Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 13 ஜூலை, 2013

முதல் மலாலா விருதை இந்திய மாணவி ரஷியா சுல்தானாவிற்கு வழங்கியது ஐ.நா.


பெண் குழந்தை கல்விக்காக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள முதல் மலாலா விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ரசியா சுல்தான் 48 பெண் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்தற்காக அவர் இந்த விருதை பெறுகிறார். விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசியா சுல்தானின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஷியா சுல்தான் மீரட்டில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 5 வயதாக இருக்கும் போதே வேலைக்கு சென்றார். இவரை அரசு சாரா நிறுவனம் ஒன்று மீட்டு கல்வி வழங்கி வருகிறது.
தற்போது பள்ளியில் படித்து வரும் இவர், அந்நிறுவனத்துடன் இணைந்து கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.

முன்னதாக தனது 16வது பிறந்த நாளையோட்டி ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் மலாலா யூசப்சாய் உரையாற்றினார். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா இருந்தால் உலகையே மாற்றிவிடலாம் என மலாலா நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான தலிபான்கள் நடத்திய தாக்குதலை சந்தித்த மலாலாவை பெருமைப்படுத்தும் விதமாக ஜூலை 12ந் தேதியை மலாலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. வரும் காலங்களில் மலாலாவின் அனைத்து சமுதாய கல்வி பணிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடன்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி துவக்கம்

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் அணுஉலையில் கட்டுமானப்பணிகள் முழுமை பெற்று கடந்த 2011ல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் அணுசக்திக்கழகம் அனுமதி கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் 2011ல் போராட்டத்தை துவக்கினர்.அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களால் உலையில் மின்உற்பத்தியை துவக்க மேற்கொள்ளப்படவிருந்த பணிகள் முடங்கின. கூடன்குளம் முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பரில் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.

முதல் அணுஉலையில் 75 டன் எடை கொண்ட 163 பண்டல்களில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி செப்டம்பர் இறுதியில் துவங்கி அக்டோபர் 3ம் தேதி முடிவடைந்தது.சோதனை ஓட்டம் துவக்கப்படவிருந்த நிலையில் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முறையான ஆய்வு செய்து மக்களின் பீதியை போக்க வேண்டும், அணுஉலை செயல்பட தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நீதிபதிகள் விசாரித்து, கூடன்குளம் அணு உலையில் 17 அம்ச பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டனர். இதற்கு பின்னர் கடந்த மார்ச்சில் அணுசக்திக்கழக அதிகாரிகள் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தினர். சோதனையோட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், கூடன்குளம் அணு மின்நிலையத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அணுஉலையை இயக்குவதற்கு தடை விதிக்க முடியாது என கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கை கடந்த மே 6ம் தேதி சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.பின்னர் முதல் அணுஉலையில் நடந்த சோதனைகளின் போது வால்வுகளில் கசிவு ஏற்பட்டது. இதை இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் சரிசெய்தனர். இதுதொடர்பான ஆய்வுஅறிக்கைகள் அணு சக்திக்கழகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையக்குழுவினரும், விஞ்ஞானிகளும் கூடன்குளம் முதல் அணுஉலையில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கான அறிக்கை ஒழுங்குமுறை ஆணைய உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து முதல் அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் பட்டாச்சார்யா 11ம் தேதி அனுமதி வழங்கினார்.

அணுப்பிளவு வினை
இதன்படி, முதல் அணுஉலையில் "கிரிட்டிக்காலிட்டி' எனப்படும் தொடர் அணுப்பிளவு வினையை 11ம் தேதி நள்ளிரவு 11.50 மணிக்கு ரஷ்ய விஞ்ஞானிகள் துவக்கினர். தொடர் அணுப்பிளவு வினை 2 நாட்கள் நடக்கும். தொடர் அணுப்பிளவின் போது ஏற்படும் வெப்பத்தால் அணுக்கலனை சுற்றி இருக்கும் தண்ணீர் நீராவியாக மாற்றப்பட்டு அதன் மூலம் டர்பன் இயக்கப்பட்டு மின்உற்பத்தி துவக்கப்படும்.
ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் தற்போது செய்யப்படும் அணுப்பிளவு வினையின் வேகம் நாளடைவில் அதிகரிக்கப்பட்டு அதிக வெப்ப ஆற்றலை உருவாக்கி அதை மின்ஆற்றலாக மாற்றி மின்உற்பத்தி துவக்கப்படும். படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கும். சுதந்திரதினம் ஆக.,15க்குள் 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் வருகை
அணுசக்திக்கழகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், ரஷ்ய விஞ்ஞானிகள் தொடர் அணுப்பிளவு வினையை தீவிரமாக கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் அணுசக்திக்கழகம், ஒழுங்குமுறை ஆணைய உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள் கூடன்குளம் வரவுள்ளனர். பாதுகாப்பான முறையில் மின்உற்பத்தி நடப்பதை இவர்கள் உறுதி செய்த பின் உலைகளில் மின்உற்பத்தி சகஜமாக நடக்க துவங்கும்.

1000 போலீசார்
அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்புக்குழுவால் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க கூடன்குளத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அணுமின்நிலையம் முன்பு 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அணு மின்நிலையத்திற்குள் செல்லும் ஊழியர்கள், அலுவலர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கூடன்குளத்தை சுற்றியுள்ள செக்போஸ்ட்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி., சுமித்சரண், எஸ்.பி., விஜயேந்திர பிதரி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அமைச்சருக்கு சவால்
அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் இடிந்தகரையில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். அணுஉலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறிய போது, ""அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 17 பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 12 அம்சங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்உற்பத்தியை துவக்குவது ஆபத்தை ஏற்படுத்தும்.

அணுமின்நிலைய நிர்வாகம் மின்உற்பத்தியை துவக்குவதாக கூறுவது வெறும் வதந்தி. 45 நாட்களில் ஆயிரம் மெகாவாட் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகிறார். இதுபோல நடந்தால் நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தை உடனே வாபஸ் பெறுவோம். அப்படி மின் உற்பத்தி இல்லை எனில் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் இருந்து விலக அமைச்சர் தயாரா. மக்களிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்'' என தெரிவித்தார்.