Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்


 "சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல் பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன.

இதனால், பள்ளிகளில் உள்ள ஒரு ஆய்வகத்தையே, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஒவ்வொரு பிரிவாக பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும், செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், சரிவர கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.

இதனால், மாணவ, மாணவியர், திருப்தியான முறையில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்கின்றனரா என்பதையும், உறுதியாக கூற முடியாது. இது போன்ற நிலையில், ஆன்-லைன் வழியாக, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் உள்ள மத்திய அரசின் சி.டி.ஏ.சி., (சென்டர் பார் டெவலப்டு ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்) மையமும், கேரளாவில் உள்ள அம்ரிதா பல்கலையும் இணைந்து, இந்த ஆன்-லைன், லேப்பை உருவாக்கி உள்ளன.


www.olabs.co.in என்ற இணையதளத்திற்குள் சென்று, 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், எத்தனை முறை வேண்டுமானாலும், முப்பரிமாண தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படங்களாக, இணையத்தில் உள்ளன. இதை பயன்படுத்தி, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

இது தொடர்பான சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அனுப்பப்பட்டு உள்ளது. அதில், சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி கூறியதாவது: பள்ளிகளில், செய்முறை பயிற்சியை மேற்கொள்ள, போதிய நேரம் கிடைக்காது. ஆன்-லைன் வழியில், எப்போது வேண்டுமானாலும், செய்முறை பயிற்சியில் ஈடுபடலாம்.

மாணவர்களின் செய்முறை தேர்வை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்பமும், இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்திற்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அறிவியல் ஆசிரியை ஷீலா கூறுகையில், "இத்திட்டம், அறிவியலை, மாணவ, மாணவியரின் வீட்டிற்கே கொண்டு செல்வதாக உள்ளது.

ஆன்-லைன் வழியில், மாணவ, மாணவியர், உற்சாகமாக, செய்முறை பயிற்சிகளில் ஈடுபடுவர். இதன் மூலம், அவர்களது அறிவியல் அறிவு மேம்படும்,' என, தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக