Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தமிழகத்தில் 7-ம்வகுப்பு மாணவி கற்பழித்து கொலை : டெல்லியில் கூப்பாடு போடுவோருக்கு இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லை ?


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து பெருமாள். இவரது மகள் பேச்சியம்மாள். இவருக்கும் கருங்குளத்தை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கருங்குளத்தில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் திடீரென இறந்துவிட்டார்.அதன்பிறகு பேச்சியம்மாள் தனது 2மகள்களுடன் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மூத்த மகள் புனிதா (வயது13), நாசரேத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இளையமகள் மற்றொரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறாள்.

மாணவி புனிதா தினமும் பள்ளிக்கு ரெயிலில் சென்று வந்தாள். இதற்காக கிளாக்குளத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று, பின்பு அங்கிருந்து திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் தனது தோழிகள் சிலருடன் நாசரேத் செல்வார். அதேபோல் மாலையில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயிலில் நாசரேத்தில் இருந்து தாதன்குளத்திற்கு வந்து, அங்கிருந்து நடந்து வீட்டிற்கு வருவாள்.

நேற்று(20-ந்தேதி) காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவி புனிதா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவளை அவளது தாய் பேச்சியம்மாள் மற்றும் தாத்தா முத்துபெருமாள் ஆகியோர் பலஇடங்களில் தேடினர். ஆனால் அவளைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள், புனிதாவுடன் தாதன்குளம் ரெயில்நிலையத்தில் இருந்து பள்ளிக்கு உடன்செல்லும் அவளது தோழிகளிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது நேற்று காலை புனிதா, பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புனிதா மாயமானது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர். அவர்கள் இதுபற்றி செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த சிறுமி பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி பள்ளிக்கு சென்றபோது மாயமான புனிதா என்பது தெரியவந்தது. மாணவி புனிதாவின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. ஆடை அவிழ்ந்தநிலையில் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. மாணவி புனிதா உடல், அவர் வழக்கமாக நடந்துசெல்லும் காட்டுப்பகுதி நடைப்பாதைக்கு தென்புறம் முள்செடிகள் இருந்தபகுதியில் கிடந்தது.

ஆகவே அவளை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்சிலர், நடைபாதை உள்ள பகுதியில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத தென்பகுதிக்கு தண்டவாளத்தை கடந்து தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைத்து கொடூரமாக கற்பழித்து விட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

புனிதாக கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அவரது தாய் பேச்சியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரும் மற்றும் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இத்தகவலை அறிந்ததும் கிளாக்குளம் மற்றும் தாதன்குளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

எஸ்.பி. விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி புனிதாவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆகவே சம்பவ இடத்திற்கு மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து முள்ளுக்காட்டு வழியாக சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.

ஆகவே கொலையாளிகள் அந்த வழியாகத்தான் தப்பித்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.   ஆகையால் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் நேற்று காலை முதல் மதியம் வரை யாரேனும் சந்தேகப்படும் வகையில் வந்து சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வழக்கமாக ஏதாவது கும்பல் நடமாட்டம்  இருக்குமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதனடிப்படையில் கொலையாளிகள்குறித்து துப்புதுலக்கும் நடவடிக் கையில் போலீசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

கொலை யாளிகளை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பரபரப்பு பள்ளிக்கு சென்றமாணவி கற்பழித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் கிளாக்குளம், தாதன்குளம் கிராமங்களில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 டெல்லியில் பேருந்தில் நடந்த கொடுஞ்செயலான கற்பழிப்பு சம்பந்தமாக போராட்டம் நடத்தும் ,கூப்பாடு போடும் கூட்டத்தார்களுக்கு தமிழகத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இந்த ஏழை சிறுமியின் கொலை ஒரு பொருட்டாக தெரியவில்லையோ என்று தமிழக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .


பேச்சுக் கலையில் வல்லவர் ஆக வேண்டுமா?


* உங்களின் பேச்சை கேட்கவிருக்கும் பார்வையாளர் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

* திறன்வாய்ந்த பார்வையாளர்கள் எண்ணிக்கைப் பற்றிய ஒரு தோராயமான தகவலைப் பெறவும்.

* உங்களின் பேசு பொருள் குறித்து, பார்வையாளர்கள் கேள்வியெழுப்பி விடாமல் இருத்தல் முக்கியம்.

* பேச்சினூடே, பொருத்தமான நகைச்சுவையை இடம்பெற செய்தால், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வது எளிதாக இருக்கும்.

* பார்வையாளர்களின் நடவடிக்கையின் மூலமாக, நீங்கள் எந்த விதத்திலும், தொந்தரவு அடைந்துவிடக்கூடாது.

* பார்வையாளர்கள், தங்களின் சந்தேகங்களைக் கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

கண்களின் வழியாக பேசுதல்:
நீங்கள் பேசுகையில், உங்களது பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து பேசுவது மிகவும் சிறந்தது. ஏனெனில், இதன்மூலம் அவர்கள் உங்களை ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்குவர்.

சைகைகள்:
உரையாற்றும்போது, கையசைவு மற்றும் தேவையான முக பாவனைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், உரை சிறப்படையும்.

உடல் மொழி:
வார்த்தை ஒரு விஷயத்தை விளக்குவதை விட, உடல்மொழியானது சில சமயங்களில், நன்றாக விளக்கிவிடும். பொருத்தமற்ற உடல் மொழியானது, உங்களின் உரையையே சிதறடித்துவிடும். எனவே, சரியான உடல் மொழியை வெளிப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

உங்களின் பண்பு:
பொறுமை, கண்ணியம், நேர்மறை எண்ணம், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்ற பண்புகள் உங்களின் உரையாடலில் இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான், உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும்.

சரியான வார்த்தைப் பிரயோகம்:
சரியான அர்த்தம் விளங்காத வார்த்தைகளைப் பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு பரிச்சயமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதன் மூலமே, உங்களின் கருத்து, எளிமையாகவும், வலுவாகவும் உரியவர்களை சென்றடையும்.

சிறப்பான உச்சரிப்பு:
வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிப்பது ஒரு தனிக்கலை. எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கே மிதமாக உச்சரிக்க வேண்டும் என்பதை முறையாக செய்தால், கேட்போர் கவரப்படுவர்.

வேகம்:
கேட்பவர்கள், சரியாக புரியும்படியான வேகத்தில் பேசுவது அவசியம். எங்கே, வேகத்தை லேசாக அதிகரிக்க வேண்டும் மற்றும் எங்கே, வேகத்தை லேசாக குறைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்துகொண்டால், வெற்றி உங்களுக்கே.

சத்தம்:
உரையாற்றும்போது, எந்தளவு சத்தத்தில் பேசினால் சரியாக இருக்கும் என்பதை அறிந்திருத்தலும் முக்கியம். பேச்சுக் கலையில், தேவையான அளவு சத்தம் என்பது ஒரு முக்கியமான அம்சம்.

மேற்கூறிய காரணிகளை நீங்கள் தெளிவாக கற்றுத் தேர்ந்துவிட்டால், பேச்சுக் கலையில் நீங்கள் ஒரு வல்லவராக ஜொலிப்பீர்கள்.

தமிழகத்தில் சாதிய தாக்குதல்களை தடுக்க வேண்டும்’ பிரதமரை சந்தித்து சாதி அமைப்பின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

22–12–2012 (நேற்று) அன்று பகல் 12 மணியளவில் பிரதமர் மன்மோகன்சிங்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அண்மை காலமாக தமிழ்நாட்டில் தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து விளக்கி கூறியதுடன், இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். மேலும், தருமபுரி வன்முறை சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினார்.

அத்துடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டில் விதிக்கப்பட்டுள்ள கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை தற்போதுள்ள 4½ லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தக்கோரி மனு கொடுத்தார்.

அதற்கு பிரதமர் மன்மோகன்சிங், இவை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை உயர்த்துவது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 22 டிசம்பர், 2012

சிறுபான்மையின மாணவ–மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி உதவித்தொகை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்புக்கு சிறுபான்மை மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவிதொகை புதுப்பித்தல் ஆன்லைன் மூலம் வருகிற 31–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

உறுதி செய்ய வேண்டும்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு தவறாமல் அனுப்புதல் வேண்டும். விண்ணப்ப படிவத்தையும் உடன் படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் கடந்த ஆண்டு தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், வருமான சான்று, வங்கி கணக்கு எண் விபரங்களுடன் கல்லூரி முதல்வர் அல்லது டீனுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஆன்லைன் மூலமாகவும், அதன் விண்ணப்ப படிவங்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் முதல்வரின் அல்லது டீனின் கையொப்பத்துடன் சிறுபான்மை நல ஆணையர் முகவரிக்கு ஜனவரி மாதம் 10–ந்தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். மாணவ–மாணவிகளின் தங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சிறுபான்மையினர் நல ஆணையருக்கு கல்லூரியில் இருந்து 10.1.2013–க்குள் அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

பிஜேபி கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு: ரூ.846 கோடி இழப்பு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், நேற்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.846½ கோடி இழப்பு:
பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மறைந்த பிரமோத் மகாஜன் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடுகள் நடந்ததாகவும், இதனால் மத்திய அரசுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து இருப்பதும், அதன் மூலம் மத்திய அரசுக்கு 846 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்:
இதையொட்டி, தனது விசாரணையை முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பார்தி ஏர்டெல், வோடபோன், ஹட்சிசன் மேக்ஸ் மற்றும் ஸ்டெர்லிங் செல்லுலார் ஆகிய 3 தொலை தொடர்பு நிறுவனங்கள், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஸ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மந்திரி விடுவிப்பு:
முதல் தகவல் அறிக்கையில், தொலை தொடர்புத்துறை முன்னாள் துணை இயக்குனர் ஜெனரலும், பி.எஸ்.என்.எல். இயக்குனருமான ஜே.ஆர்.குப்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், நேற்றைய குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் குற்றவாளி பெயரில் இருந்து நீக்கப்பட்டு, சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளது. இவருடன் மேலும் 72 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மறைந்த தொலை தொடர்புத்துறை மந்திரி பிரமோத் மகாஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:–

அவசரம், அவசரமாக ஒதுக்கீடு:
பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில், தொலை தொடர்புத்துறை, ஆதார அலைக்கற்றை ஒதுக்கீட்டை 3 தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் 4.4 மெகா ஹெட்ஸ்–ல் இருந்து 6.2 மெகா ஹெட்ஸ் ஆக உயர்த்தியது. மேலும், அவரது காலத்தில் பயனீட்டாளர்களின் அடிப்படையில் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு செய்யப்பட்டது. அப்போதையை தொலை தொடர்புக் கொள்கைக்கு முரணாகவும், அவசரம் அவசரமாகவும் அந்த தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பிரமோத் மகாஜன் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்.

இழப்பீடு ஏன்?:
தொலை தொடர்பு கமிஷன் முன்னாள் தலைவரும், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஷ், மறைந்த பிரமோத் மகாஜனுடன் சேர்ந்து சதி செய்தும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், முறைகேடாகவும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கு விசாரணையை அடுத்த (ஜனவரி) மாதம் 14–ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ஓ.பி.சைனி, அன்று இந்த குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

இந்தியாவில் முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் 260 மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் பதிவு


டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தி வருகின்றனர்.  பெண்கள் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக உரிமைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 வருடங்களில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 260 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என் கூறியுள்ளது.  அவர்களில், 72 பேர் சுயேச்சைகள். மேலும், 26 காங்கிரஸ் கட்சியினரும், 24 பா.ஜனதாவினரும், 16 சமாஜ்வாடி கட்சியினரும், 18 பகுஜன் சமாஜ் கட்சியினரும் இதில் அடங்குவர்.

மகாராஷ்டிரா முதல் இடம்:
இந்த பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் 41 பேருடன் முதல் இடம் பெறுகிறது.  அதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 37 பேரும், மேற்கு வங்காளத்தில் 22 பேரும் இடம் பெறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி, பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று கோரியிருந்தது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி பேசுகையில், கற்பழிப்பு குற்ற-ச்சாட்டுகளில் சிக்கிய அரசியல்வாதிகளுக்கு அந்தந்த கட்சிகளே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மற்றொரு புறம், தேர்தல் ஆணையமும் கடுமையான முறையில் இது குறித்து ஒழுங்கு முறையினை வகுக்க வேண்டும் என அவர் கூறினார்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

உலகளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்


நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச அரிசி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.நடப்பாண்டில், இதுவரையிலுமாக, இந்தியா, 90 லட்சம் டன்னுக்கும் அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம், இதுவரை அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்த தாய்லாந்தை, பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறியுள்ளது.

எனினும், நடப்பு வேளாண் பருவத்தில், போதிய பருவமழை இல்லாததால், நாட்டின் நெல் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வரும் 2013ம் ஆண்டு, தாய்லாந்து மீண்டும் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது என, சர்வதேச உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தடை நீக்கம்:கடந்த 2011ல், தனியார் அரிசி ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் நிறுவனங்களும் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதால், பாரம்பரிய நாடுகளுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்துடன், அரிசி ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளுக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினர்.

அதேசமயம், இந்திய ஏற்றுமதியாளர்கள், சர்வதேச சந்தை விலையை விட, குறைந்த விலைக்கு அரிசியை ஏற்றுமதி செய்தனர். இதனால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில், தாய்லாந்து அரிசி விலை அதிகம் என்பதால், அந்நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இந்த நிலை, வரும் ஆண்டு மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை:தாய்லாந்து, சர்வதேச சந்தையில் அதன் அரிசி விலையை குறைத்துள்ளது. இதனால், வரும் ஆண்டில், உலக நாடுகளிடையே, தாய்லாந்து அரிசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விளைவாக, தாய்லாந்து, வரும் 2013ம் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில் மீண்டும் முதல்இடத்தை பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், பருவமழை பொழிவில் ஏற்பட்ட தாமதம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால், இந்தியாவின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தானியங்கள்:எனினும், நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில் (ஜூன்-ஜூலை), இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதி,1.57 கோடி டன்னாக இருக்கும். இதில், 77 லட்சம் டன் அரிசியும், 50 லட்சம் டன் கோதுமையும், 30 லட்சம் டன் மக்காச்சோளமும் அடங்கும்.கடந்த வேளாண் பருவத்தில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி, 9.40 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியது. அதேபோன்று, நெல் விளைச்சலும், 10.04 கோடி டன்னாக உயர்ந்தது. மக்காச்சோள உற்பத்தி, 1.62 கோடி டன்னாக இருந்தது.

உணவு தானிய உற்பத்தி :உச்சத்தை எட்டிய நிலையில், மத்திய அரசு, அதிக அளவில் நெல் மற்றும் கோதுமையை கொள்முதல் செய்தது. இதனால், தனியார் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த அளவிற்கே உணவு தானியங்கள் கிடைத்தன.இந்நிலையில், நடப்பாண்டில், மத்திய அரசு, அதன் கையிருப்பில் உள்ள உபரி உணவு தானியங்களை அதிக அளவில் விற்பனை செய்து, அறுவடையாகி வரும் புதிய உணவு தானியங்களுக்கு, கிடங்குகளில் கூடுதலாக இட வசதி அளிக்க திட்டமிட்டுள்ளது.

கோதுமை:இதன் விளைவாக, முதலில், 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மேலும், 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட உள்ளது.ரபி பருவத்தில், நெல் மற்றும் கோதுமை விதைப்புக்கான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. கோதுமை அதிகம் விளையும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பருவமழை குறைவாக பொழிந்துள்ளது.