Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 6 மே, 2013

வேலைவாய்ப்பை அள்ளித்தரும் "சமூகப் பணி படிப்புகள்"


சோசியல் வொர்க் என்பது சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் கிராம, நகர வளர்ச்சிக்கு உதவுதல், சமூக இன்னல்களை நீக்குதல் மற்றும் இன்ன பிற நல்ல செயல்களைச் செய்தல் என்பது மட்டுமல்ல கடந்த பல வருட காலத்தில், சோசியல் வொர்க், ஒரு நல்ல தொழில் முறை பணியாக (Professional) வளர்ந்துள்ளது. மேலும் இது ஒரு வழக்கமான சம்பிரதாய பணியும் அல்ல. இந்தப் பணியானது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, மனித உறவுகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.
மேலும், சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்சனைகளைக் களைய முயற்சிப்பதே சமூகப்பணியின் முக்கிய பணியாக இருக்கிறது. இதற்கு கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, பல நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது என இவர்களின் பணி எப்போதும் உயரிய நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.
இப்பணியின் வகைகள்:

Medical & Psychiatric Social Work:
சமூகப்பணி படிப்பில், நோயாளிகளின் தேவை அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மருந்துகள் எடுப்பது தொடர்பாக உதவுதல் போன்ற முற்றிலும் மருத்துவமனை சார்ந்த கிளீனிக்கள் சோசியல் வொர்க்
போதை மருந்து பயன்பாட்டு பிரச்சனைகள், பாலியல் முறைகேட்டு பிரச்சனைகள் தொடர்பாக, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கும் பள்ளி சோசியல் வொர்க் மன உளைச்சலுள்ள குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர் ஆகியோருக்கு உள்ள நடத்தை சிக்கல்களை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியான சைக்யாட்ரிக் சோசியல் வொர்க்

Criminology and Correction Administration Welfare:
சிறைக்கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதன் மூலம் அவர்களைத் திருத்தி, சமூக விரோத நடவடிக்கைகளை குறைப்பது போன்ற பணியான குற்றவியல் மற்றும் திருத்துதல் சோசியல் வொர்க் .

Community Development:
வீட்டு வசதிகள், வேலையின்மை பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் சேவைகள் ஆகியவற்றைக் கவனிப்பது போன்ற பணியான சமூக அமைப்புப் பணி.

 Teaching and Research :
சமூகம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் நிறுவனங்களின் தீவிர செயல்பாட்டிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் Teaching and Research பணி,

HRD(தொழிலாளர் நலன்):
வணிக நிறுவனங்கள் மற்றம் தொழிற்சாலைகளில், தொழிலாளர் நலன்களை உறுதி செய்வது தொடர்பான பணியான தொழில்துறை சோசியல் வொர்க் (HRD) என்று பல பணி வாய்ப்புள்ள படிப்புகளை சமூகப்பணி படிப்பு வழங்குகிறது.

வேலை வாய்ப்புகள்:
கிராமப்புற அவலம் மற்றும் வசதியின்மை, படிப்பறிவின்மை, மருத்துவ வசதிகளில் குறைபாடு மற்றும் மருந்துகளை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற அவலங்களைப் பற்றிய அதிகரித்துவரும் விழிப்புணர்வானது, சோசியல் வொர்க் துறையில் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) வேலை வாய்ப்புக்களை அதிக அளவில் அளிக்கின்றன. மேலும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், சோசியல்வொர்க்கர்களைப் பணியமர்த்துகின்றனர்.
அரசுப்பணி என்று எடுத்துக்கொண்டால், நல அதிகாரி பணிகள், அரசு சாரா அமைப்புகளில் ஏராளமான பணிவாய்ப்புகள் குவிந்துள்ளன. சோசியல் வொர்க் படிப்பில் பட்டம் பெற்ற ஒருவர், முதலில் சோசியல் வொர்க்கராகப் பணியில் சேர்ந்து, பின்னர் பணி உயர்வு பெறலாம். ஒருவர் இத்துறையில் போதிய அனுபவம் பெற்ற பின்னர் சொந்தமாக கவுன்சிலிங் மையம் தொடங்கலாம்.

மேலும், உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லேபர் பீரோ, பல கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பணியாளர் நலத்திட்டங்களுக்கு பல சோசியல் வொர்க்கர்களை பணியமர்த்துகின்றனர்.

சம்பளம்:
 பணிக்குச் சேரும்  நிறுவனத்தைப் பொறுத்து ஆரம்ப சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை இருக்கும். அதே சமயம் சர்வதேச ஏஜென்சிகள் அதிக சம்பளம் தருகின்றன.

படிப்புகள்:
பல வித பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதவிதமான படிப்புகளை வழங்குகின்றன.

சோசியல் வொர்க்-ல் இளங்கலைப் படிப்புகள் (BSW), தகுதி +2 தேர்ச்சி

முதுகலைப் படிப்பு (MSW) – தகுதி ஏதேனும் இளநிலைப் படிப்பில் தேர்ச்சி

எம்.பில் மற்றும் பி.எச்.டி. - தகுதி முதுநிலை சமூகப்பணி படிப்பில் தேர்ச்சி

களப்பணி (Field Work):
இப்படிப்பில் மட்டும் தான் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கட்டாயமாக களப்பணியாற்ற வேண்டும். களப்பணி வேலைக்கான திறமையினை வளர்க்க உதவுவதால் படிப்பினை முடிக்கும் முன்னரே வேலை வாய்ப்பினைப் பெற முடிகிறது.

சோசியல் வொர்க் சார்ந்த படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்,

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கோவை அவினாசிலிங்கம், கற்பகம், அமிர்தா போன்ற பல்கலைக்கழகங்களிலும்,

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி,P.S.G. கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, G.R.D., பிசப் அப்பாசாமி, சி.எம்.எஸ். வணிகவியல் கல்லூரி, ஸ்ரீ நாராயணகுரு, சேரன் கலை கல்லூரி, S.M.S. கல்லூரி, நேரு கல்லூரி, நேரு மஹாவித்யாலயா, ஹிந்துஸ்தான், A.J.K., பிஷப் அம்புரோஸ் கல்லூரி, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, என்.ஜி.எம். கல்லூரி, ஆர்.வி.எஸ்., எஸ்.என்.ஆர்., ஸ்ரீ.ஜி. கல்லூரி, ஈரோடு அம்மன் கலை கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மதுரை சமூகப்பணிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, விருதுநகர் இந்து நாடார் கல்லூரி, கொடைக்கானல் கிறிஸ்டியன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, லேடிடோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பிஷப் ஹீப்பர், காவேரி, தந்தை கேன்ஸ் ரோவர், அடைக்கல மாதா, ஜீமத் ஆண்டவர் காலேஜ், உருமு தனலட்சுமி காலேஜ், இந்திரா காந்தி கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, போன் சாக்கர்ஸ் கல்லூரி பெரியார் மணியம்மை கல்லூரி, கிறிஸ்துராஜ் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகள் போன்ற கல்லூரிகளிலும்,

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மெட்ராஸ் சமூகப் பணிக் கல்லூரி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரி, லயோலா, எத்திராஜ், வைஷ்ணவி, ராமகிருஷ்ண விவேகானந்தா கல்லூரி, பாரத் பல்கலைக்கழக கல்லூரி, மார்க் கிரகோரியஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, முகமது சதக் கல்லூரி போன்ற கல்லூரிகளிலும்,

திருநெல்வேலியில் செயின்ட் சேவியர் கல்லூரி, நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, மலாய்கரை கத்தோலிக் கல்லூரி, திருப்பத்தூர் சேக்ரட் கலை கல்லூரி போன்றவை எம்.எஸ்.டபிள்யூ (Master of Social Work MSW) வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.

கடல்சார் பல்கலையில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர விண்ணப்பிக்கலாம்


இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில், பி.டெக்., லேட்ரல் என்ட்ரி முறையில் பொறியியல் படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ படிப்பில் மரைன், மெக்கானிக்கல், நாவல் ஆர்க்கிடெக்சர் எலக்ட்ரிக்கல் ஆகிய படிப்புகளை எடுத்து படித்தவர்கள் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி முறையில் இரண்டாமாண்டில் சேரலாம்.

