Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஊதுபத்தி தொழிலில் பெருகும் வணிக வாய்ப்பு


பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -  ஊதுபத்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு பெருகியுள்ளது.அதுமட்டுமின்றி, ஐ.டி.சி போன்ற பெரிய நிறுவனங்களும், ஊதுபத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.இதனால், இந்நிறுவனங்களுக்கு, ஊதுபத்திகளை தயாரித்து தரும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.இந்தியாவில் ஊதுபத்தி சந்தையின் மதிப்பு, 3,000 கோடி ரூபாயாக உள்ளது. இதில், அமைப்பு சாரா நிறுவனங்கள், பெரும்பான்மை பங்களிப்பை கொண்டுள்ளன.அமைப்பு சார்ந்த பிரிவில், ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்களிப்பு 7-8 சதவீதமாக உள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஊதுபத்திகளில் ஒன்றான, "மங்கள்தீப்' பிராண்டு ஊதுபத்திகளை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது.இந்திய ஊதுபத்தி சந்தையின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி,12-13 சதவீதமாக உள்ளது."இதை விட, ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வளர்ச்சி, மும்மடங்காக உள்ளது' என, இப்பிரிவின் தலைமை செயல் அதிகாரி வி.எம்.ராஜசேகரன் தெரிவித்தார்.ஐ.டி.சி., நிறுவனம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 20 சிறிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து பெற்றுக் கொள்கிறது.இந்நிறுவனங்கள், மாதம், 70 கோடி ஊதுபத்திகளை, ஐ.டி.சி.,க்கு வழங்கி வருகின்றன. தற்போது, மேலும் 5-10 புதிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து, பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

எனினும், ஊதுபத்தி தயாரிப்பில் ஐ.டி.சி., கடுமையான தரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.ஐ.டி.சி.,க்கு ஊதுபத்திகளை தயாரித்து வழங்கும் சிறு நிறுவனங்களில், ஆறு நிறுவனங்கள், சிறந்த தரத்திற்கான ஐ.எஸ்.ஓ. 9001-2000 தரச் சான்றிதழை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.மகளிர் சுயஉதவி குழுஇந்த வகையில், ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வாயிலாக, மகளிர் சுயஉதவிக் குழுவினர், சிறு தொழில் முனைவோர் என, சமூகத்தில் பின்தங்கியுள்ள, 13 ஆயிரம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கிராமப்புற மக்களின் நிலையான வாழ்வாதாரத்திற்கு வகை செய்யும் விதத்தில், ஒடிசா, திரிபுரா, அசாம் போன்ற மாநில அரசுகளுடன், ஐ.டி.சி., ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.நிலையான வருவாய் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் கூட்டுறவு சங்கங்களில், ஏராளமான ஊதுபத்தி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.வேளாண் தொழில் சார்ந்த, பின்தங்கிய ஊரகப் பகுதிகளில், விவசாய பொருட்களின் உற்பத் தியும், அது சார்ந்த வருவாயும் குறைந்து வரும் சூழலில், நிலையான வருவாய்க்கான தளத்தை உடனடியாக அமைப்பது அவசியம். அதற்கு, ஐ.டி.சி.,யின் ஊதுபத்தி பிரிவு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

கனடாவில் படிக்கலாம் வாங்க ..............!


கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், தாங்கள் படிக்கவிரும்பும் பல்கலையுடன் நேரடியாக தொடர்புகொண்டு விபரங்களைக் கேட்டறிதல் வேண்டும். ஏனெனில், அங்கு, ஒவ்வொரு பல்கலைக்கும் ஒவ்வொரு தனி விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் உண்டு.

Study permit -க்கு விண்ணப்பிக்க, ஒரு பல்கலை அல்லது கல்லூரியின் ஏற்புக் கடிதத்தை(letter of acceptance) நீங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும், IELTS சான்றிதழும் உங்களுக்கு வேண்டும்.

கல்விச் செலவு
கனடாவில், இளநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான தோராயச் செலவு 17,000 முதல் 44,000 கனடா டாலர்கள் வரை ஆகிறது. இதன் விபரம்,

டியூஷன் மற்றும் மாணவர் கட்டணம் - 5,500 முதல் 26,000 கனடா டாலர்கள்

உணவு மற்றும் தங்குமிடச் செலவு - 7,000 முதல் 13,000 கனடா டாலர்கள்

தனிப்பட்ட மற்றும் மருத்துவக் காப்பீட்டு செலவு - 1,000 முதல் 3,000 கனடா டாலர்கள்

பாடப் புத்தகங்கள் - 1,000 முதல் 2,000 கனடா டாலர்கள்.

படிப்பிற்கான காலஅளவு
பொதுவாக, கனடாவில், முழுநேர இளநிலைப் படிப்புகள் 4 வருடங்கள் கொண்டவை. LLB படிப்புகள் 3 வருட காலஅளவைக் கொண்டதாக இருந்தாலும், அதில் சேர, ஏற்கனவே 3 வருடங்கள் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை, 4 வருட காலஅளவைக் கொண்டவை. அதேசமயம், கனடாவின் மருத்துவ கல்வி நிலையங்களில் சேர, ஏற்கனவே 3 வருட இளநிலைப் படிப்பு அனுபவம் இருக்க வேண்டும்.

முதுநிலைப் படிப்புகளுக்கு, 1 முதல் 3 வருடங்களும், டாக்டரேட் படிப்புகளுக்கு 3 முதல் அதற்கும் மேற்பட்ட வருடங்களும் ஆகும்.

உதவித்தொகை
கனடாவின் பல பல்கலைகள் மற்றும் கல்லூரிகள், சேர்க்கை நேரத்தில், ஒரு மாணவரின் மெரிட் அடிப்படையில், உதவித்தொகைகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மாணவர்களுக்கென்றே சில உதவித்தொகை திட்டங்கள் உள்ளன.

இதுபோன்ற உதவித்தொகைகளைப் பெற, ஒரு மாணவரின் Extra curricular activities பற்றி பட்டியலிட்ட தனி விண்ணப்பங்கள் தேவை. இதைப்பற்றி அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது நிர்வாகிகளை அணுக வேண்டும்.

வேலை வாய்ப்புகள்
பல வெளிநாட்டு மாணவர்கள், தங்களின் படிப்பின்போதும், படிப்பு முடிந்த பின்பும், கனடாவில் பணிபுரிகின்றனர். ஒரு மாணவர், வளாகத்திற்குள்ளேயே பணிசெய்ய, work permit தேவையில்லை. அதேசமயம், படிப்பு முடிந்தப் பிறகோ, வளாகத்திற்கு வெளியேயோ அல்லது co-op/internship placement முறையிலேயோ பணிபுரிய வேண்டுமெனில் work permit அவசியம்.

விசா விதிமுறைகள்
விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன்பாக, ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலையிடமிருந்து பெற்ற ஏற்புக் கடிதம், செல்லத்தக்க பாஸ்போர்ட், தேவையான நிதியாதார ஆவணங்கள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

விசா விண்ணப்பக் கட்டணமாக 125 கனடா டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி ரூ.5470. மேலும் ப்ராசஸிங் கட்டணமாக ரூ.700 வசூலிக்கப்படுகிறது.

முதல்கட்ட ரெஸ்பான்ஸ் பெற்றபிறகு, மருத்துவ ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு கல்விக்கான உதவித்தொகை


அடுத்த 2014-15ம் கல்வியாண்டின் வெளிநாட்டுப் பல்கலை சேர்க்கை செயல்பாடுகள் தொடங்கிவிட்ட நிலையில், உங்களின் நிதி தொடர்பான ஏற்பாடுகளை முறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பல நாடுகள், தங்களது கல்வி உதவித்தொகை திட்டங்களின் மூலமாக, வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

இந்திய மாணவர்களைக் கவரும் சில முக்கிய நாடுகளின் உதவித்தொகை திட்டங்கள் பற்றி அறிவதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா
சமாளிக்கத்தக்க வாழ்க்கைச் செலவினம் மற்றும் சிறந்த மாணவர் சமூகம் போன்ற அம்சங்கள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரம் இந்திய மாணவர்கள், ஆஸ்திரேலியா செல்ல காரணமாகின்றன. ஆஸ்திரேலியாவின் சிறந்த காலநிலை மற்றும் வாழ்க்கை நயம் போன்றவை, வெளிநாட்டு மாணவர்களுக்கான சிறந்த அனுபவத்தை உறுதி செய்கின்றன.

கலாச்சாரத்திற்கு மெல்போர்ன் நகரமும், அழகிற்கு பெர்த் நகரமும், நிதி வளத்திற்கு சிட்னியும் உதாரணமாகத் திகழ்ந்து, அதிகளவிலான அயல்நாட்டு மாணவர்களை ஈர்க்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டில் கிடைக்கும் உதவித்தொகை திட்டங்கள் பற்றி அறிய கீழ்கண்ட சில கல்வி கண்காட்சிகளில் இடம்பெற்று பயன்பெறலாம்,

Queensland University Scholarship - February 8, 2013
Australian development Awards - December 14, 2012
La Trobe Excellence Awards - December 14, 2012
University of Sydney Scholarships - December 31, 2012

சிங்கப்பூர்
மாணவர்களுக்கு மிகவும் உகந்த ஒரு இடமாக, சிங்கப்பூர், QS சர்வேயினால் கணிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்திலும் பாதுகாப்பான பயணம், நவீன வசதிகள் போன்றவை சிங்கப்பூரின் சிறப்புகளில் சில. மேலும், மெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளோடு ஒப்பிடுகையில், கல்விக் கட்டணமும், வாழ்க்கைச் செலவினமும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு மாணவர்களுக்கு, சிங்கப்பூர் வழங்கும் உதவித்தொகைகளைப் பெறுவதற்கான போட்டிகள் எளிதானவை என்பதும் மற்றொரு சிறப்பம்சம்.

கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் கல்வி கண்காட்சிகளில் கலந்துகொண்டு மேற்கண்ட விபரங்களை அறியலாம்,

INSEAD - Syngenta MBA Awards - February 11, 2013
NUS Graduate Scholarships - November 15, 2012
Singapore Airlines Awards - July 15, 2013

அமெரிக்கா
அமெரிக்காவில் படித்துவரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்போதைய நிலையில் 150க்கும் மேற்பட்ட உதவித்தொகை திட்டங்களை அளித்துவரும் சிங்கப்பூர், இதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கீழ்கண்ட கல்வி கண்காட்சிகளின் மூலமாக, அந்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்,

Wharton Business School Award - January 4, 2013
Wesleyan Freeman Scholarship - January 1, 2013
Asia Pacific Leadership Awards - December 1, 2012
Harvard Science fellowships - December 1, 2012

பிரிட்டன்
விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டாலும், வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில், பிரிட்டனின் மவுசு இன்னும் குறையவில்லை. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்றவை பழமையான மற்றும் புகழ்பெற்ற பல்கலைகளாக இருந்தாலும், வேறுபல சிறந்த பல்கலைகளும் அங்குள்ளன. அவை, பல உதவித்தொகை திட்டங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றன. கீழ்கண்ட, கல்வி கண்காட்சிகளில் கலந்துகொண்டு விரிவான விபரங்களை அறிவதை உறுதி செய்யுங்கள்,

West London Business Award - November 30, 2012
University of Leeds Scholarships - June 30, 2013
Charles Wallace India Trust - December 31, 2012
LSE Research studentships - January 11, 2013

சனி, 17 நவம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் காய்ச்சலால் மக்கள் பாதிப்பு


கடையநல்லூர் பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கன்குனியா, டெங்குகாய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் தற்போது இப்பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடையநல்லூர், சொக்கம்பட்டி, இடைகால், ஊர்மேலழகியான், அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் பாதித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறப்படுகிறது. காய்ச்சல் பாதித்தவர்கள் உடல்வலி, கை, கால் மூட்டு வலி போன்றவைகளால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை ஒரு சில தினங்கள் மட்டும் பெய்துவிட்டதால் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம் தான் காய்ச்சலுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொதுமக்களின் தூக்கத்தினை கெடுக்கும் வகையில் நடமாடும் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேகமாக பரவி வரும் காய்ச்சலால் கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பெரும் அவதியும், பீதியும் அடைந்துள்ளனர்.

