Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 செப்டம்பர், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - இன்டீரியர் டிசைனிங்


உட்புற அலங்காரம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. கட்டிடக்கலையின் அம்சங்கள், பொருளின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் உளவியல் போன்ற பல அம்சங்கள், உட்புற பரப்பை, நேர்த்தியாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் மாற்றும் பணியில் கலந்திருக்கின்றன. ஒரு உட்புற அலங்கரிப்பாளர் என்பவர், தனது திறமையை வெளிப்படுத்தும்போது, வாடிக்கையாளரின் தேவையையும் மனதில் கொண்டு, அவரை திருப்திப்படுத்த வேண்டும். தான் ஏற்கனவே திட்டமிட்ட வடிவமைப்பு முறையை மாற்றம் செய்யவேண்டிய நிலை வந்தால், வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து, அதை மாற்றிக்கொள்ள அலங்கரிப்பாளர் தயங்கக்கூடாது.
உள்கட்டமைப்பின் பிரம்மாண்ட வளர்ச்சியால், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும் இன்டீரியர் டிசைன் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்: நல்ல படைப்புத் திறன்தான் இத்துறைக்கு அடிப்படையான மூலதனம். இத்தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். அலங்காரம் தொடர்புடைய பலவித பொருட்களைப் பற்றிய விரிவான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். மேலும், எந்தெந்த வகை அலங்காரங்களுக்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றியும் தெளிவான அறிவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்களின் நிதிநிலைக்கேற்ப, ஒரு தெளிவான திட்டத்தை உடனடியாக தயாரித்து வழங்க முடியும்.

படிப்புகள்: ஜெய்ப்பூரில் உள்ள அயோஜன் ஸ்கூல் ஆப் ஆர்க், இன்டீரியர் டிசைன் பிரிவில் 5 ஆண்டு படிப்பாக வழங்குகிறது. சென்னை பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்சி., மற்றும் பி.எப்.ஏ., படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூன்று ஆண்டு பி.எஸ்சி., ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாக வழங்குகின்றன. கோவை அவினாசிலிங்கம் பல்கலை பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் உடன் இன்டீரியர் டிசைன் பாடப்பிரிவை வழங்குகிறது.


கல்வி தகுதி: மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருப்பதே, உட்புற அலங்கார படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி. பலவித கல்வி நிறுவனங்களில், உங்களின் வரைதல் மற்றும் வடிவமைப்பு திறனை சோதிக்கும் வகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இத்தேர்வுகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும்.

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Madras University
AvinashilingamUniversity, Coimbatore
Mangalore University
University of Mumbai
Arch Academy of Design, Jaipur
Amity School of Design, Delhi
Guru Nanak Dev University, Amristar


கடையநல்லூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை :தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ?


தாண்டவமாடும் தண்ணீர் பிரச்னையால் கடையநல்லூர் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பெரியாற்று படுகையில் முற்றிலுமாக நீர்பிடிப்பு குறைந்துவிட்டது. இப்பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட கிணறுகளிலும் நீர்மட்டம் முழுவதும் குறைந்துவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக வரக்கூடிய தண்ணீர் வினியோகம் தான் தற்போது பரவலாக மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடுமையான குடிநீர் பற்றாக்குறையை அடுத்து கடையநல்லூர் நகராட்சியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றிற்கு நான்கு லாரிகள் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் நகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் என்ற நிலையும் இருந்து வருகிறது. லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற தண்ணீரும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடான நிலையிலேயே கிடைத்து வருகிறது.
இதனிடையில் குடிநீர் முறையாக வழங்கிட கோரி நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தி வரும் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வறட்சி நிவாரணத்தின் சிறப்பு நிதி மூலம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்திற் கொண்டு போர்க்கால அடிப்படையில் முறையான ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் இதேநிலையில் தொடர்ந்தால் அடுத்த வாரம் தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரை கூட பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலைதான் இருக்கக்கூடும். இருப்பினும் குடிநீர் வினியோகம் பற்றாக்குறையை தவிர்த்திட லாரிகள் மூலம் வழங்க எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூரில் தாண்டவமாடும் நிலையில் மாவட்ட நிர்வாகம் வறட்சி நிவாரண சிறப்பு நிதியினை ஒதுக்கீடு செய்து லாரிகள் மூலம் கூடுதலான வகையில் அனைத்து வார்டு மக்களுக்கும் குடிநீர் கிடைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே நகராட்சி மக்களின் உடனடி எதிர்பார்ப்பாகும்.