விண்ணப்பிப்பவர் பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எடுத்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.imu.ed.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தடய அறிவியல் படிப்பு (Forensic Science )


விஞ்ஞான உதவியுடன் குற்றச் செயல்களை ஆராய்கிறது தடய அறிவியல். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை லேப்களில் ஆராய்ந்து, கோர்ட்டில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். ரத்தம், எச்சில், ரோமம், டயர்கள் மற்றும் ஷூக்களின் அச்சு, கைரேகை, காலடி தடங்களை சேகரிப்பது குறித்து தடய அறிவியலில் கற்றுத்தருகின்றனர். இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வது பற்றியும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களை சேகரித்து காவல்துறைக்கு தடயவியல் வல்லுனர்கள் உதவுகின்றனர். கோர்ட்டில் எழுப்பப்படும் பல்வேறுவகையான சட்டரீதியான கேள்விகளுக்கு தடயவியல் பதில் தருகிறது. இதற்கு மாணவர்கள் தங்களது அறிவியல் அறிவை குற்ற விசாரணைகளில் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். மெடிக்கல், லேப், பீல்ட் சயின்ஸ் என மூன்று வகையில் தடயவியல் பணியை பிரிக்கலாம்.

காவல்துறை, சட்டஅமலாக்க துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. பாரன்சிக் ஆந்த்ரபாலஜி, பாரன்சிக் ஆர்கியாலஜி, பாரன்சிக் செராலஜி போன்ற பிரிவுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதை முக்கிய பாடமாக படிக்கலாம். இதன் மூலம் தாங்கள் தேர்வு செய்த துறையில் வேலை வாய்ப்பை பெறலாம்.

 30ஏ - காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை என்னும் முகவரியிலுள்ள தடயவியல் துறையிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் இத் துறையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம்.மேலும் ,இந்தியாவில் கீழ்கண்ட கல்விநிலையங்களிலும் படிக்கலாம் ,

Amity University - Noida, Uttar Pradesh

Sam Higginbotom Institute of Agriculture - Allahabad, Uttar Pradesh

Osmania University - Hyderabad, Andhra Pradesh

Dr. Hari Singh Gaur University - Sagar, Madhya Pradesh

Kurukshetra University - Kurukshetra, Haryana

Bundelkhand University - Jhansi, Uttar Pradesh

University Of Saugar - Sagar, Madhya Pradesh

Government Institute of Forensic Science, Aurangabad (Maharashtra) 

Institute of Forensic Science, Mumbai (Maharashtra) 

Jain University, Bangalore (Karnataka) 



கூடங்குளம் அணுமின் நிலையம் தடையின்றி செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி


பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடர்ந்த இந்த வழக்கில், இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

கூடங்குளம் அணுவுலை செயல்பட அனுமதி அளித்துத் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை மதிப்பதாகத் தெரிவித்தது. மேலும், எரிசக்தித் தேவைக்காக அணுவுலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

கூடங்குளம் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்பவும், பொது நலன் கருதியும், நாட்டின் வளர்ச்சி கருதியும் கூடங்குளம் திட்டம் அவசியத் தேவை. அணுவுலைகள் நம் நாட்டின் மின்சாரத் தேவைக்கு அவசியம் தேவை. இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணு மின்சாரம் தேவை என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

அணுவுலை தொடர்பான பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரியான கருத்தையே தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அணுவுலை பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதுகாப்பாக செயல்படத் தேவையான அனைத்து அம்சங்களும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதை கவனத்தில் கொள்வதாகவும் கூறியது.

முன்னதாக, 'பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்த முதலாவது அணு உலையை இந்திய-ரஷிய நாடுகளின் அணு சக்தி அமைப்புகள் கூட்டாகச் செயல்படுத்தி வருகின்றன.

முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கிய ஆறாவது மாதத்தில் இரண்டாவது அணு உலை செயல்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், "கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்; பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. அதனால், அணுமின் நிலையம் செயல்பட அனுமதிக்கக்கூடாது' என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கேட்டுக் கொண்டிருந்தது. அதையடுத்து, மத்திய அரசு தனது தரப்பு வாதத்தில், "கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த 17 அம்ச பரிந்துரைகளை இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரிய நிபுணர்கள் குழு வழங்கியுள்ளது. அவற்றை நிறைவேற்ற ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். இயற்கைச் சீற்றம், பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில், கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன' என்று கூறியது.

அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்குத் தேவையான யுரேனியத்தை நிரப்பத் தடையில்லை என்று உத்தரவிட்டது. அதன் பிறகு மூன்று மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை கடந்த டிசம்பர் மாதம் முன்னதாக நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.