Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 17 ஜூலை, 2012

2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள இந்திய ரயில்வே துறை !


"ரயில்வேயில் 20 ஆண்டுகளில் 6 லட்சம் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டன. தற்போதுள்ள 12.50 லட்சம் பணியிடங்களில் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன,'' என டி.ஆர்.இ.யூ., செயல் தலைவர் இளங்கோவன் குறிப்பிட்டார். மதுரையில் அவர் கூறியதாவது : ஸ்பெஷல் கிராசிங்குகளில் மூன்று ஊழியர்களை நியமிக்கும்படி டி.ஆர்.இ.யூ., வலியுறுத்தியது. மதுரை கோட்டத்தில் 52, தெற்கு ரயில்வேயில் 432 ஸ்பெஷல் கிராசிங்குகள் உள்ளன. எந்நேரமும் ரயில் போக்குவரத்து மிகுந்த இந்த கிராசிங்குகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் பணிபுரிகின்றனர். குறைந்தபட்ச வேலை வழங்க கோரி தேவைப்பட்டால், வேலை நிறுத்தத்தில் டி.ஆர்.இ.யூ., ஈடுபடும். பொது துறையினருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. எனவே ரயில்வே தொழிலாளர்களுக்காக ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும். வேலைப்பளு அதிகம் புதிய ஓய்வூதிய திட்டம் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில், 31 லட்சம் ஊழியர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஓய்வூதிய பணம் ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் ஓய்வூதியம் வழங்குவது கேலிக்கூத்து. 1990ல் ரயில்வேயில் 18.54 லட்சம் பணியிடங்கள் இருந்தன. தற்போது 12.54 லட்சம் பணியிடங்கள் உள்ளன. ஆறு லட்சம் பணியிடங்கள் "சரண்டர்' செய்யப்பட்டன. தற்போதும் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வேலை பளு அதிகமாகியுள்ளது. விபத்து அபாயம் உள்ளது. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

தெலுங்கான பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டும் மம்தா !

மேற்கு வங்கத்தில் கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. 

இந்நிலையில் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றதும், டார்ஜிலிங் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கூர்க்கா பகுதிகளையும் இணைத்து கூர்காலாந்து பிராந்திய நிர்வாக கவுன்சில் அமைக்கலாம் என யோசனை தெரிவித்தார். இந்த யோசனையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி கூர்காலாந்து பிராந்திய கவுன்சில் நிர்வாகத்தின் புதிய நிர்வாகிகள் அடுத்த மாதம் 4ம் தேதி பொறுப்பேற்க உள்ளனர். 

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். மேலும் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி மாநில ஆளுநர் எம்.கே.நாராயணனையும் அவரை கேட்டுக்கொண்டுள்ளார். 

பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, கூர்காலாந்து பிராந்திய கவுன்சில் ஒப்பந்தப்படி புதிய டார்ஜிலிங் ஹில் கவுன்சில் அலுவலகத்தில் இந்த பிராந்திய அலுவலகம் செயல்படும் என்றும் மம்தா கூறினார்.  மேலும் அடுத்த மாதம் பதவியேற்க உள்ள பிராந்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை மம்தா தெரிவித்துள்ளார். 

கூர்காலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.


 மொத்தம் உள்ள 45 இடங்களில் 28 இடங்களில் ஜன்முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூர்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கு மதிப்பளித்து ,மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த நடவடிக்கை போன்று ,ஆந்திர முதல்வர் தெலுங்கான பிரச்சினையை தீர்க்க வழிவகை காண வேண்டும் .இதுவே ,ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ணமாகும் .