Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 29 ஜனவரி, 2013

முற்றுகிறது தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட 24 மணி நேர கெடு முடிகிறது


ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கிட பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒரு மாதத்தில் தெலுங்கானா கோரிக்கைக்கு முடிவு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் தெலுங்கானா பகுதியில் தற்போது பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும்‌ தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு , இன்னும் 24 மணி நேரத்தில் தனித்தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கெடு விதித்துள்ளன.

தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக இறுதி முடிவை எடுக்காவிட்டால் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் அமைச்சர்களும் எம்.பி.,க்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறுகையில், தெலுங்கானா மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டது என்றார். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.

 இதையடுத்து தெலுங்கானா விவகாரம் ஆந்திர மாநிலத்தில் சூடுபறக்கிறது. பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நெருங்கும் பொதுத்தேர்வு - கணினி ,அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை


தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள் அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. 2001 முதல் 2012 வரை, தமிழகம் முழுவதும் 1,200 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த சம்பளத்திற்கு கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில், பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் விஜயகுமார் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் 1,200 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், 2002-10 வரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், முதலில் 5 முதுநிலை ஆசிரியர்களுக்கும், பின்னர் 9 ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டன. ஆனால், கணினி அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2008-09ல், 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதிலும், கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. இப்பாடத்துடன், காலியாக உள்ள பிற பாட ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் பணி நியமனம் சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், இது சார்ந்த வேறு எந்தவித தகவல்களையும் எங்களால் தெரிவிக்க இயலாது" என்றனர்.

விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு! ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன் வாதம்!


விஸ்வரூபம் படத்துக்கு தமிழகம், புதுவையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையை நீக்கும்படி கமலஹாசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மீது கடந்த 24-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடந்தது. 26-ந்தேதி நீதிபதி வெங்கட்ராமன் விஸ்வரூபம் படத்தை பார்த்தார். 28.01.2013 திங்கள்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சம்பந்தப்பட்டவர்களுடன் கமலஹாசன் பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார். தீர்ப்பை இன்று தள்ளி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று விசாரணை நடக்கிறது.

விசாரணையின் போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், திரைப்பட தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.