ஒரு ஆசிரியையை காதலிப்பதில் இரு ஆசிரியர்களிடையில் மோதல்


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சுந்தரேசனார் நகரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் அம்சா, 40. இதே பள்ளியில், மதிவாணன், சங்கர், ஜானகி ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர்.தலைமை ஆசிரியையு டன், ஆசிரியர்களான மதிவாணன், சங்கர் ஆகியோர், நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம், பள்ளி வளாகத்தில், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் இருவரும், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதை வேடிக்கை பார்த்த மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து, கடந்த புதன் அன்று, மாணவர்களின் பெற்றோர்,பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார் மற்றும் உதவி துவக்கக் கல்வி அலுவலர் கண்ணய்யா ஆகியோர், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என, தெரிந்ததை அடுத்து, தலைமை ஆசிரியை அம்சா, மேல் நெடுங்கல் துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆசிரியர் மதிவாணன், வெளியகரம் துவக்கப் பள்ளி, சங்கர், ராமசமுத்திரம் துவக்கப் பள்ளி, ஆசிரியை ஜானகி, நொச்சலி துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பிச்சை எடுப்பதில் மோதல், ஒரு பிச்சைக்காரர் கொலை!


பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மற்றொரு பிச்சைக்காரை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே உள்ள செய்யாம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லையன், 65. அவர், அப்பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவரைப் போலவே, மற்றொரு நபரும், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

வழக்கமாக, இருவரும், நல்லூரில் உள்ள கடையின் முன் படுத்து உறங்குவது வழக்கம். கடந்த, 14ம் தேதி இரவு வழக்கமாக உறங்கும் இடத்துக்கு வந்துள்ளனர். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நல்லையன், மற்றொரு பிச்சைக்காரரை அடித்து உதைத்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த பிச்சைக்காரர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், நல்லையனை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்த நபர் யார், அவர் பெயர் என்ன என்பது உள்ளிட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. மேலும், நல்லையன் செல்லும் இடத்திற்கு, சம்மந்தப்பட்ட நபரும் சென்று பிச்சை எடுத்து வந்துள்ளார். அதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, சம்மந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

திருப்பூரில் பனியன் உற்பத்தி பாதிக்கப்படுமா .............?


கடும் மின்வெட்டு காரணமாக வேலை வாய்ப்பு குறைந்து, வருவாய் பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் தீபாவளி வரை தாக்குப்பிடித்தனர். போனஸ் வாங்கியதும், பண்டிகையை கொண் டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார் களா, மாட்டார்களா என பனியன் கம்பெனி உரிமையாளர்களும், விசைத்தறியாளர்களும் கலக்கம் அடைந் துள்ளனர். ஏற்றுமதி ஆர்டர்களை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்களின் சொந்த ஊர்களுக்கு பஸ் அனுப்பி, அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

திருப்பூரில் பனியன் தொழிலிலும், அதை சார்ந்த பிற தொழில் பிரிவுகளிலும், வெளிமாவட்ட மக்களே பிரதான தொழிலாளர்களாக உள்ளனர். நகரிலேயே குடும்பத்துடன் குடியேறியிருந்தாலும், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். திடீரென கணிசமான அளவு தொழிலாளர்கள் வெளியேறுவதால், பனியன் உற்பத்தி முடங்குகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றாலும், வழக்கமான அளவு உற்பத்தி நடப்பதில்லை.

