Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 22 டிசம்பர், 2012

பிஜேபி கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு: ரூ.846 கோடி இழப்பு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், நேற்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.846½ கோடி இழப்பு:
பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மறைந்த பிரமோத் மகாஜன் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடுகள் நடந்ததாகவும், இதனால் மத்திய அரசுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து இருப்பதும், அதன் மூலம் மத்திய அரசுக்கு 846 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்:
இதையொட்டி, தனது விசாரணையை முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பார்தி ஏர்டெல், வோடபோன், ஹட்சிசன் மேக்ஸ் மற்றும் ஸ்டெர்லிங் செல்லுலார் ஆகிய 3 தொலை தொடர்பு நிறுவனங்கள், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஸ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மந்திரி விடுவிப்பு:
முதல் தகவல் அறிக்கையில், தொலை தொடர்புத்துறை முன்னாள் துணை இயக்குனர் ஜெனரலும், பி.எஸ்.என்.எல். இயக்குனருமான ஜே.ஆர்.குப்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், நேற்றைய குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் குற்றவாளி பெயரில் இருந்து நீக்கப்பட்டு, சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளது. இவருடன் மேலும் 72 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மறைந்த தொலை தொடர்புத்துறை மந்திரி பிரமோத் மகாஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:–

அவசரம், அவசரமாக ஒதுக்கீடு:
பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில், தொலை தொடர்புத்துறை, ஆதார அலைக்கற்றை ஒதுக்கீட்டை 3 தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் 4.4 மெகா ஹெட்ஸ்–ல் இருந்து 6.2 மெகா ஹெட்ஸ் ஆக உயர்த்தியது. மேலும், அவரது காலத்தில் பயனீட்டாளர்களின் அடிப்படையில் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு செய்யப்பட்டது. அப்போதையை தொலை தொடர்புக் கொள்கைக்கு முரணாகவும், அவசரம் அவசரமாகவும் அந்த தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பிரமோத் மகாஜன் கூடுதலாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்.

இழப்பீடு ஏன்?:
தொலை தொடர்பு கமிஷன் முன்னாள் தலைவரும், தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷியாமள் கோஷ், மறைந்த பிரமோத் மகாஜனுடன் சேர்ந்து சதி செய்தும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், முறைகேடாகவும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ.846 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கு விசாரணையை அடுத்த (ஜனவரி) மாதம் 14–ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ஓ.பி.சைனி, அன்று இந்த குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக