Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 2 செப்டம்பர், 2013

டெல்லி செங்கோட்டையில் சமயச்சார்பற்ற ஜனநாயக சமூகநீதிக் கொடிதான் பறக்கும் --- பேராசிரியர் கே. எம். கே.

இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பாரதீய ஜனதா கட்சி. ஆளும் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்றத்தை நடத்த நினைத்த போதெல்லாம் பா.ஜ.க., அதைத் தடுத்து நிறுத்துவதிலேயே தனது காலம் முழுவதையும் கடத்திவிட்டது.

முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளை விமர்சித்து வந்துள்ள பா.ஜ.க. எப்போதாவது, அந்தக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கை எதையும் முன்வைத்துள்ளதா என்றால், அதை அது எப்போதும் செய்ததில்லை.

நாடாளுமன்றம் நடந்தால் தான், நாட்டுக்குத் தேவைப்பட்ட நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்-சீர்திருத்தம் செய்வதற்குச் சட்டங்களைக் கொண்டுவர முடியும். இதில் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பா.ஜ.க., இன்று வரை இருந்து வந்திருக்கிறது.

இன்றைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்குரிய மதிப்புடன் மிகவும் சரிந்த நிலையை எட்டி இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வாழ்க்கையில் மெத்தனம், குந்தகம், பாதகம் என்று ஏற்பட்டு, பலவித உள்நாட்டுச் சிக்கல்களும், வெளிநாட்டுப் பிரச்சினைகளும் தோன்றிவிடும் என்னும் அச்சம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அச்ச நிலையிலும் வருங்காலம் பற்றிய நம்பகத் தன்மையில் குறைவுள்ள நிலையிலும் நாட்டுப் பொருளாதாரத்தைக் கொண்டுவந்து நிறுத்தியதற்கு மிக முக்கிய காரணம், பா.ஜ.க., வின் எதிர் மறை அரசியல் தான் என்று நன்கு அறிந்திருக்கிறார்கள். இவ்வளவு நெருக்கடியிலும், நாடாளுமன்றத்திற்கான தேர்தலை டாக்டர் மன்மோகன் சிங் அரசு, முன்கூட்டியே நடத்திட முன் வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து பா.ஜ.க., இன்று ஏமாந்து நிற்கிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2013 ல் நிச்சயமாக இல்லை. அடுத்த ஆண்டு 2014 மே திங்களில்தான் தேர்தல் நடக்கும் என்று இப்போது நிச்சயமாகிவிட்டது.

தேர்தலில் எப்படியாவது, வெற்றிக் கனியைப்பறித்திடலாம்-நாடாளுமன்றத்தில் 272 பிளஸ் இடங்களைப்பிடித்திடலாம் -ஆட்சி அமைந்திடலாம்- இந்தியாவை இந்து ராஸ்ட்ரம் ஆக்கிடலாம்- பாரத தேசம் முழுவதிலும் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினருக்கென்று உள்ள தனியார் சட்டங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லா மதத்தவருக்கும் பொதுமான சிவில் சட்டத்தை அமுலாக்கலாம்- பாபரி மஸ்ஜிது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்கப்பட்டாலும் தீர்க்கப்படாவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாபரி மஸ்ஜிது இருந்த இடத்தில் ராமர் கோயிலை எழுப்பி விடலாம், அதன் மூலம் இந்தியாவில் ஏகத்துவக் கொள்கைக்கு இடம் கிடையாது- சிலை வணகத்துக்கும்- பலதெய்வக் கொள்கைக்கு மட்டுமே இந்த தேசம் உள்ளது என்று உலகத்திற்குப் பறை சாற்றலாம்- இப்படிப்பட்ட கற்பனைகளில் மிதந்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியினர் இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் வியூகத்தில் முனைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தின் நெஞ்சத்தாமரையாம் திருச்சியில் செப்டம்பர் 26 தேதியில் நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரம் நடக்கப்போகிறது எனவும், தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவில் பா.ஜ.க., ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதற்குக் கட்டியம் கூறும் வகையில் சமுத்திரம் போல் ஜனங்கள் திரளவேண்டும் என்று கூறி, அதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

பா.ஜ.க., வின் பிரச்சார பீரங்கியாக மோடி அவர்கள் முழுங்கி வருகிறார். அவருக்கு இணையாக, தேசிய காங்கிரஸ் கட்சியில் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை.

தமிழ் நாட்டில் உள்ள பத்திரிகை உலகிலும் ஊடகத் துறையிலும் ஒரு மறைமுக பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த டெல்லி ஆட்சி பா.ஜ.க., கையில் தான் என்னும் கருத்தோட்டத்தை - எழுத்திலும் எண்ணத்திலும் பத்திரிகை உலகம் பிரதிபலிப்பதை அங்கங்கே காணமுடிகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டிலும் பா.ஜ.க., உடன் மக்கள் ஜனநாயக கட்சி இருக்கிறது என்றுஅதன் நிறுவனர் பாரிவேந்தர் கூறி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க., வுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி திமுக,தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் போன்றவை அணி சேரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக காந்தீய மக்கள் கழகத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் கூறி வருகிறார் என வார இதழ்களில் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இல்லை, இல்லை தமிழகத்தில் திமுக தலைமையில் மீண்டும் காங்கிரஸ் வருகிறது. அதற்கு தேமுதிக ஆதரவு தருகிறது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கின்றன. இப்படிப்பட்ட மெகா கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஊடுருவிச் செல்லும் வாக்குகளை வெல்லும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு மாறாக தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் தேமுதிக சேரப்போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அணி அ.இ.அ.தி.மு.க., அணி, திமுக அணி, தேமுதிக அணி, காங்கிரஸ் அணி, பா.ம.க., அணி என்று ஐந்து அணிகள் வலம் வரப்போகின்றன. தமிழக வாக்காளர்கள் திணறப்போகிறார்கள் என்றும் சில அரசியல் நோக்கர்கள் எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி, எதையும் தெளிவாக சொல்ல முடியாமல், மூடு மந்திரம் நிறைந்ததாக நிலைமை சென்று கொண்டிருக்கிறது. வழுக்குப் பாறையில் ஏறுவது போல தேர்தல் கூட்டணி கணிப்புகள் அமைந்திருக்கின்றன.

எதுவெல்லாம் நடக்குமோ, அதுவெல்லாம் நடக்கும், அதே சமயத்தில், இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் ஜனநாயக சமயச் சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளில் ஊறித் திளைத்தவர்கள்தாம் சுதந்திரக் கொடியை ஏற்றுவார்கள் என்பதில் நமக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை. உங்களுக்கு எதிலும் சந்தேகமிருந்தால் அதைத் தூக்கி எறிந்திடுங்கள்.

செங்கோட்டையில் ஜனநாயக சமயச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையின் கொடிதான் உயர்ந்து பறக்கும் என்பதில் உறுதியாக இருங்கள்.