தற்போது, குறித்த நேரத்தில் ஆர்டரை முடித்து அனுப்ப வேண்டிய கட்டாயம், ஏற்றுமதி பனியன் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக, தொழிலாளர்களை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும், மின்வெட்டு காரணமாக வேலைவாய்ப்பு குறைந்து, வருமானம் பாதியாக குறைந்துள்ளதால், தொழி லாளர்கள் திரும்பி வருவார்களா என்ற அச்சம் பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பனியன் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில்,"தீபாவளிக்கு சென்றவர்களில், 90 சதவீதம் பேர், நாளை (18ம்தேதி) இரவுக்குள் திருப்பூர் திரும்புவர். சிலர், பொங்கல் பண்டிகை வரை, அங்கேயே தங்கியிருப்பர். ஏற்றுமதி நிறுவனங் களுக்கு, தொழிலாளர்கள் தேவைப்படுவதால், அவர்கள், சொந்த ஊர் செல்ல கம்பெனி மூலமாக பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அதேபோல், பஸ்களை அனுப்பி வைத்து, தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

விசைத்தறி நிலை:பல்லடம் பகுதியில் 35 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி மற்றும் அதன் சார்பு தொழில்களில் 35 ஆயிரம் பேர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதில், 20 ஆயிரம் பேர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். பல்லடம் பகுதியில் ஆறு மாதத்துக்கு மேலாக, தினமும் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறிகளை சீராக இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வசதி படைத்த 30 சதவீத விசைத்தறியாளர்கள், ஜெனரேட்டர் உதவியுடன் இயக்கி வருகின்றனர். மின்வெட்டு காரணமாக தொழிலாளர்களின் கூலி முன்பை விட பாதிக்கு பாதி குறைந்து விட்டது. கூலி குறைவால் அன்றாட தேவையை கூட முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

தீபாவளிக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே 10 சதவீத தொழிலாளர்கள் வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்று விட்டனர். மீதமுள்ள தொழிலாளர்கள், போனஸ் வாங்குவதற்காக மிகவும் சிரமப்பட்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை வேலை பார்த்து வந்தனர். பண்டிகைக்கு முந்தைய நாள் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. அதைப்பெற்ற தொழிலாளர்கள் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்று விட்டனர். மின்வெட்டு காரணமாக, வேலை பாதிப்பு, கூலி குறைந்துள்ளதால் தொழிலாளர்கள் மீண்டும் வருவார்களா, மாட்டார் களா என்ற சந்தேகம் விசைத்தறியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விசைத்தறியாளர்கள் கூறுகையில், "மின்வெட்டு காரணமாக துணி உற்பத்தி 60 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது. துணி உற்பத்தி குறைவால் தொழிலாளர்களின் கூலியும் பாதி அளவுக்கு குறைந்துள்ளது. அக்கூலியை கொண்டு தொழிலாளர்கள் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமம் என்பது எங்களுக்கு தெரியும். துணி உற்பத்தி குறைவால், எங்களால் அவர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு கூலி வழங்க இயலவில்லை.

பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்ற வெளிமாவட்ட தொழிலாளர்களில் 50 சதவீதத்தினராவது மீண்டும் வேலைக்கு வருவார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. மின்வெட்டு பிரச்னை எப்போது தீரும் என்பதே தெரியவில்லை,' என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

காலியாகும் வீடுகள்:கடந்த ஆறு மாதமாக, தினமும் 14 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. தொழில்கள் கடும் நசிவை நோக்கிச் செல்லத் துவங்கியுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து, கூலி 50 சதவீதம் குறைந்து விட்டது. அடிப்படை தேவையை சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

சொந்த ஊரில் குறைவாக கூலி கிடைத்தாலும், வீட்டு வாடகை குறைவு, உற்றார், உறவினர்கள் அருகில் இருப்பதால், விசேஷங்களுக்கு விடுமுறை எடுக்காமல் வேலைக்கு செல்ல முடியும். போக்குவரத்து செலவின்மை போன்ற காரணங்களால், பல்லடம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களில் 10 சதவீதத்தினர், வாடகை வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு செல்லத்துவங்கியுள்ளனர்.