Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 26 ஜூன், 2013

50 வயதில் அரசு வேலையை இழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு

ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முருகேசு (வயது50). தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு படித்த இவர் தனது கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1985–ம் ஆண்டு பதிவு செய்து வைத்திருந்தார்.

பரமக்குடி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு பதிவு மூப்பு அடிப்படையில் நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

கடும் அதிர்ச்சி
இதன்படி பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலகத்தின் சார்பில் முதல் இடத்தில் உள்ள முருகேசுவிற்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 8.6.2012 அன்று பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளிக்கு வருமாறு 31.5.2012 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு 18.6.2012 அன்று தான் தாமதமாக கடிதம் கிடைத்துள்ளது.

இதனால் முருகேசு அதிர்ச்சி அடைந்தார். உடனே பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். நேர்முகத்தேர்வு முடிந்து விட்டதால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. 50 வயது வரை காத்திருந்து பதிவு மூப்பில் முதல் இடத்தில் இருந்தும் தாமதமாக வந்த கடிதத்தால் அரசு வேலை கைநழுவிப்போனதால் முருகேசு மனம் உடைந்தார்.

இழப்பீடு கோரி வழக்கு
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு மனு செய்தார். ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மாநில உயர்கல்வி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோரின் சேவை குறைபாட்டால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

இதற்காகவும் மனஉளைச்சலுக்காகவும் ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடு கோரி முருகேசு ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் முருகேசு வழக்கு தொடர்ந்துள்ளார்.

குற்றாலத்தில் சீசன் ரம்மியமாக உள்ளது

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதாலும், குளுமையான சூழல் நிலவியதாலும் நேற்று சீசன் அருமையாக இருந்தது.

மழை குறைந்தது
நெல்லை மாவட்டம் குற்றாலம் மலையில் மழை நீடித்ததால் மெயின் அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நேற்று காலையில் அருவிகளில் வெள்ளம் குறைந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிப்பதற்கு ஏதுவாக தண்ணீர் கொட்டியது. நேற்று காலை முதல் ஏராளமானவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மெயின்அருவி மட்டுமின்றி ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

சீசன் அருமை
பகலில் விட்டு விட்டு வெயில் காய்ந்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடையிடையே சாரல் மழையும் பன்னீர் தெளிப்பது போன்று தூவியது. நேற்று முழுவதும் அருமையான சீசன் நிலவியது.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்

இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். நமது கல்வித்துறை திட்டங்களில் கற்பிக்கும் திறன் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்க கல்வித்துறை தவறுவதாகவும், புரிந்து கொள்ளாது மனப்பாடம் செய்து எழுதுவது நாகரிகமாக மாறி விட்டதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.