார சூழலுக்கு ஏற்ப, பல புதிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பார்த்தால், சிங்கப்பூர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலாச்சாரம், அமைப்பு மற்றும் சமூக நடத்தை ஆகியவற்றில் 4 வருட இளநிலை சமூக அறிவியல் படிப்பை வழங்குகிறது. மேலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்(NUS), ஆங்கில மொழியில், ஒற்றை மேஜர் பி.ஏ(ஹானர்ஸ்) 4 வருட படிப்பை வழங்குகிறது.

பி.பி.ஏ(அக்கவுன்டிங்) என்ற 5 வருட படிப்பானது, சிங்கப்பூரில் வழங்கப்படும் புகழ்பெற்ற படிப்புகளில் ஒன்றாகும். NUS, நிதி மற்றும் நியூ மீடியா துறையில் பி.பி.ஏ(ஹானர்ஸ்) இரட்டைப் பட்டப் படிப்பை வழங்குகிறது.

சர்வதேச மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் பல பொறியியல் படிப்புகளை சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இவைத்தவிர, பி.ஏ(எகனாமிக்ஸ்) மற்றும் பி.இ(எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய படிப்புகள், பொறியியல் கல்லூரி மற்றும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தால் கூட்டாக சேர்ந்து வழங்கப்படுகின்றன.


செலவினங்கள்
கடந்த சில வருடங்களாக, சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு பல்கலை வளாகங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதுபோன்ற பல்கலைகளால் வழங்கப்படும் படிப்புகள், அவற்றின் தாய்நாட்டு கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. சராசரியாக, சிங்கப்பூரில் பெறப்படும் வெளிநாட்டுப் பட்டம் 20% குறைவான பொருட் செலவில் கிடைக்கிறது. அதேசமயம், அது படிப்பையும், கல்லூரியையும் பொறுத்தது.

ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்ட ஜேம்ஸ் கூக் பல்கலையை உதாரணமாக எடுத்துக்கொண்டால், சராசரியாக, இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு 40,000 சிங்கப்பூர் டாலர்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 28,000 சிங்கப்பூர் டாலர்களும் செலவாகிறது.

மேலும் காலமும் மிச்சமாகிறது. ஏனெனில், எம்.பி.ஏ படிப்பை எடுத்துக்கொண்டால், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் 1.5 முதல் 2 வருடங்கள் ஆகும். அதேசமயத்தில், சிங்கப்பூரில் இதற்கு 1 வருடம்தான் ஆகும்.

வேலை வாய்ப்புகள்
சிங்கப்பூரை பொறுத்தவரை, முழுநேரமாக, பல்கலைகளிலும், பாலிடெக்னிக்குகளிலும், இதர கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவர்கள்தான் பகுதிநேர வேலைசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வொர்க் பர்மிட் தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 16 மணி நேரங்களே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

படிப்பை முடித்தப்பிறகு ஒரு மாணவர், எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு, மனிதவள அமைச்சகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு, வேலை வாய்ப்பிற்கான inprinciple approval -ஐ நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஒருவர் பெறக்கூடிய சம்பளம் மாதத்திற்கு குறைந்தது 25000 சிங்கப்பூர் டாலர் என்ற அளவில் இருந்தால் மட்டுமே, எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுசு கூடும் மதுரை மல்லி


மதுரை மல்லிக்கு, உள்நாட்டில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் மவுசு அதிகரித்து வருகிறது.மல்லிகை பூ வகைகளில், அதிக வாசனை கொண்டது மதுரை மல்லி. இது, மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில், 1,250 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியில், 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மல்லிக்கான தேவை,ஆண்டுக்கு, 10,500 டன்னாக உள்ளது.ஆனால், இதன் உற்பத்தி,9,500 டன் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில், மதுரை மல்லி அதிக அளவில் விளைகிறது. அப்போது, கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மழை மற்றும் குளிர் காலத்தில், கிலோ, 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புது டில்லி மும்பை ஆகிய நகரங்களில், மதுரை மல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, அயல்நாடுகளிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.விலையில் ஏற்ற, இறக்கம், போதிய கிடங்கு வசதியின்மை, இடைத்தரகர்கள், கூலி ஆட்கள் பற்றாக்குறை, சரக்கு போக்குவரத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகளால், மதுரை மல்லி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு, மதுரை மல்லி விளைச்சல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.