Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 7 மே, 2013

நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தாலுகா மக்களுக்கு அரசின் சான்றிதழ், நிதியுதவி இணையதளத்தில் பெறும் வாய்ப்பு


நெல்லை மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை மின்னாளுமைச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ராதாபுரம் வட்டம் முன்னோடி வட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை (8ம் தேதி) ராதாபுரம் வட்டத்தில் மின்னாளுமைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறையின் கீழ் வழங்கப்படும் சான்றுகளான ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, கணவரால் கைவிடப்பட்ட சான்று ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும். மேலும் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித்திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும்.

மேற்படி சான்றுகள், நிதியுதவி பெற மனு செய்திடும் பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் உள்ள பொதுச் சேவை மையங்களான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், டவுன் பஞ்., அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்று ஒவ்வொன்றிர்க்கும் 50 ரூபாய் எனவும், சமூக நலத்துறை மூலம் நிதியுதவி பெற விண்ணப்பம் செய்பவர்களுக்கு 100 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிராம வாரியாக பொதுசேவை மையம் விபரம்
மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் ராதாபுரம், குட்டம், விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திசையன்விளை, கோட்டைக் கருங்குளம், புலிமான்குளம், தெற்கு கருங்குளம், பணகுடி, ஆனைகுளம், காவல் கிணறு, பழவூர் மற்றும் வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வள்ளியூர் திசையன்விளை, பணகுடியில் அமைந்துள்ள டவுன் பஞ்., அலுவலகங்கள், ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே ராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் இந்த புதிய இணைய தள சேவையை பயன்படுத்தி விரைவில் தங்களுக்குரிய சான்றிதழ், நிதியுதவி ஆகியவைகளை இணையதளம் வழியாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகவலை கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் படிப்புகள்


தோல் துறை தொடர்பான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, சோதனை, வடிவமைப்பு, முன்னேற்பாடு, திட்டமிடுதல் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய பணிகளில் ஈடுபட்டு, உலகின் மிகப்பெரிய தோல் ஆராய்ச்சி நிறுவனமாக திகழும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம(CLRI), 1948ம் ஆண்டு சென்னை அடையாரில் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பி.டெக்., எம்.டெக்., மற்றும் எம்.எஸ்., போன்ற படிப்புகளை, மாணவர்களுக்காக நடத்துகிறது.

காலணிகள் தயாரிப்பு, காலணிகள் வடிவமைப்பு குறித்த பல்வேறு விதமான படிப்புகளும் இங்கே வழங்கப்படுகிறது. தோல் தொடர்பான துறைகளில் அதிக ஆர்வமுள்ள மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கலாம்.

இந்நிறுவனம், ஆமதாபாத், கான்பூர், ஜலந்தர், கொல்கத்தா போன்ற இடங்களில் மண்டல மையங்களையும் கொண்டுள்ளது.

விபரங்களுக்கு www.clri.org

கப்பல் படை அளிக்கும் பி.டெக்., கல்வி வாய்ப்பு


இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பாதுகாப்புப் படைகளில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. அதி நவீன வசதிகளுடனும் தொழில் நுட்ப ரீதியிலான அம்சங்களுடனும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட வீரர்களுடனும் இயங்கி வரும் இந்தியக் கப்பல் படை சர்வதேச புகழ் பெற்றது.

இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 10+2 கேடட் (பி.டெக்.,) என்ட்ரி ஸ்கீம் மூலமாக கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமியின் மூலமாக பி.டெக்., படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கப்பல் படையின் பி.டெக்., படிப்புக்கு சேர விரும்புபவர்கள் 17 வயது முதல் 19 1/2 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1994 முதல் 01.01.1997க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பிளஸ் டூ அளவிலான படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் படித்து இந்த 3 பாடங்களின் தோராய மதிப்பெண்கள் குறைந்த பட்சம் 70 சதவிகிதத்துடனும், ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த கல்வித் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். மாலைக் கண் நோய், வண்ணக் குறைபாடு உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

மேற்கண்ட தகுதி உடையவர்கள் உரிய படிவ மாதிரியில் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ப்ளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் எஸ்.எஸ்.பி.,க்கான அழைப்பு அனுப்பப்பட்டு இறுதித் தேர்ச்சி இருக்கும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

முகவரி:
Post Box No. 04,
RK Puram (Main) P.O,
New Delhi - 66.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.06.2013
இணையதள முகவரி : www.nausena-bharti.nic.in