Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மதுரை பகுதியில் வறட்சியின் கோரத்தால் செத்து மடியும் கன்றுகள்


மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடும் வறட்சியால் கால்
நடைகள் மேய்ச்சலின்றி தவிக்கின்றன. பால் இன்றி, கன்றுகள் மடிந்து வரும் பரிதாபச் சூழல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையில் பயன்பெறும் தமிழகத்திற்கு, இம்முறை ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, தென்மாவட்டங்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மழையில்லாமல், விவசாய பயிர்கள் கருகின. வழக்கத்திற்கு மாறாக வெயில் கடுமையாக இருந்ததால், கண்மாய்கள் வறண்டன.
நீரின்றி காய்ந்த பயிர்களை, விவசாயிகளே கால்நடைகளுக்கு இரையாக்கினர். நடப்பாண்டு விவசாயம் பொய்த்து போன நிலையில், அதை நம்பியிருந்த கால்நடைகளுக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது. நீரின்றி
மேய்ச்சல் புற்கள், சருகாய் மாறியுள்ளன.

குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தவிக்கின்றன. வெளியூரிலிருந்து வரும் மாடுகள், தங்கள் கிராமத்தில் மேய்ச்சலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தகராறுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது. மேய்ச்சல் குறைந்ததால், பசுக்களின் பால் உற்பத்தி பாதித்து, கன்றுகள் இறப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமாய் மேய்ச்சலுக்கு, ஒரு மைல் தூரம் பயணிக்கும் மாடுகள், தற்போது ஆறு மைல் தூரம் வரை, நடக்கின்றன.அதிலும் மேய்ச்சலின்றி, சோர்வடைந்து, எடை குறைந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம்
பழையனூர், வல்லாரேந்தலில் இருந்து, மதுரை களிமங்கலம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த மாடுகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், வேறு பகுதிக்கு நடைகட்டின.

ஊர்காவலன், 65, கூறியதாவது: விபரம் தெரிந்த நாள் முதல், கால்நடை மேய்ச்சல் தொழிலில் உள்ளேன். இப்படியொரு பஞ்சத்தை பார்த்ததில்லை. மழையின்றி, நிலங்கள் வறண்டு போயுள்ளன; குளங்களில் நீரில்லை. இரையின்றி மாடுகள் மயங்குகின்றன. வேறு ஊருக்குச் சென்றால், "எங்கள் மாடுகளுக்கு மேய்ச்சல் வேண்டும்,' என, விரட்டுகின்றனர். நேற்று ஒரு கிராமத்தில், அடித்து விரட்டினர்;தப்பி வந்தோம். எங்களின் ஏழு கன்றுகள், இதுவரை இறந்துள்ளன. இரை இல்லாமல், மாடுகள் அனைத்தும்,
"அடிமாடு' தோற்றத்திற்கு மாறிவிட்டன, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக